‘டிரம்ப் எச்சரிக்கை’: அமெரிக்கர்களுக்கு வந்த அவசர செய்தி - ஆதரவும், எதிர்ப்பும்

பட மூலாதாரம், Getty Images
இருநூறு மில்லியன்களுக்கும் அதிகமான அமெரிக்க கைபேசி பயனர்களுக்கு 'டிரம்ப் எச்சரிக்கை' எனும் அறிவிக்கை வந்துள்ளது.
அவசர காலத்தில் மக்களை எச்சரிப்பதற்காக, அதாவது ஏவுகணை தாக்குதல், பயங்கரவாத தாக்குதல் மற்றும் பேரிடர் காலங்களில் மக்களை எச்சரிப்பதற்காக இந்த 'டிரம்ப் எச்சரிக்கை' வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதற்காக மக்களுக்கு இந்த அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
'டிரம்ப் எச்சரிக்கை' என பரிசோதனை முயற்சிக்கு பெயரிடப்பட்டாலும், டிரம்புக்கும் இதற்கும் நேரடி தொடர்பேதுமில்லை.
அதிபரின் கட்டுபாட்டில்
ஒன்றிய அவசரகால மேலாண்மை முகமை இதனை இயக்குகிறது. அமெரிக்க அதிபர் ஏதேனும் எச்சரிக்கை கொடுத்தால் இதன் மூலமாக கைபேசி பயனர்களை சென்றடையும்.
முன்பே 'ஒன்றிய அவசரகால மேலாண்மை முகமை' , மக்கள் இந்த எச்சரிக்கை குறித்து அச்சப்பட கூடாது என்பதற்காக இது குறித்த செய்தியை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அந்த செய்தியில், "உங்களுக்கு ஒரு அவசரகால எச்சரிக்கை குறுஞ்செய்தி சத்தமாக ஒலியுடன் வரும்." என்று கூறி இருந்தது.
மூன்றாண்டுகளுக்கொரு முறை
அமெரிக்க சட்டப்படி, இது போன்ற அவசரகால செய்தியை சோதனை முறையில் மூன்றாண்டுகளுக்கொரு முறை அனுப்ப வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
செப்டம்பர் மாதமே இந்த அவசரகால செய்தி அனுப்பப் திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது வடக்கு மற்றும் தெற்கு கரோலினா பகுதியில் வீசிய சூறாவளியுடன் மக்கள் இதனை பொருத்தி பார்த்து குழப்பமடையக் கூடாது என்பதற்காக இம்மாதம் அனுப்பப்பட்டுள்ளது.
மக்களிடையே குழப்பம்
இந்த அவசர எச்சரிக்கை செய்தி வந்தவுடன், சமூக ஊடகத்தில் இதற்கு ஆதராகவும்,எதிராகவும் விவாதம் எழுந்தது.
சிலர் எங்களுக்கு இந்த செய்தி வரவில்லை என்றும் குறிப்பிட்டுருந்தனர். சிலர் இதனை பகடியும் செய்திருந்தனர்.
எதிர்ப்பும் உள்ளது
இயற்கை பேரிடர் மற்றும் பொது பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படும்போது மட்டும்தான் இந்த அவசர செய்தியை அனுப்ப வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றம் தெளிவாக வரையறுத்துள்ளது. இருந்தபோதிலும், இதற்கு பலமான எதிர்ப்பும் இருக்கதான் செய்தது.

அரசு எதனையும் கட்டாயப்படுத்தி கேட்க வைக்க முடியாது என ஒரு பத்திரிகையாளர், வழக்குரைஞர், மற்றும் உடல்நிலை பயிற்றுநர் ஒன்றிய அவசரகால மேலாண்மை முகமைக்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.
ஆனால், இந்த வழக்கை புதன்கிழமைக்குள் எடுத்து விசாரிக்க நியூயார்க் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












