You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஃபேன் பிங்பிங்: சீன நடிகைக்கு அபராதம் விதிக்கப்பட்டது ஏன்?
கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
சீன நடிகைக்கு அபராதம்
பிரபலமான சீன நடிகை ஃபேன் பிங்பிங்க்கு 883 மில்லியன் சீன யான்கள், வரி ஏய்ப்புக்காகவும் இன்னும் பிற குற்றங்களுக்காகவும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். ஜூலை மாதம் காணமால் போன இந்த நடிகை சமூக ஊடகத்தில் நீளமான மன்னிப்பு கடிதமொன்றை எழுதி உள்ளார். சீனா திரைப்படத் துறையில் அதிகம் சம்பளம் வாங்கும் இந்த நடிகை முறையாக அபராதத்தை கட்டும் பட்சத்தில் தண்டனையிலிருந்து தப்பிப்பார் என்கிறது ஒரு சீன செய்தி முகமை.
டிரம்ப் எச்சரிக்கை
இருநூறு மில்லியன்களுக்கும் அதிகமான அமெரிக்க கைபேசி பயனர்களுக்கு 'டிரம்ப் எச்சரிக்கை' எனும் அறிவிக்கை வந்துள்ளது. அவசர காலத்தில் மக்களை எச்சரிப்பதற்காக, அதாவது ஏவுகணை தாக்குதல், பயங்கரவாத தாக்குதல் மற்றும் பேரிடர் காலங்களில் மக்களை எச்சரிப்பதற்காக இந்த 'டிரம்ப் எச்சரிக்கை' வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதற்காக மக்களுக்கு இந்த அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
'டிரம்ப் எச்சரிக்கை' என பரிசோதனை முயற்சி சிலரால் அழைக்கப்பட்டாலும் டிரம்புக்கும் இதற்கும் நேரடி தொடர்பேதுமில்லை.
என்ன ஆனது பத்திரிகையாளருக்கு?
தமது நாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சிக்கும் பிரபலமான செளதி பத்திரிகையாளர் ஜமால் காணாமல் போய் உள்ளார். இவர் கடைசியாக சென்ற இடம் துருக்கியில் உள்ள செளதி தூதரகம். வாஷிங்டன் போஸ்டில் தொடர்ந்து எழுதிவரும் ஜமால், இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்திற்கு செவ்வாய்க்கிழமை மதியம் சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை. "அவர் கைது செய்யப்பட்டிருக்கிறாரா, எப்போது விடுவிக்கப்படுவார் என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியவில்லை" என்கிறது வாஷிங்டன் போஸ்ட்.
காவல் அதிகாரி சுட்டுக்கொலை
அமெரிக்கா தெற்கு கரோலினா பகுதியில் காவல் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மூவர் காயம் அடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஃப்ளோரசன்ஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காயம் அடைந்தவர்களின் நிலை என்ன என்று இன்னும் தெரியவில்லை. சந்தேகத்திற்குரிய அந்த துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிசூட்டிற்கான உள்நோக்கம் என்னவென்று இன்னும் தெளிவாக தெரியவில்லை.
இரான் தடை
இரான் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்கச் சொல்லி சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இரானுடன் செய்துகொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் மதிப்பாய்வு செய்யப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா தனக்கு எதிரான அடிப்படையற்ற அரசியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளை உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் தெரிவித்தார்.
வியன்னா அமைதி ஒப்பந்தத்தின்படி சச்சரவுகளை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்கும் உரிமையை வழங்கும் நெறிமுறைகளை கைவிட ஏற்கனவே அமெரிக்கா முடிவு செய்துவிட்டது என அவர் கூறினார்.
கடந்த புதன்கிழமை சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இரான் வரவேற்றுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார தடைகள் சட்டத்துக்கு புறம்பானவை என்பதை நீதிமன்றத்தின் உத்தரவு காட்டுவதாக தெரிவிக்கிறது இரான்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :