You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்ப் வீட்டுக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்துக்குரிய கடித உறை: நடந்தது என்ன?
கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
சந்தேகத்திற்கிடமான கடிதம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இல்லத்தின் முகவரியிட்டு வந்த சந்தேகத்திற்கிடமான கடித உறை பாதுகாப்பு அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டது என்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள். வெள்ளை மாளிகைக்குள் அந்தக் கடிதம் செல்லவில்லை. அதற்கு முன்பாகவே அந்த கடிதம் இடைமறிக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
விளக்கெண்ணெய் பிசினால் தயாரிக்கப்பட்ட நஞ்சு இருக்கலாம் என கருதப்படும் இரண்டு பொட்டலங்கள் பென்டகனில் அஞ்சல்கள் சோதிக்கும் கருவியில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த பொட்டலங்களையும் எஃப்.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
இசைத்ததற்காக மறுக்கப்பட்ட திருமணம்
செளதி பெண் ஒருவரின் திருமண விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டுள்ளது. செளதியில் வங்கி மேலாளராக பணிபுரியும் பெண் ஒருவர் ஆசிரியர் ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். ஆனால், இந்த திருமணத்திற்கு அந்த பெண்ணின் உறவினர்கள் அனுமதி அளிக்கவில்லை அதற்கு காரணம், அந்த ஆசிரியர் இசை மீட்டினார் என்பதுதான். பழமைவாத முஸ்லிம்கள் சிலர் இசை இசைப்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்று கருதுகின்றனர். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது. நீதிமன்றமும் அந்த பெண்ணுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது.
சிரியா ஏவுகணை
சிரியாவின் வான் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தாங்கள் வழங்கிய எஸ்-300 ஏவுகணைகள் திங்கட்கிழமை சிரியாவை சென்று சேர்ந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் செர்கே சொய்கு தெரிவித்துள்ளார். சிரியாவுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ரஷ்யா அனுப்பியது. சில வாரங்களுக்கு முன் சிரியா படைகள் இஸ்ரேல் வான் தாக்குதலின் போது தவறுதலாக ரஷ்ய விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. இதில் பதினைந்து ரஷ்ய படைவீரர்கள் பலியானார்கள். முதலில் இஸ்ரேல்தான் இந்த வான் தாக்குதலை நடத்தியது என ரஷ்யா குற்றஞ்சாட்டியது.
இரான் உளவுத்துறைதான் காரணம்
பாரீஸீல் இரான் எதிர்கட்சியினர் ஒன்றுகூடல் நிகழ்விவ் வெடிகுண்டு வெடிக்க திட்டமிட்ட பின்னணியில் இரான் உளவுத்துறை இருப்பதாக பிரான்ஸ் அதிகாரிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். கடந்த ஜூன் மாதம் இரான் எதிர்க்கட்சிகள் பிரான்ஸில் ஒன்றுகூடி விவாதிக்க திட்டமிட்டனர். அந்த சமயத்தில் வெடிகுண்டுகளுடன் ஒரு தம்பதி கைது செய்யப்பட்டது. விசாரணையில் இந்த ஒன்று கூடலில் குண்டு வெடிப்பு நிகழ்த்த இவர்கள் திட்டமிட்டு இருப்பதாக தெரிந்தது. இந்த விவகாரத்தில் இரான் உளவுத் துறையை பிரான்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இரண்டு இரான் அதிகாரிகளின் சொத்துகளை முடக்கியுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது பிரான்ஸ் அரசு.
இளம் ஆண்களுக்கு போதாத காலம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது அமெரிக்க இளம் ஆண்களுக்கு 'கடினமான' மற்றும் 'மோசமான' காலம் என்று கூறி உள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நீதிபதி பிரெட் கவனோவுக்கு எதிரான விசாரணை நடந்து வரும் சூழலில் டிரம்ப் இவ்வாறாக கூறி உள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :