You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீரவ் மோதிக்கு பிணை வழங்க லண்டன் நீதிமன்றம் மறுப்பு
இந்தியாவில் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்துக்கு தப்பிச்சென்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி லண்டனில் கைது செய்யப்பட்ட வைர வியாபாரி நீரவ் மோதியை பிணையில் விடுவிப்பதற்கு லண்டன் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், கடந்த 20ஆம் தேதி லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோதி மீண்டும் காவலில் வைக்கப்படுவார் என்று தெரிகிறது.
லண்டனின் வெஸ்ட் மினிஸ்டர் பகுதியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது பேசிய நீரவ் மோதி தரப்பு வழக்கறிஞரான கிளார் மோண்ட்கோமரி, "2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நீரவ் மோதி லண்டனில் வசித்து வருகிறார். நீரவ் மோதியை நாடு கடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது கூட, அவர் எங்கும் ஓடி ஒளியவில்லை. எனவே, அவருக்கு பிணை வழங்க வேண்டும்" என்று அவர் வாதாடினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய, இந்தியாவின் தரப்பில் இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞரான டோபி காட்மன், "நீரவ் மோதி இந்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு சரிவர ஒத்துழைப்பு வழங்கவில்லை. மேலும், இந்த சூழ்நிலையில் அவரை பிணையில் விடுவித்தால், அவர் தப்பி செல்வதுடன், தனது செல்வாக்கை பயன்படுத்தி சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை அழிக்கக் கூடிய ஆபத்து உள்ளது. ஒருவேளை நீரவ் மோதிக்கு பிணை வழங்கப்பட்டால், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அவரை பிடித்து வைப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.
வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 26 அன்று நடக்கவுள்ளது. நீரவ் மோதி அதில் காணொளிக் காட்சி மூலம் கலந்துகொள்வார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி கூறிய குற்றச்சாட்டுகள்
சுமார் 11 ஆயிரத்து 360 கோடி ரூபாய் அளவுக்கு தங்கள் வங்கியில் நிதி மோசடி மற்றும் அங்கீகரிக்கப்படாத நிதி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, கடந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது பஞ்சாப் நேஷனல் வங்கி.
மும்பை பிராடி ஹவுஸில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை சட்ட விரோதமாக ஹாங்காங்கில் உள்ள இரு இந்திய வங்கிகளான ஆக்சிஸ் மற்றும் அலகாபாத் வங்கிகள் மூலம் குறிப்பிட்ட சில நபர்கள் நடத்தி வந்த நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்க அதிகாரம் கொடுத்துள்ளது.
நிறுவனங்களின் பங்குதாரர்களான நீரவ் மோதி, நிஷால் மோதி, அமி நீரவ் மோதி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோர் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும், மோசடிக்கு உதவியதாக வங்கி ஊழியர்கள் கோகுல்நாத் ஷெட்டி மற்றும் மனோஜ் ஹணுமந்த் காரத் ஆகியோர் மீதும் வழக்கு பதிய வேண்டும் என்றும் சிபிஐயிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி கேட்டு கொண்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி குறித்த செய்தி வெளியான நிலையில் பங்குச்சந்தையில் வங்கி சார்ந்த பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கு மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் சரிவை சந்தித்தது.
இந்த மோசடியில் தொடர்புடைய 10 வங்கி ஊழியர்களை பஞ்சாப் நேஷனல் வங்கி இடைநீக்கம் செய்துள்ளது. நீரவ் மோதி மற்றும் பிற குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை நிதி மோசடி வழக்கு பதிந்துள்ளது. நிரவ் மோதியின் அலுவலகம் மற்றும் கடைகளில் அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தப்பட்டது.
சதி மற்றும் மோசடி பிரிவுகளின் கீழ் வழக்கு
நீரவ் மோதி, எமி, நிஷால் மற்றும் மெஹுல் சோக்ஸி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 280 கோடி இழப்பு நேரிட காரணமாக இருந்ததாக மத்திய புலனாய்வு முகமை சி.பி.ஐ கூறுவதாக, பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நால்வரும் சதி திட்டம் தீட்டி வங்கி அதிகாரிகளிடம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. டயமண்ட் ஆர்.யூ.எஸ், சோலார் எக்ஸ்போர்ட், ஸ்டெல்லர் டைமண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களில் இந்த நால்வரும் பங்குதாரர்கள்.
இவர்கள் நால்வருக்கும் எதிராக இந்திய குற்றவியல் சட்டத்தின் குற்றச் சதி மற்றும் மோசடி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, ஊழல் தடுப்புச் சட்ட விதிகளின் கீழும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டெல்லி, சூரத் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள அலுவலகங்கள் ஏற்கனவே வருமான வரித்துறையின் கண்காணிப்பில் இருந்து வந்தன. 2.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஃபயர்ஸ்டர் டைமண்ட் என்ற நகை வடிவமைக்கும் நிறுவனத்தின் நிறுவனர் நீரவ். சர்வதேச பிரபலங்கள் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்.
நீரவ் மோதியின் நவீன வைர நகை கடைகள் (Designer jewelry boutique) லண்டன், நியூயார்க், லாஸ் வேகாஸ், ஹவாய், சிங்கப்பூர், பெய்ஜிங் மற்றும் மக்காவ் ஆகிய இடங்களிலும், இந்தியாவில், மும்பை மற்றும் டெல்லியிலும் உள்ளன.
'குளோபல் டைமண்ட் ஜூவல்லரி ஹவுஸ்' என்ற நிறுவனத்தை 2010 ஆம் ஆண்டில் உருவாக்கிய நீரவ் மோதி அதற்கு பின் ராக்கெட் வேகத்தில் முன்னேறினார். அவரது நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது.
நீரவ் மோதியின் குடும்பம் பரம்பரையாக வைர வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் வளர்ந்தவர் நீரவ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்