You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கஜேந்திர தாப்பா மகர்: உலகின் மிகச் சிறிய மனிதர் மரணம்
நடமாடக்கூடிய உலகின் மிகச் சிறிய மனிதர் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கஜேந்திர மகர் தனது 27 வயதில் மரணமடைந்தார்.
2010ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றதை தொடர்ந்து உலகம் முழுவதும் பயணம் செய்த அவர், ஐரோப்பா மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
நேபாளத்தின் பக்லுங் மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் உயரம் 67.08 செ.மீ மட்டுமே.
கடந்த சில நாட்களாக நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த கஜேந்திர தாப்பா , கடந்த வெள்ளியன்று உயிரிழந்ததாக ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு தனது 18வது பிறந்த நாளின் போது உலகின் மிகச்சிறிய மனிதர் என கின்னஸ் சாதனை புத்தகத்தால் கஜேந்திர தாப்பா மகர் அங்கீகரிக்கப்பட்டார்.
``நான் என்னை சிறிய மனிதனாக நினைக்கவில்லை. நான் மிகப்பெரிய மனிதன். இதனை நிரூபித்து காட்டவும், எனக்கும், என்னுடைய குடும்பத்திற்கும் நல்ல வீடு ஒன்றை பெறவும் இந்த பட்டம் எனக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்`` என அந்த நிகழ்ச்சியின் போது அவர் பேசியிருந்தார்.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் உயரம் குறைந்த மனிதர் என்ற பட்டியலில், நடமாட முடிந்தவர், நடமாட முடியாதவர் என இரண்டு பிரிவுகளில் பட்டங்கள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் பிலிப்பைன்ஸை சேர்ந்த 59.93 செ.மீ உயரம் கொண்ட ஜன்ரே பாலாவிங் என்பவர் நடமாட முடியாத உலகின் மிகச்சிறிய மனிதர் என அறியப்படுகிறார்.
2012ஆம் ஆண்டு உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற கின்னஸ் பட்டத்தை சக நாட்டவரான சந்திர பஹதுர் டாங்கி (54.6 செ.மீ) என்பவரிடம் கஜேந்திர மகர் இழந்தார்.
ஆனால் 2015 ஆண்டு சந்திர பஹதுர் உயிரிழந்ததை தொடர்ந்து, மீண்டும் அந்த பட்டம் கஜேந்திர மகரிடம் வந்து சேர்ந்தது.
கின்னஸ் புத்தகத்தால் அங்கீகரிக்கப்படும் முன்னர், உள்ளூர் திருவிழாக்களில் தனக்கு அருகில் நின்று புகைப்படம் எடுக்க கட்டணம் வசூலித்து அதைக்கொண்டு வாழ்ந்து வந்தார் கஜேந்திர மகர்.
ஆனால் 2010ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றதை தொடர்ந்து உலகம் முழுவதும் பயணம் செய்த அவர், ஐரோப்பா மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.நேபாள நாட்டின் சுற்றுலா பிரச்சார முகமாகவும் இவர் அறியப்பட்டார்.
``தன்னை சந்திக்கும் அனைவரின் மனதையும் உருக்க கூடியது அவரது புன்னகை`` என கின்னஸ் புத்தகத்தின் ஆசிரியர் கிரெய்க் கிளெண்டே தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: