செளதி அரேபிய படைகளை பிடித்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்: ஏமன் போர் - விரிவான தகவல்கள்

பெரும் எண்ணிக்கையிலான செளதி படைகளைப் பிடித்து வைத்துள்ளதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.

செளதி ஏமன் எல்லையில் நடந்த பெரும் தாக்குதலை அடுத்து ஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து இந்த தகவல் வந்துள்ளது.

செளதி அரேபியா படைகள் சரண்

நஜ்ரான் எனும் செளதி நகரத்தின் அருகே செளதி அரேபிய படைகள் சரண் அடைந்ததாக பிபிசியிடம் பேசிய ஹூதி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான செளதி படைகளை தாங்கள் பிடித்ததாகவும், பலர் கொல்லப்பட்டதாகவும் கூறினார்.

ஆனால், செளதி அரசாங்கம் இதனை உறுதிப்படுத்தவில்லை.

இரு தரப்பிடையே சண்டை தொடங்கியதிலிருந்து, இப்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான் பெரியது என ஹூதி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.

பெரிய அளவில் உயிர்ச்சேதத்தையும், ஆயுதங்களையும் செளதி படைகள் இழந்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

பிடிபட்ட செளதி படைகளின் அணிவகுப்பை ஹீதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்படும் அல் மசிரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

செப்டம்பர் 14ஆம் தேதி செளதியின் அரம்கோ எண்ணெய் வயல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை தாங்கள்தான் நடத்தியதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் கோரினர்.

இந்த தாக்குதலானது உலக எண்ணெய் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த தாக்குதலை இரான்தான் மேற்கொண்டதாக சௌதி, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் குற்றஞ்சாட்டின.

Yemen Civil War - உயிர் பிழைக்க தினந்தோறும் போராடும் மக்கள்

யுத்தப் பின்னணி

ஏமனில் 2015ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபர் மன்சூர் ஹதி மற்றும் அவரது அமைச்சரவை ஏமன் தலைநகரைவிட்டு வெளியேற்றப்பட்டது. இவர்களை வெளியேர்றியவர்கள் ஹூதி கிளர்ச்சியாளர்கள்.

செளதி ஹதியை ஆதரிக்கிறது. இரான் ஹூதி கிளர்ச்சியாளர்களை ஆதரிக்கிறது,

செளதி தலைமையிலான படை தினமும் ஏமன் மீது வான் தாக்குதல் தொடுக்கிறது.

இந்தப் பிரச்சனையின் காரணமாக 2016ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 70,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :