You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரானில் வீட்டில் புகுந்த சரக்கு விமானம்: 15 பேர் பலி
இரான் தலைநகர் தெஹ்ரான் அருகே தரையிறங்கும்போது ஒடுதளத்தை தாண்டிச் சென்ற ஒரு சரக்கு விமானம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
தெஹ்ரானுக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் உள்ள கராஜ் நகரின் ஃபாத் விமான நிலையத்தில் மோசமான வானிலையில் தரையிறங்கிய இந்த போயிங் 707 ரக விமானம் கட்டுப்பாட்டை இழந்து, ஒடுதளத்தை தாண்டி விமான நிலைய சுவற்றை இடித்துக்கொண்டு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நுழைந்தது.
விமானத்தில் இருந்த 16 பேரில் விமானப் பொறியாளர் மட்டுமே உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தரையில் இருந்த எவரும் இந்த விபத்தில் உயிரிழக்கவில்லை. விமானத்தின் குரல் பதிவு இருக்கும் 'கருப்புப் பெட்டி ' விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் ஊடகம் தெரிவிக்கிறது.
விபத்துக்குள்ளான விமானம் இரானுக்கு சொந்தமானது என்றும், விமானத்தில் இருந்த அனைவரும் இரானிய குடிமக்கள் என்றும் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் அரசுத் தொலைக்காட்சியில் உறுதிப்படுத்தினார்.
இரானின் சிறப்புப் பாதுகாப்புப் படைப் பிரிவான புரட்சிகர காவல் படைக்கு சொந்தமானது ஃபாத் விமான நிலையம். மத்திய இரானிய மாகாணமான அல்போர்சில் இது அமைந்துள்ளது.
விபத்துக்குள்ளான இந்த விமானம் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் இருந்து இறைச்சியை ஏற்றி வந்துகொண்டிருந்தது.
ஃபாத் விமான நிலையத்துக்கும், பயம் சர்வதேச விமான நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த விமானத்தின் சிதறிய பாகங்கள் வீடுகளுக்கு இடையில் புகைந்துகொண்டிருந்தன.
விபத்து நடந்த நேரத்தில் வீடுகள் காலியாக இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு இரானில் ஒரு பயணிகள் விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 66 பேர் உயிரிழந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்