வடகொரியா ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக ஏவுகணை பரிசோதனை மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், EUROPEAN PHOTOPRESS AGENCY
குறைந்த தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை ஒன்றை இரண்டுமுறை வடகொரியா பரிசோதித்துள்ளதாகவும், கடந்த ஒரு வார காலத்தில் மூன்றாவது முறையாக இதுபோன்ற பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தென்கொரிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியிலுள்ள ஓரிடத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இம்மாதம் அமெரிக்க மற்றும் தென்கொரிய ராணுவத்தினர் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்வினையாக இது மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பட மூலாதாரம், AFP
இந்நிலையில், வடகொரியா, அமெரிக்காவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு முயற்சிக்க வேண்டுமென்று பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமை ரத்து

பட மூலாதாரம், GOTABAYA RAJAPAKSA'S FACEBOOK PAGE
இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டமைக்கான ஆவணம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கோத்தாபயவிடம் இலங்கை மற்றும் அமெரிக்க குடியுரிமை இருந்தது.
இலங்கையில் மாத்தறை மாவட்டத்தில் 1949ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20ஆம் தேதி பிறந்து, இலங்கை குடியுரிமையை கொண்ட கோத்தாபய ராஜபக்ஷவிற்கு, 2003ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி அமெரிக்க குடியுரிமை கிடைக்கப்பெற்றது.
விரிவாக படிக்க:கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமை ரத்து

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் தூத்துக்குடி அருகே கடலில் கைது

பட மூலாதாரம், HANDOUT
மாலத்தீவில் இருந்து வந்த இழுவைக் கப்பலில் மாறுவேடத்தில் வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமத் அதிப் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியில் இருந்து கடந்த 11 ஆம் தேதி மாலத் தீவிற்கு கருங்கல் ஏற்றி சென்ற விர்கோ 9 என்ற இழுவைப் படகில் இந்தோனீசியாவை சேர்ந்த 8 ஊழியர்களும், ஓர் இந்தியரும் சென்றுள்ளனர்.கடந்த 27 ஆம் தேதி சரக்கை இறக்கிவிட்டு தூத்துக்குடி நோக்கி வந்த இந்த இழுவைப் படகில் பத்தாவதாக ஒரு நபர் வந்துள்ளார்.

கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட மூன்று வயது குழந்தை

பட மூலாதாரம், Getty Images
ஜூலை 25. இரவு 11.30 மணி. சல்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது மூன்று வயது குழந்தையோடு டாட்டா நகர் (ஜாம்ஷெட்பூரில்) ரயில் நிலையத்தில் தூங்கி கொண்டிருந்தார்.
திடீரென கறுப்பு சட்டை அணிந்த ஒருவரும், வெள்ளை சட்டை அணிந்த இன்னொருவரும் இந்த மூன்று வயது குழந்தையை தூக்கி கொண்டு இன்னொரு வாசல் வழியாக வெளியேறினர்.
பின்னர், தலை துண்டிக்கப்பட்ட இந்த குழந்தையின் உடல்தான் கண்டெடுக்கப்பட்டது.
கூட்டு பாலியல் வல்லுறவுக்கு பின்னர், இந்த குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வாகனம் ஓட்டுபவரா நீங்கள் - புதிய அபராத தொகைகள் எவ்வளவு தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் மோட்டார் வாகன சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதத்தை விதிப்பதன் மூலம் சாலைப் போக்குவரத்தை பாதுகாப்பானதாக மாற்றலாம் என்பதே இதன் குறிக்கோள்.
நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயங்களை விளக்குகிறது இந்த கட்டுரை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












