You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாமஸ் குக் சுற்றுலா நிறுவனம் முடங்கியது: 178 வயது கம்பெனியின் 22,000 ஊழியர்களுக்கு நிச்சயமற்ற நிலை
உலகின் மிகப் பழமையான சுற்றுலா சேவை நிறுவனமான 'தாமஸ் குக்'கின் சேவையை தொடரச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட கடைசிநேர முயற்சிகள் பலனளிக்காததால் அதன் செயல்பாடு முடங்கியுள்ளது.
178 ஆண்டுகள் பழமையான தாமஸ் குக் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் உடனடியாக முடிவுக்கு வருவதாக பிரிட்டன் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக உலகம் முழுவதும் இந்நிறுவனத்தின் வாயிலாக சுற்றுலாவுக்கு சென்றுள்ள சுமார் ஆறு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்த நிறுவனத்தின் உதவியோடு வெளிநாடுகளுக்கு சென்றுள்ள பிரிட்டனை சேர்ந்த ஒன்றரை லட்சம் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரும் மிகப் பெரிய பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தற்போது நேர்ந்துள்ள அசாதாரணமான சூழ்நிலை 'ஆழ்ந்த வருத்தத்தை' தருவதாக தாமஸ் குக் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான பீட்டர் ஃபாங்க்ஹௌசர் தெரிவித்துள்ளார்.
தனது நிறுவனத்தின் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், ஆயிரக்கணக்கான ஊழியர்களிடம் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
பிரபல சுற்றுலா சேவை நிறுவனத்தின் முடக்கத்தால் உலகம் முழுவதுமுள்ள அதன் 22,000 ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.
பிரிட்டனின் லீஸ்செஸ்டெர்ஷைர் பகுதியில் 1841ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தாமஸ் குக் என்பவரால் தொடங்கப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ சிறப்பு சேவைகள்
திட்டமிட்டபடி தாமஸ் குக் நிறுவனத்தின் வாயிலாக சுற்றுலா சென்றுள்ள 16,000 பயணிகள் இன்று பிரிட்டனுக்கு திரும்ப வேண்டும். அவர்களது பயணத் திட்டத்தில் இந்த சேவை முடக்கம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்யும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பிபிசியின் செய்தியாளர் டாம் புரிட்ஜ் கூறுகிறார்.
64 வழித்தடங்களில் சிக்குண்டுள்ள சுமார் 14,000 பயணிகளை மீட்பதற்கு 45 விமானங்களை இயக்குவதற்கு பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஈஸிஜெட், விர்ஜின் ஆகிய விமான சேவை நிறுவனங்களின் விமானங்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தாமஸ் குக்கின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
தாமஸ் குக் நிறுவனம் தங்களது வீழ்ச்சியை தடுப்பதற்கு பிரிட்டன் அரசிடம் 250 மில்லியன் பவுண்டுகள் நிதியை கேட்டதாகவும், அதற்கு அரசு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் தெரிகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பிரிட்டனின் போக்குவரத்து செயலாளர் க்ராண்ட் ஷாப்ஸ் பிபிசி நிகழ்ச்சி ஒன்றில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஒருவேளை தாமஸ் குக் நிறுவனத்திற்கு இந்த நிதி தரப்பட்டிருந்தாலும், அதனால் மிகவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே தாக்குபிடித்திருக்க முடியும் என்றும், அதன் பிறகு தற்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே வந்திருக்கும் என்றும் தான் அஞ்சுவதாக அவர் கூறினார்.
மிகப் பெரிய அளவிலான கடன்களும், தவறான வணிக கொள்கைகளுமே தாமஸ் குக் நிறுவனத்தின் முடக்க நிலைக்கான காரணமாக உள்ளதாக க்ராண்ட் கூறினார்.
இந்திய சேவை பாதிக்கப்பட்டுள்ளதா?
தாமஸ் குக் நிறுவனத்தின் இந்திய, சீன, ஜெர்மானிய மற்றும் நார்டிக் துணை நிறுவனங்களின் வர்த்தகம் வழக்கம் போல தொடரும்.
மேற்குறிப்பிட்டுள்ள துணை நிறுவனங்களுக்கும் பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அதன் தாய் நிறுவனத்திற்கும் சட்டரீதியாக நேரடி தொடர்பு இல்லை என்பதால் அவற்றின் வர்த்தக செயல்பாடு உடனடியக பாதிக்கப்படவில்லை.
இருப்பினும், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலுள்ள தாமஸ் குக்கின் துணை நிறுவனங்கள் தங்களது விமான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளுக்கு தாய் நிறுவனத்தையே சார்ந்துள்ளதால், அவற்றின் வர்த்தக நடவடிக்கை பாதிப்படையாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஒருவேளை அந்த முயற்சி பலனளிக்காதபட்சத்தில் கூடுதலாக மூன்றரை முதல் நான்கரை லட்சம் பேர் பாதிக்கப்படும் சூழல் உருவாகக் கூடும்.
பிற செய்திகள்:
- கீழடி நாகரிகம்: தமிழக - கிரேக்க, ரோம், அரபு வணிகத் தொடர்பு குறித்து ஆய்வு செய்ய அரசு முடிவு
- ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு: "வெளிநாட்டுக்கு பணம் கொண்டுபோன வழக்கு இல்லை இது"
- "கீழடியில் உலகத் தர அருங்காட்சியகம்": அமைச்சரை சந்தித்து எம்.பி.க்கள் வலியுறுத்தல்
- HowdyModi: காஷ்மீர், தீவிரவாதம், என்பிஏ - மோதி, டிரம்ப் உரைகளில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்