பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனத்துக்கு கோமாளியை அழைத்து சென்ற நபர் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், JOSH THOMPSON
தன்னை பணி நீக்கம் செய்யவிருக்கும் அலுவலக சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு வந்தபோது அலுவலகத்துக்கு நகைச்சுவை கோமாளி ஒருவரை அழைத்து சென்று ஜோஷ் தாம்சன் என்ற நபர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
நியூசிலாந்தின் உள்ள நிறுவனம் ஒன்றில் காப்பி ரைட்டராக (விளம்பரங்களுக்கு உரை எழுதுபவர்) பணிபுரிகிறார் ஜோஷ் தாம்சம். அந்நாட்டில் பணியாளர்களை குறைக்க விரும்பினால் அவர்களை பணியிலிருந்து நீக்குவதற்கு முன், பணியாளர் மற்றும் அவர் சாந்தவருடன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்த வேண்டும். இது அந்நாட்டில் சட்டப்பூர்வமான ஒன்று.
இந்த சந்திப்பிற்கு பொதுவாக உறவினர்களையோ, நண்பர்களையோ அல்லது தொழிற்சங்க தலைவரையோ அழைத்து செல்வது வழக்கம்.
ஆனால் ஜோஷ் தாம்சன் தொழிற்முறை கோமாளி ஒருவரை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.
"எனக்கு மின்னஞ்சல் வந்தவுடன் அது பணிநீக்கம் குறித்ததாகதான் இருக்கும் என்று எனக்கு தெரியும். எனவே நான் அந்த சூழலை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன்." என்கிறார் ஜோஷ் தாம்சன்.
கோமாளி ஜோ, சந்திப்பு நடைபெறும் போது பலூன்களில் உருவங்களை செய்தும், நகைச்சுவையாக பல பாவனைகளை செய்தும் பேச்சுக்கேற்ப செயலாற்றினார்.
ஒரு கட்டத்தில் ஜோஷ் தாம்சனுக்கு வேலை போய்விட்டது என்றும் கூறும்போது நாடகத்தின் கடைசி காட்சிப்போல் சோகமாக முக பாவனைகளை மாற்றிக் கொண்டார் கோமாளி ஜோ.

ஆந்திரப் பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து

பட மூலாதாரம், ANI
ஆந்திரப் பிரதேச மாநிலம் கோதாவரி ஆற்றில் 61 பேருடன் சென்றுகொண்டிருந்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணம் பகுதியிலுள்ள கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு ஒன்றில் 61 பேர் பயணம் செய்தனர். அப்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த தலா 30 பேர் இரண்டு அணிகள் விரைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்து நடந்த படகில் 11 ஊழியர்கள் உள்பட 61 பேர் பயணித்தனர். ஆற்றில் மூழ்கியவர்களில் இதுவரை 23 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்: பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் கண்ணோட்டங்கள்

பட மூலாதாரம், EPA
தனது நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியல்சாசனத்தின் 370வது பிரிவை ரத்து செய்வதற்கு இந்தியா எடுத்த முடிவு குறித்து, நாட்டில் மாறுபட்ட அரசியல் கருத்துகள் நிலவுகின்றன.
இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பின் எதிரெதிர் தரப்பில் இருந்து இரண்டு இந்திய அரசியல்வாதிகளை - வைஜயந்த் ஜே பாண்டா மற்றும் சசி தரூர் ஆகியோரை- இந்தியாவின் முடிவால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் பற்றி கருத்து கூறுமாறு தனித்தனியே பிபிசி கேட்டுக்கொண்டது. கண்ணோட்டங்கள் தனித்தனியாக பெறப்பட்டவை. ஒருவருக்கு பதில் அளிக்கும் வகையில் இன்னொருவர் கூறியது அல்ல.
மேலும் படிக்க: பிரிவினைக்கு பிந்தைய காஷ்மீர் - இரு கட்சிகள், இரு பார்வைகள்

சென்னை மாமல்லபுரம் மீனவ குப்பம் டூ ஆஸ்கர்

பத்து அடி தூரத்தில்தான் கடல், அங்கு சிறியதாக அமைக்கப்பட்டிருக்கும் ஸ்கேட் போர்டிங் தளத்தில் சிரித்த முகத்துடன் உற்சாகமாகப் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் கமலி.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள மீனவக் குடியிருப்பைச் சேர்ந்தவர் கமலி.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் இவர் அந்த பகுதியில் ஸ்கேட் போர்டிங்கில் ஈடுபட்டிருக்கும் ஒரே பெண் குழந்தை.
நாம் கமலியிடம் சென்று பேசியபோது ஆர்வத்துடனும், சற்றும் குழந்தைத்தனம் மாறாமலும் பேசினார்.
தனது ஐந்து வயதிலிருந்து ஸ்கேடிங் போர்டிங்கில் ஈடுபட்டு வரும் கமலி தனக்கு சர்ஃபிங் மற்றும் ரன்னிங்கிலும் ஈடுபாடு என்றார்.
ஸ்கேட் போர்டிங்கில் இதுவரை எத்தனை பரிசுகளை வாங்கியிருப்பாய் என்று கேட்டதற்கு விரல்களை எண்ணி முடித்துவிட்டு, "நிறைய வாங்கியிருக்கிறேன் ஆனால் எத்தனை என தெரியாது." என அதே குழந்தைத்தனம் மாறாமல் சொல்கிறார்.

"மயானத்தில்தான் எனது பாடல் வரிகள் பிறக்கும்"

96 திரைப்படம் பாடல்கள் வெளிவந்து ஓராண்டு ஆகிவிட்டது. அந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைவரையும் ஈர்த்தது. பலர் அந்த பாடல் வரிகளோடு தங்கள் வாழ்வை ஒப்பிட்டு கொண்டார்கள். அந்த வரிகளின் ஊடாக தங்கள் கடந்த காலத்தை அசைப்போட்டார்கள். நிறைவேறாத காதலை இன்னும் நேசித்தார்கள். இப்படி பலரை அசைத்து பார்த்த, கண்ணீர் சிந்த வைத்த பாடல் வரிகளின் சொந்தக்காரரான கார்த்திக் நேத்தாவை சந்தித்தோம். உரையாடினோம். அந்த உரையாடலின் தொகுப்பு இங்கே,
கே: லைஃப் ஆஃப் ராம் வந்து ஓராண்டு ஆகிவிட்டது, லைஃப் ஆஃப் கார்த்திக் நேத்தா...
ப: கார்த்திக் நேத்தா சேலம் மாவட்டத்தில் பிறந்த பையன்.ஆங்கில வழியில் படித்து ஆங்கிலம் பிடிக்காமல் தமிழை படிக்க வந்த தமிழன். பதின்ம வயதில் தமிழைக் காத்திரமாக வாசிக்க ஆரம்பித்து இப்போது திரைத்துறையில் இருக்கிறேன். கவிதை எழுதுகிறேன். சுருங்கச் சொல்ல வேண்டுமானால் மொழி வழியாக என்னையும், ஒட்டுமொத்த உலகத்தின் ஆத்மாவையும், தத்துவத்தையும் புரிந்துகொள்ள முயற்சி செய்கிற ஒரு மொழிஞன்.
மேலும் படிக்க:96 பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா நேர்காணல்: "மயானத்தில்தான் எனது பாடல் வரிகள் பிறக்கும்"

Narendra Modi 100 நாள் ஆட்சி: தமிழக மக்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












