You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனாவில் ரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு: 47 பேர் உயிரிழப்பு
கிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமையன்று, யான்செங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் உள்ளூர் நேரம் பகல் 2.50க்கு இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
உரப்பொருட்கள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து அந்த இடத்தில் தீ பற்றி எரிந்தது.
ரசாயன ஆலையில் ஏற்பட்ட இந்த பெரும் வெடிவிபத்தால் அந்த நேரத்தில் அப்பகுதியில் 2.2 அளவுக்கு சமமான ஒரு நில அதிர்வு இருந்ததாக சீனாவின் பூகம்பம் கண்காணிப்பு தொடர்பான நிர்வாக குழு தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள படங்கள் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு தீப்பிழம்பு எழுவதையும், அருகாமையில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்துள்ளதையும் காண்பிக்கின்றன.
இதனிடையே இந்த பகுதியில் கடுமையாக பற்றி எரிந்த தீ வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
சீனாவில் பாதுகாப்பு நெறிமுறைகள் சரிவர கடைபிடிக்கப்படாததால், தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் அதிகபட்சமாக, கடந்த 2015ஆம் ஆண்டு சீனாவின் டியான்ஜின் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், கிட்டத்தட்ட ஆயிரம் பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்