You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரசவம் நடந்த 30 நிமிடங்களில் மருத்துவமனையில் தேர்வு எழுதிய பெண் மற்றும் பிற செய்திகள்
எத்தியோப்பியாவில் உள்ள ஓர் ஆண் குழந்தையை பிரசவித்த அரை மணி நேரத்துக்கு பின் மருத்துவமனை படுக்கையிலேயே தனது தேர்வுகளை எழுதியுள்ளார்.
21 வயதாகும் அல்மாஸ் டெரீஸ் மேற்கு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர். கர்ப்பிணியாக இருந்தபோது பிரசவம் நடப்பதற்கு முன்னரே தேர்வுகளை முடித்து விட தீர்மானித்திருந்தார். ஆனால் ரம்ஜான் காரணமாக அவரது உயர்நிலைப் பள்ளித் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.
திங்கள் கிழமையன்று அவருக்கு தேர்வுகள் நடப்பதற்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தையைப் பெற்றெடுத்தப் பின் அவர் தனது தேர்வுகளை எழுதினர்.
''கர்ப்பிணியாக இருக்கும்போது படிப்பது ஒன்றும் பிரச்சனையாக இருக்கவில்லை. அடுத்த ஆண்டு வரை நான் தேர்ச்சி பெற காத்திருக்க விரும்பவில்லை'' என்றார்.
ஆங்கிலம், அம்ஹாரிக், கணிதம் உள்ளிட்ட தேர்வுகளை திங்கள் கிழமையன்று மருத்துவமனையில் எழுதினர். அடுத்த இரண்டு நாள்களில் நடக்கும் தேர்வுகளை அவர் தேர்வு மையத்துக்குச் சென்று எழுதவுள்ளார்.
''எனக்கு பிரசவம் ஒன்றும் அவ்வளவு கடினமான இருக்கவில்லை ஆகையால் நான் அவசரமாக பரீட்சை எழுத உட்கார்ந்தேன்'' என பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.
மருத்துவமனையில் தனது மனைவியை தேர்வு எழுதுவதற்கு அவர் படித்த பள்ளியை இணங்கச் செய்ததாக அல்மாசின் கணவர் தடீஸ் துலு தெரிவித்தார்.
எத்தியோப்பியாவில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை இடையில் கைவிட்டுவிட்டு பின்னர் படிப்பை முடிப்பது அங்குள்ள பள்ளி மாணவிகளிடம் பரவலாக காணப்படும் விஷயம்.
அல்மாஸ் தற்போது கல்லூரியில் சேர்வதற்கான இரண்டு வருட படிப்பை முடிக்க வேண்டும் என விரும்புகிறார்.
பிபிசியிடம் பேசிய அல்மாஸ், தேர்வுகளை சிறப்பாக எழுதியிருப்பதாகவும் தனது ஆண் குழந்தை நன்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவில் பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறதா?
வட கொரியாவில் பொது இடத்தில் தூக்கிலிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட 318 இடங்களை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக கூறுகிறது தென் கொரியாவில் உள்ள ஓர் அரசு சாரா அமைப்பு.
இடைநிலை நீதி பணிக்குழு எனும் அரசுசாரா அமைப்பு வட கொரியாவைவிட்டு வெளியேறிய 610 பேரை சந்தித்து, உரையாடி இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது.
மாட்டை திருடியவர்கள் முதல் தென் கொரிய தொலைக்காட்சியை பார்த்ததவர்கள் வரை பல்வேறு காரணங்களுக்காக கடந்த பல தசாப்தங்களாக கொல்லப்பட்டவர்கள் குறித்து தகவல்களை இந்த அமைப்பு சேகரித்துள்ளது.
விரிவாக படிக்க - வட கொரியா கொலை களம்: பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறதா?
'கிரிக்கெட்' - உலகை இணைக்கும் ஒரு சொல்
"கிரிக்கெட் உலகக்கோப்பை மிகவும் கோலாகலமான திருவிழா. அதை எப்படி தவற விட முடியும்? இதற்காக நாங்கள் ஒவ்வொருமுறையும் பணத்தை திட்டமிட்டு சேமிப்போம். ஆஸ்திரேலியாவில் நடந்த, கடந்த உலகக்கோப்பைக்கு சென்ற நாங்கள் தற்போது பிரிட்டனுக்கு வந்துள்ளோம்" என்று அபாங் பிபிசி தமிழிடம் கூறியபோது அவரது கண்கள் பிரகாசமாக மாறுவதுடன், ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறது.
இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு அங்குள்ள பல பகுதிகளிலும் பயணித்து பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களை சந்தித்துள்ளார் பிபிசி தமிழின் செய்தியாளர் சிவக்குமார் உலகநாதன்.
அமெரிக்காவிலிருந்தும் சிங்கப்பூரில் இருந்தும் கிரிக்கெட் பார்ப்பதற்காகவே வந்திருக்கும் தமிழர்கள் என்ன சொல்கிறாரார்கள்? அவர்களை பிரிட்டனுக்கு வரத் தூண்டியது எது என்பதை விளக்கமாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார் ?
ராஜராஜன் சோழன் காலத்தில் தலித் என்று ஒரு பிரிவு இருந்தது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான மே.து.ராசுகுமார்.
சாதி ரீதியான ஒடுக்கு முறைகள், நிலப் பறிப்பு என ராஜராஜ சோழனின் காலம் இருண்டகாலமாக இருந்தது என திரைப்பட இயக்குநர் ரஞ்சித் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசி இருந்தார்.
குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகம், நில உரிமையை இழந்தது ராஜராஜன் ஆட்சி காலத்தில்தான் என ரஞ்சித் குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக வரலாற்றாசிரியர் மே.து.ராசுகுமார் அவர்களிடம் பேசினோம்.
நடிகர் சங்க தேர்தல் - தமிழக அரசு, ரஜினி, கமல் ஆதரவு யாருக்கு?
எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ், ராஜேந்திரன், வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன் போன்ற ஆளுமைகள் நிர்வாகிகளாக இருந்த பெருமைக்கு உரியது தென்னிந்திய நடிகர் சங்கம். அந்த நடிகர் சங்கத்துக்கு வரும் 23ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
நடிகர் சங்க கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 50 சதவிதம் பணி முடியும் தருவாயில் தற்போதைய நிர்வாக குழுவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது.
நாசர் தலைமையிலான நிர்வாகக் குழு நீதிமன்றத்தில் சட்டப்படி 6 மாத கால நீட்டிப்பு பெற்றது. நடிகர் சங்க கட்டடத்தின் 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு, மீதி கட்டட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலுடன் நெருக்கமாக இருந்து வந்த செயற்குழு உறுப்பினர்களான நடிகர்கள் உதயா, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் தங்களுடைய படங்கள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்ட போது தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்தும் விஷால் எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறி விஷால் அணியில் இருந்து பிரிந்து வந்தனர். பிரிந்து வந்த இவர்கள் தேர்தலில் விஷாலை எதிர்த்து போட்டியிட போவதாக தொடர்ந்து கூறி வந்தனர். விஷாலுக்கு எதிரானவர்களை ஒருங்கிணைக்கும் பணியையும் செய்துவந்தனர்.
விரிவாக படிக்க - நடிகர் சங்க தேர்தல் - தமிழக அரசு, ரஜினி, கமல் ஆதரவு யாருக்கு?
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்