You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கத்தோலிக்க திருச்சபையின் பாகுபாட்டிற்கு மன்னிப்பு கேட்டார் போப் பிரான்சிஸ் மற்றும் பிற செய்திகள்
ருமேனியாவில் பயணம் மேற்கொண்ட போப் பிரான்சிஸ் கத்தோலிக்க திருச்சபையின் சார்பாக ரோமா மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ருமேனியாவில் பயணம் மேற்கொண்ட கடைசி நாளில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், 'வரலாற்றில் பாகுபாட்டோடும், தவறாகவும், சந்தேகத்துடன் நடத்திய தருணங்களுக்காக' மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார் போப் பிரான்சிஸ்.
பல நூற்றாண்டுகளாக ரோமா மக்கள் ஐரோப்பாவில் சித்ரவதைகளை அனுபவித்து வந்துள்ளனர்.
யூத இன படுகொலையின்போது, லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக நம்ப்படுகிறது.
இப்போது ரோமா மக்கள் ஐரோப்பாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வாழ்கின்றனர். ருமேனியாவின் மொத்த மக்கள்தொகையில் இவர்கள் 10 சதவீதமாகும்.
தங்கள் மீது காட்டப்படும் பாகுபாடு காரணமாக வேலை கிடைக்காமல் வாழ்வதற்கு போராடி வருவதாக முறையிடும் ரோமா மக்களில் பலர் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.
"திருச்சபையின் சார்பாகவும், கடவுளின் சார்பாகவும் நான் மன்னிப்பு கேட்கிறேன். நான் உங்களின் மன்னிப்பை வேண்டுகிறேன்" என்று போப் பிரான்சிஸ் ருமேனியாவின் மத்தியில் அமைந்துள்ள பலாஜ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் கூறினார்.
"மக்களை அலட்சியமாக நடத்துவது தவறான அபிப்ராயத்தை உருவாக்குகிறது. கோபத்தையும், மனவருத்தத்தையும் வளர்க்கிறது" என்று போப் பிரான்சிஸ் கூறினார்.
ருமேனியாவின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான ரோமா இனத்தை சேர்ந்த ஒருவரான தமியான் டிராக்ஹிசி போப் தெரிவித்த மன்னிப்பு பற்றி கருத்து தெரிவிக்கையில், "எனக்கும், எனது மக்களுக்கும் இதுவொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். இந்த செய்தி எமது மக்களுக்கு எதிராக ஐரோப்பிய மக்களின் அணுகுமுறையை மாற்றும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்திய முஸ்லிம் வாக்காளர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனரா?
2019 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெற்றதுபோல, அமோக வெற்றியை ஒரு கட்சி பதிவு செய்கிறபோது, வெற்றிபெற்ற தரப்புக்கு எல்லாம் சாதகமாக அமைந்தது என்றும், தோல்வியடைந்த தரப்புக்கு அனைத்தும் இழப்பாகி விட்டது என்றும் நம்பக்கூடிய நிலை உள்ளது.
தேசிய அளவில் பாஜக இத்தகைய பெரிய வெற்றியை பெற்றுள்ளதால், இந்த நம்பிக்கை வலுவாகியுள்ளது. இதன் காரணமாக, உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைத்திருந்தாலும், இந்த மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளார்கள் என்கிற நம்பிக்கை ஆழமாகியுள்ளது.
செய்தியை வாசிக்க: பாஜகவின் தேர்தல் வெற்றியில் இந்திய முஸ்லிம்களின் பங்கு
குறைப்பிரசவத்தில் பிறந்த உலகிலேயே எடை குறைவான குழந்தையின் இன்றைய நிலை தெரியுமா?
உலகின் மிகக் குறைந்த எடை கொண்ட குழந்தை என்று நம்பப்படும் குழந்தை ஒன்று, அமெரிக்க மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்றுள்ளது. குறைப்பிரசவத்தில் பிறந்தபோது இக்குழந்தையின் எடை 245 கிராம் மட்டுமே.
23 வாரங்கள் மூன்று நாட்கள் கருவாக இருந்தபோது, 2018ஆம் ஆண்டு டிசம்பரில் பிறந்த இக்குழந்தை ஒரு பெரிய ஆப்பிள் பழத்தின் எடையை கொண்டிருந்தது. அதன் பெயர் சேபி.
செய்தியை வாசிக்க: ஓர் ஆப்பிளின் எடையில் பிறந்த குழந்தை உயிர் தப்பிய கதை
மது பழக்கத்தைக் குறைக்க உகாண்டா அரசு புதிய முயற்சி
பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி உகாண்டா நாட்டு அதிகாரிகள் பாக்கெட் சாராயத்துக்கு தடை விதித்துள்ளனர்.
45% அளவுக்கு மதுசாரம் (ஆல்கஹால்) இருக்கும் இந்த மதுபானங்கள் வருவாய் குறைவாக உள்ளவர்களால் அதிகமாக உட்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த பாக்கெட் சாராயம் பள்ளி மாணவர்கள்கூட வாங்கி அருந்தும் சூழல் இருந்ததாக உகாண்டா வர்த்தகம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமெலியா க்யம்பாதே பிபிசியிடம் தெரிவித்தார்.
செய்தியை வாசிக்க: மது பழக்கத்தைக் குறைக்க உகாண்டா அரசு புதிய முயற்சி
நாஜி ஜெர்மனியில் கருப்பினத்தவரின் வாழ்வு எப்படி இருந்தது?
நாஜி ஜெர்மனியில் கருப்பின பள்ளி மாணவி ஒருவரின் பழைய புகைப்படம் ஒன்றை திரைப்பட இயக்குநர் அம்ம அசன்டே தற்செயலாகப் பார்த்தார்.
வெள்ளையர் இனத்தைச் சேர்ந்த வகுப்புத் தோழர்கள் நேராக காமிராவை பார்த்தபடி நின்றிருக்க, அவர்களுடன் நின்றிருக்கும் கருப்பின மாணவி, குழப்பத்துடன் பக்கவாட்டில் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
செய்தியை வாசிக்க: நாஜி ஜெர்மனியில் கருப்பினத்தவரின் வாழ்வு எப்படி இருந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்