You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செளதி அரேபிய எண்ணெய் ஆலையில் தாக்குதல்: இரானுக்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட புகைப்படம்
செளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
செளதியில் மீண்டும் எண்ணெய் உற்பத்தி தொடங்கும் வரை அமெரிக்காவின் எண்ணெய் சேமிப்பை வெளியிடுவதாக டிரம்ப் உறுதியளித்த பிறகு விலையில் சிறிது மாறுதல்கள் இருந்தன.
உலகளவில் செளதி அரேபியா மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ஏழு மில்லியன் பேரல்களை அந்நாடு ஏற்றுமதி செய்கிறது.
தாக்குதலுக்கு பிறகு அரம்கோ எண்ணெய் நிறுவனத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் தினமும் 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தயாரிப்பு பாதிக்கப்படும் என செளதியின் ஆற்றல் துறை அமைச்சர் இளவரசர் அப்துலாசிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
இது செளதி அரேபியாவின் மொத்த உற்பத்தியில் பாதியளவாகும்.
அப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றில் தாக்குதல் நடந்துள்ளது.
அப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உலகின் பயன்பாட்டுக்கு தேவையான 7% பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியைச் சுத்திகரிக்கும் வசதி உள்ளது. குராய்ஸ் எண்ணெய் வயலில்தான் உலக அளவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்யில் 1% கிடைக்கிறது.
செளதி அரேபியாவில்தான் உலகிற்குத் தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய் உற்பத்தி ஆகிறது. எனவே இந்த தாக்குதலால் திங்களன்று எண்ணெய் விலையில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
குற்றச்சாட்டும், மறுப்பும்
இரான் ஆதரவு பெற்ற, ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ இரான் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இது ஏமனில் இருந்து நடத்தப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை இரான் மறுக்கிறது.
அமெரிக்கா தங்கள் மீதும் வஞ்சம் வைத்தும் குற்றம் சுமத்துவதாகவும், "இரான் மீது குற்றம் சுமத்துவதால் ஏமனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேரழிவு நின்றுவிடாது," என இரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சரிஃப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இரான்தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்ற தங்களின் கூற்றை நீருபிக்க செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் உளவுத் துறை தரவுகளை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
செளதி அரசு தலைமையில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ராணுவப் படை ஏமன் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இரான் ஆதரவளிக்கிறது.
"முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உலக ஆற்றல் விநியோகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது," என பாம்பேயோ தெரிவித்துள்ளார்.
அதே சமயம் குற்றவாளி யார் என தங்களுக்கு தெரியும் என்றும், ஆனால் இதனை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என செளதி அரேபியாதான் கூற வேண்டும் என்றும் அதற்காக காத்திருப்பதாகவும் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
கடந்த வருடம் இரானின் அணுஆயுத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றை டிரம்ப் நிராகரித்து அந்நாட்டின் மீதான தடையை நீடித்ததால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.
யார் இந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்?
செளதி அரேபியாவுக்குள் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்றும், "செளதி அரசாங்கத்தில் உள்ள மரியாதைக்குரிய மனிதர்களின் உதவியுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது," என்று ஹூதி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இரான் அரசின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் அரசுக்கும், செளதி தலைமையிலான கூட்டுப்படைக்கும் எதிராகச் சண்டையிட்டு வருகின்றனர்.
ஏமன் அதிபர் அப்த்ராபா மன்சூர் ஹதி ஹூதி கிளர்ச்சியாளர்களால் தலைநகர் சனாவுக்கு தப்பிச் செல்ல நேர்ந்த 2015ஆம் ஆண்டிலிருந்து அங்குப் போர் நடைபெற்று வருகிறது.
செளதி அரசு ஏமன் அதிபருக்கு ஆதரவளிக்கிறது. மேலும் அந்த பிராந்திய நாடுகளுடன் சேர்ந்து கூட்டணிப் படைக்குத் தலைமை ஏற்று ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.
பிற செய்திகள்:
- பிக்பாஸ்: ‘பொதுத் தேர்வால் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பார்கள்’ - குரல் கொடுத்த கமல்ஹாசன்
- 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: ’மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்’
- சென்னை மாமல்லபுரம் மீனவ குப்பம் டூ ஆஸ்கர் - 9 வயது சிறுமியின் சாதனை கதை
- 96 பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா நேர்காணல்: "மயானத்தில்தான் எனது பாடல் வரிகள் பிறக்கும்"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்