You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
97 வயதிலும் கார் ஓட்டிய இளவரசர் பிலிப்; காயமேதுமின்றி விபத்திலிருந்து உயிர் தப்பினார்
எடின்பர்க்கின் கோமகன் இளவரசர் பிலிப் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
நேற்று மதியம் சுமார் 3 மணியளவில், 97 வயதாகும் இளவரசர் பிலிப் தனது லேண்ட் ரோவர் நிறுவன காரை ஓட்டிச்சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும், எனினும் அவர் காயமேதுமின்றி தப்பிவிட்டதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து நேரிட்டதற்கு காரணமான மற்றொரு காரில் இருந்த இரண்டு பெண்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு வீடு திரும்பினர்.
இரண்டு கார்களும் மோதியபோது இளவரசர் பிலிப்பின் கார் தலைகீழாக உருண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, காரினுள்ளே சிக்குண்ட இளவரசர் பிலிப்பை தாங்கள் வெளியேற்றியதாகவும், அப்போது அவர் சுயநினைவுடன் இருந்தாலும், மிகுந்த அதிர்ச்சியுடன் அவர் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்குண்ட இரண்டு கார்களில் இருந்தவர்களிடமும் ஆல்கஹால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் இரண்டு தரப்பினருமே மது அருந்தவில்லை என்பது கண்டறியப்பட்டதாகவும் நார்போல்க் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
"இளவரசர் இந்த வயதிலும் கார் ஓட்டுவது ஆச்சர்யமாக உள்ளது"
ஜானி டயமொன்ட்
பிபிசி
இந்த விபத்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த விபத்திலிருந்து இளவரசர் பிலிப் உயிர் தப்பியது மிகவும் முக்கியமான நல்ல விடயம். விபத்து நடந்த இடத்திலிருந்து எடுத்ததாக கூறப்படும் ஒரு புகைப்படத்தில், இளவரசர் பிலிப் ஓட்டிச்சென்ற லேண்ட் ரோவர் கார் பக்கவாட்டில் சாய்ந்து நிற்கிறது. இதன் காரணமாக கண்டிப்பாக ஏதாவது தாக்கம் ஏற்பட்டிருக்கும்.
விபத்து நடந்தேறியதை பார்த்தவர்கள், இளவரசர் பிலிப் "மிகவும் அதிர்ச்சியடைந்து" காணப்பட்டதாக கூறும் நிலையில், இந்த விபத்தில் இளவரசருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும், அவருக்கு எவ்வித மருத்துவ உதவியும் தேவைப்படவில்லை என்றும் பங்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இளவரசர் பிலிப்பின் 98ஆவது பிறந்த தினத்துக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற விபத்திலிருந்து ஒருவர் எவ்வித காயமுமின்றி தப்புவது ஆச்சர்யத்துக்குரிய விடயமென்று பலரும் கூறுகின்றனர்.
அதற்கும் முன்பாக, இந்த வயதிலும் இளவரசர் பிலிப் கார் ஓட்டுவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக எப்போதுமே தன்னிச்சையாக செயல்படுவதை விரும்பும் இளவரசர் பிலிப்பை காரை அவரே ஓட்ட வேண்டாமென்று கூறியதை தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், இந்த விபத்து குறித்த விரிவான விசாரணை தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இறுதியில், இளவரசர் பிலிப் இனி கார் ஓட்டுவதை நிறுத்துவதற்கு அறிவுறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்