You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிராகன்கள் வசிக்கும் தீவு: ஓர் அரிய உயிரினத்தை காக்கும் முயற்சி மற்றும் பிற செய்திகள்
ரம்பத்தை போன்ற கூர்மையான பற்களை உடைய விஷத்தன்மை மிக்க கொமோடா டிராகன்களை காக்கும் முயற்சியில் இந்தோனீசிய ஆளுநர் இறங்கி உள்ளார்.
அதாவது, இப்போது கொமொடா டிராகன் வசிக்கும் தீவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிவதால் அந்தத் தீவின் சூழலியல் கெடுகிறது, அதனால் அந்த கொமோடா டிராகன்கள் வசிக்கும் கொமோடா தீவை அந்த டிராகன்களிடமே விட்டுவிடத் திட்டமிட்டுள்ளனர். அதாவது, சுற்றுலாப் பயணிகளை வருகைக்கு ஓரளவேனும் தடை விதிக்க திட்டமிட்டுள்ளனர்.
அந்தப் பகுதியின் ஆளுநர் பங்டிலு லைஸ்கொடாட், "அங்கு மனித உரிமைகளுக்கு வேலை இல்லை. விலங்கு உரிமை மட்டும்தான்" என்கிறார். ஆளுநரின் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இந்தோனீஷியா சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது.
டி.ராஜா: பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக விவசாயத் தொழிலாளரின் மகன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டி. ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 95 ஆண்டுகால வரலாற்றில் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமைப் பதவிக்கு வருவது இதுவே முதல் முறை. அக்கட்சியின் பொதுச் செயலராக இருந்த சுதாகர் ரெட்டியின் பதவிக்காலம் இன்னும் இரு ஆண்டுகள் இருந்தாலும் உடல்நிலையின் காரணமாக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிவிரும்புவதாகத் தெரிவித்தார். இதையடுத்து, ஜூலை 18-19ஆம் தேதியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலகக் கூட்டத்தில் டி. ராஜாவை அடுத்த பொதுச் செயலராகத் தேர்வுசெய்வதென ஒரு மனதாக முடிவுசெய்யப்பட்டது. கட்சியின் தேசிய கவுன்சில் ஜூலை 20ல் இதற்கு ஒப்புதல் அளித்தது. சுதாகர் ரெட்டி 2012ஆம் ஆண்டிலிருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துவந்தார்.
விரிவாகப் படிக்க:பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக விவசாயத் தொழிலாளரின் மகன்
அப்போலோ 11: கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய ஒரே பெண் பொறியாளர்
நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கில் காலின்ஸ் மற்றும் பஸ் ஆல்ட்ரீன் ஆகியோரின் மறக்கமுடியாத, வெற்றிகரமான நிலாப் பயணம் நடந்தேரியதன் 50ஆவது ஆண்டு கொண்டாட்டம் உலகம் முழுவதும் நடந்துவருகிறது. 1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி இந்த குழு நிலாவிற்கு தங்களின் பயணத்தை மேற்கொண்டது. இந்த மூவரின் பயணத்திற்காக அமெரிக்காவின் ஹுஸ்டனில் இருந்த நாஸாவின் கட்டுப்பாட்டு அறையில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் அயராது பணியாற்றினர். அந்த கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய ஒரே பெண்மணி ஜோஆன் மார்கன். இவருக்கு தற்போது 78 வயது.
விரிவாகப் படிக்க: அப்போலோ 11: கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய ஒரே பெண் பொறியாளர்
போர்ச்சுகலில் பரவும் காட்டுத்தீ
மத்திய போர்ச்சுகலில் பல இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பலர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் தீயணைப்பு பணிகளில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போர்ச்சுகலின் மத்திய பகுதியில் உள்ள காஸ்டெலோ பிரான்கோ என்று அழைக்கப்படும் அந்த மலை பிராந்தியத்தில் மூன்று இடங்களில் தீ ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்களும், விமானங்களும் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
விரிவாகப் படிக்க:போர்ச்சுகலில் பரவும் காட்டுத்தீ: நூற்றுக்கணக்கான வாகனங்கள் கொண்டு தீயணைக்கும் முயற்சி
இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்ட செபஸ்டியன் தேவாலயம் மீண்டும் திறப்பு
இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு - கட்டுவாபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம் மூன்று மாதங்களுக்கு பின்னர் இன்று திறந்து வைக்கப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று மாதங்கள் ஆகின்ற நிலையிலேயே இந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்