கேரளாவில் மசூதியில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமணம் - 10 சவரன் நகை மற்றும் பணமும் பரிசு

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

மசூதியில் இந்து முறைப்படி திருமணம் : கேரளா - தினமணி நாளிதழ்

கேரள மாநிலம் ஆலப்புழாவின் மசூதி ஒன்றில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமண விழா மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்கிறது தினமணியின் செய்தி.

அஞ்சு - சரத் தம்பதியினருக்கு செருவல்லி முஸ்லீம் ஜாமத் மசூதி நிர்வாகிகள் இந்து முறைப்படி விளக்கேற்றி திருமணம் நடத்தி வைத்தனர். மேலும் மசூதி வளாகத்தில் புரோகிதர் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு வருகை தந்த விருந்தினருக்கு சைவ உணவும் பரிமாறப்பட்டது.

ஏழ்மை நிலையில் இருந்த மணப்பெண் அஞ்சுவின் தாயார், திருமணத்திற்கு மசூதி நிர்வாகிகளின் உதவியை நாடியுள்ளார். உடனடியாக ஒப்புக்கொண்டு உதவி செய்ய முன்வந்த மசூதி நிர்வாகிகள் அஞ்சுவிற்கு 10 சவரன் நகை மற்றும் பணத்தையும் பரிசாக வழங்கியுள்ளனர்.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்த இந்த திருமணத்திற்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார் என தினமணி நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

ஷீரடியதில் பந்த் முடிவிக்கு வந்தது ஆனால் பதற்றம் நீடிக்கிறது என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் இந்தியளவில் மிகவும் பிரபலம். சமீபத்தில் மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே சாய் பாபா பிறந்த இடம் பத்ரி என்று ஓர் உரையின்போது பேசினார். மேலும் பத்ரியில் கோயில் கட்ட 100 கோடி ரூபாயை மகாராட்டிர அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் சாய்பாபா பிறந்த இடம் குறித்து மகாராட்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஷீரடி சாய்பாபா கோயில் ஊழியர்கள், வேலை நிறுத்ததிலும் ஈடுப்பட்டனர். ஆனால் இது குறித்து மும்பையில் உத்தவ் தாக்ரே பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று அறிவிப்பு வெளியிட்ட பிறகு, ஷீரடி நகரில் உள்ள ஊழியர்கள் ஞாயிற்றுகிழமை இரவு வேலை நிறுத்தத்தை திருப்ப பெற்றனர்.

சாய் பாபா பிறந்த இடம் குறித்த முதல்வர் உத்தவ் தாக்ரேயின் கருத்து வரவேற்கத்தக்கது என முன்னாள் முதல்வரும் மகாராட்டிர அமைச்சருமான அசோக் சாவன் தெரிவித்துள்ளார்.

சாய்பாபாவின் பிறந்த இடம் குறித்து முதல்வர் சொன்ன கருத்தை திரும்ப பெற வேண்டும் என பா.ஜ.க எம் எல் ஏ ராதாகிருஷ்ண விகே தெரிவித்துள்ளார். ஒரு ஆய்வு நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலை வைத்தும், தவறாக வழி நடத்தும் அரசியல் வாதிகளாலும் முதலைமச்சர் தாக்கரே தவறான முடிவுக்கு வரக்கூடாது என்று தெரிவித்துள்ளார் என்று விவரிக்கிறது அச்செய்தி..

உரிமையாளரை காப்பாற்ற பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள் -தினகரன் நாளிதழ்

கோவை அருகே ஒத்தக்கால்மண்டபம் பூங்காநகர் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது வளர்ப்பு நாய்கள், தன்னை வளர்ப்பவரை காப்பாற்ற பாம்பை கடித்து கொதறின என்கிறது தினகரன் செய்தி.

தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக தனது நண்பருடன் ராமலிங்கம்தோட்டத்திற்கு சென்றுள்ளார். இவர்களுடன் ராமலிங்கம் வளர்த்து வரும் 3 நாய்களும் சென்றுள்ளன. அப்போது அவர்கள் செல்லும் வழியில் சுமார் 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு வந்துள்ளது.

பாம்பை கண்டு அச்சமடைந்த ராமலிங்கமும், அவரது நண்பரும் பின்வாங்கியுள்ளனர். இதைக்கண்ட 3 வளர்ப்பு நாய்களும் கண் இமைக்கும் நேரத்தில் பாம்பின் மீது பாய்ந்தன. பாம்பை சுற்றி வளைத்து மாறி மாறி கடித்து குதறி கொன்றன. இந்த காட்சிகளை ராமலிங்கத்துடன் வந்த நண்பர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார், என தினகரன் நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: