பிரெக்ஸிட் தாமதமாகுமா? ஒப்பந்தம் இல்லாமல் வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றம் எதிர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும்போது, அந்த ஒன்றியத்துடன் ஒப்பந்தம் ஏதும் செய்துகொள்ளாமலே வெளியேறுவதற்கு எதிராக வாக்களித்துள்ளது அந்நாட்டு நாடாளுமன்றம்.
பிரெக்ஸிட் நடவடிக்கை மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும்போது பிற ஐரோப்பிய நாடுகளுடன் அது கொள்ளவேண்டிய உறவு தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வரைவு ஒப்பந்தத்தை இறுதி செய்த பிரிட்டன் பிரதமர் தெரீசா மே அந்த வரைவு ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக கடந்த ஜனவரி மாதம் முன்வைத்தார். ஆனால், அந்த ஒப்பந்தத்துக்கு தெரீசா மே-யின் சொந்தக் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிலேயே எதிர்ப்பு இருந்தது. அவரது சொந்தக் கட்சி எம்.பி.க்கள் பலரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி.க்களும் எதிராக வாக்களித்ததை அடுத்து அந்த வரைவு ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
அதனால், மீண்டும் ஒரு வரைவு ஒப்பந்தத்தை உருவாக்கி அதனை மீண்டும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக கடந்த செவ்வாய்க்கிழமை முன்வைத்தார் தெரீசா மே. அதுவும் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான மார்ச் 29 காலக்கடு முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், இரண்டாவது வரைவு ஒப்பந்தமும் நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, இரண்டு வாய்ப்புகள்தான் பிரிட்டனுக்கு முன் இருந்தன. ஒப்பந்தம் ஏதும் இல்லாமலே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறவேண்டும் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்தவேண்டும்.
இரண்டு முறை வாக்கெடுப்பு
இதில் முதலாவது வழிமுறை தொடர்பாக புதன்கிழமை விவாதித்த நாடாளுமன்றம், அந்த யோசனையை நிராரித்தது. இது தொடர்பாக ஒரே நாளில் கொண்டுவரப்பட்ட அடுத்தடுத்த தீர்மானத்திலும் எந்த சூழ்நிலையிலும் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் யோசனையை நிராகரித்தே நாடாளுமன்றம் வாக்களித்தது.
வெகுமக்கள் அவையில் நடந்த இந்த பரபரப்பான இரவு வாக்கெடுப்பில் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் யோசனைக்கு ஆதரவாக 308 பேரும், எதிராக 312 பேரும் வாக்களித்தனர். மெல்லிய, நான்கு வாக்கு இடைவெளியில் இந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.
இரண்டாவது முறையாக மீண்டும் இந்த விஷயம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த முறை, ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறக்கூடாது என்ற தீர்மானத்தை அரசாங்கமே கொண்டுவந்தது. ஆனால், சூட்சுமமாக, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தமது எம்.பி.க்களை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க உத்தரவிட்டது. ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கு நாடாளுமன்றத்தின் இசைவை இதன் மூலம் பெற்றுவிடுவதற்கு அரசாங்கம் கையாண்ட உத்தி பலன் அளிக்கவில்லை. அமைச்சர்களே அந்த உத்தரவை மீறினார்கள். கொறடா உத்தரவை மீறி அவர்கள் வாக்கெடுப்பில் இருந்து வெளியேறினார்கள்.
பணிகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சர் சாரா நியூட்டன், கொறடா உத்தரவுக்கு எதிராகவே வாக்களித்தார். பிறகு பதவியும் விலகினார்.
கட்சி மீதான தமது கட்டுப்பாட்டை பிரதமர் தெரீசா மே இழந்துவிட்டார் என்றுகூட சொல்லப்பட்டது.
இறுதியாக, வாக்கெடுப்பு நடந்தபோது, முந்திய முடிவையே இன்னும் உறுதியாக எடுத்தது நாடாளுமன்றம். இந்த முறை ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் யோசனைக்கு ஆதரவளித்தவர்கள் 278 பேர். எதிர்த்து வாக்களித்தவர்கள் 321 பேர்.
அடுத்து என்ன?
முதல் நாள் வரைவு ஒப்பந்தத்தை இரண்டாவது முறையாக நிராகரித்த நாடாளுமன்றம், அடுத்த நாள் ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் யோசனையையும் நிராகரித்த நிலையில், தற்போது பிரிட்டன் வெளியேறுவதை தாமதப்படுத்த வேண்டுமா என்பது தொடர்பான தீர்மானம் ஒன்றின் மீது இன்று வியாழக்கிழமை பிரிட்டன் நாடாளுமன்றம் வாக்களிக்கவுள்ளது.
பிற செய்திகள்:
- கந்தஹாருக்கு மசூத் அசாருடன் சென்றாரா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்?
- பொள்ளாச்சி விவகாரம்: ஆபாச காணொளிகளை நீக்குவது எப்படி? - பத்மாவதி விளக்கம்
- எத்தியோப்பிய விமான விபத்தில் புதிய ஆதாரம் : மேக்ஸ் ரக விமானத்துக்கு டிரம்ப் தடை.
- "நாட்டை நாக்பூரிலிருந்து கட்டுப்படுத்த நினைக்கிறார்கள்": ராகுல் காந்தி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












