You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரான்ஸில் வரலாறு காணாத அளவு வெப்பநிலை பதிவு
மேற்கு ஐரோப்பாவில் வெப்ப அலைகள் தொடர்ந்து தாக்கி வரும் சூழலில், வெப்பநிலை பதிவுகள் தொடங்கிய காலத்தில் இருந்து, முதல்முறையாக பிரான்ஸில் மிக அதிக அளவு வெப்பநிலை பதிவாகி உள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு, மிக அதிகபட்சமாக இன்று பிரான்ஸில் 45.8 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
16 ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது கடந்த 2003ஆம் ஆண்டில், இங்கு பதிவான 44.1 டிகிரி செல்ஸியஸே இதுவரை அதிக வெப்பநிலை பதிவாக இருந்து வந்தது.
பிரான்ஸின் சுகாதார அமைச்சரான ஆக்னஸ் பூஷின் இதுகுறித்து கூறுகையில், "அதிக அளவு வெப்ப அலையால் அனைவரும் ஆபத்தில் உள்ளோம்'' என்று குறிப்பிட்டார்.
இருவர் உயிரிழப்பு
இதனிடையே வயல்வெளிகளில் பணிபுரிந்த 17 வயது இளைஞர் உள்பட இரண்டு பேர் ஸ்பெயினில் கடும் வெப்ப தாக்குதலால் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்ஸிலும் முன்னெப்போதும் இல்லாத வெப்பநிலையை அதன் பல்வேறு நகரங்களும் எதிர்கொண்டுள்ளன. வடக்கு ஆஃப்ரிக்காவில் இருந்து வரும் அனல் காற்றே இந்த நிலைமைக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பருவநிலை மாற்றத்தின் தாக்கமா?
தற்போது பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவும் அதீத வெப்பநிலைக்கும், பருவநிலை மாற்றத்துக்கும் தொடர்பிருக்குமோ என்ற அச்சம் பலரால் எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச வானிலை அமைப்பை சேர்ந்த பேச்சாளரான கிளார் இதுகுறித்து கூறுகையில், "தற்போதைய அதிகபட்ச வெப்பநிலைக்கும், பருவநிலை மாற்றத்துக்கும் நேரடி தொடர்பில்லாமல் இருக்கலாம்" என்று கூறினார்.
கடந்த காலத்தை நோக்கும்போது, வெப்ப அலைகளின் தாக்கம் இயற்கையாக ஏற்படும் ஒன்றாக இருந்தாலும், பருவநிலை மாற்றத்தின் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்