You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்
- எழுதியவர், மிர்யம் மாரூஃப்
- பதவி, பிபிசி அவுட்லுக்
2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் காலைவேளை அது… பிரிட்டனின் மான்செஸ்டரில் தனது சிறிய வீட்டில் உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த நாவோமி ஜைக்ப்ஸ், தான் யார்? எங்கே இருக்கிறோம் என்று புரியாமல் திகைத்து நின்றார்.
15 வயது சிறுமியாகவே தன்னை உணர்ந்த அவர், அது 1992ஆம் ஆண்டு என்றே நினைத்தார். "முதலில் நான் இருக்கும் இடம் எதுவென்றே எனக்கு புரியவில்லை. கனவு காண்கிறேனா என்று தோன்றியது. இல்லை அது கொடிய உண்மை என்று புரிந்தது. நான் யார், இந்த இடத்தில் ஏன் இருக்கிறேன் என்று புரியாமல் குழம்பிப்போனேன்."
"கண் விழித்த்தும், முதலில் கண்ணில் பட்டது திரைச்சீலைகள்தான். பிறகு, அலமாரி, நான் படுத்திருந்த படுக்கை என எதுவுமே எனக்கு பரிச்சயமானதாக தெரியவில்லை. என்னை பார்த்தேன், நான் உடுத்தியிருந்த ஆடை என்னுடையதல்ல என்று தோன்றியது" என்கிறார் நாவோமி ஜைக்ப்ஸ்.
"உடனே கண்ணாடியில் என்னைப் பார்த்தேன். அது நான் அல்ல என்றே தோன்றியது. நிறம் வெளுத்து வயது கூடிப்போய், வேறு யாரோ கண்ணாடியில் பிரதிபலிக்கிறார்கள் என்றே தோன்றியது. ஆனால், என்னுடைய தோற்றம்தானே கண்ணாடியில் தெரியும் என்று புத்தி சொல்லியது. எதையுமே என்னால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை. அதிர்ச்சியில் உறைந்துப் போனேன்."
'எதிர்காலத்திற்குள் நுழைந்த நாவோமி'
"எனக்கு 15 வயதுக்குரிய உணர்வுகளே இருந்தன. அது 1992ஆம் ஆண்டு என்று நான் நினைத்தாலும், அது 2008ஆம் ஆண்டு, 1992க்கு பிந்தைய நினைவுகள் எதுவுமே எனக்கு இல்லை."
வாழ்க்கைமுறை, தொழில்நுட்பம், இண்டர்நெட், சமூக ஊடகம் ஸ்மார்ட் ஃபோன் என தனது 15 வயதுக்கு பிந்தைய எதுவுமே அவருக்கு புரிபடவில்லை. இது மட்டுமல்ல…
தென்னாப்பிரிக்காவில், நெல்சன் மண்டேலா போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார், இராக்கில் சதான் உசேன் ஆட்சியில் இருக்கிறார் பிரிட்டன் இளவரசி டயானாவுக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கருப்பினத்தை சேர்ந்த ஒருவர் அதிபராவது அப்போதும் நிறைவேறாத கனவாகவே இருந்ததாகவே நவோமிக்கு தோன்றியது.
"என்னால் நம்பவே முடியவில்லை, எனக்கு எப்படி எதுவுமே தெரியவில்லை, என் வாழ்க்கையில் என்ன நடந்தது? இப்படி பல கேள்விகள் என்னை வாட்டி வதைத்தன. யாரையுமே அடையாளம் காண முடியாமல் கஷ்டப்பட்டேன்" என தனது தவிப்பை பகிர்ந்துக் கொள்கிறார் நவோமி.
இது எல்லாவற்றையும்விட கொடுமையான விஷயம், தனக்கு 10 வயது மகள் இருப்பதை நவோமி உணராததுதான்.
"எனக்கு மகள் இருப்பதே தெரியாமல் இருந்தேன். பள்ளியில் இருந்து வந்த என் மகள் என்னைப் பார்த்து சிரித்தபோது, அது யார் என்றே தெரியாமல் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்."
தனது 15 வயதில் பத்திரிகையில் பணிபுரிய வேண்டும், உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும், மிகப்பெரிய வீடு கட்டவேண்டும் என பல லட்சியங்களை வைத்திருந்தார் நவோமி.
ஆனால், தனது குழந்தையை தனியாக வளர்த்து வரும் தாய் (சிங்கிள் மதர்) என்றும், தனது செலவுகளுக்காக அரசை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிய வந்தபோது என்ன நடந்தது தன் வாழ்க்கையில் என்று புரியாமல் திகைத்துப்போனார் நாவோமி. அதுமட்டுமல்ல, 32 வயதில், வேலையில்லாமல் இருந்ததும், மனோதத்துவ படிப்பு படித்துக் கொண்டிருந்ததும் அறிந்த அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தாக்கியது. 15 வயது நாவோமிக்கு மனோதத்துவ படிப்பு பற்றிய விஷயம்கூட தெரியாது.
"32 வயது நாவோமியை எனக்கு பிடிக்கவேயில்லை. எதிர்காலத்தில் நன்றாக இருப்போம் என்ற நம்பிக்கையில்தானே வாழ்வோம்? ஆனால் எதிர்காலம் இவ்வளவு மோசமாக இருக்கும் என்றும், அப்போது நான் என்னவாக இருப்பேன் என்று காலசக்கரத்தில் அமர்ந்து பயணித்து பார்க்கிறேனோ என்று தோன்றியது".
"அப்படி என் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று புரியவேயில்லை, நான் முற்றிலுமாக உடைந்து போய்விட்டேன். என்னையே எனக்கு பிடிக்கவில்லை, அந்த வீட்டில் மட்டுமல்ல, இந்த உலகத்திலேயே வசிக்க எனக்கு பிடிக்கவில்லை" என்று சொல்கிறார் நாவோமி.
நிகழ்காலத்தில் வாழவேண்டுமானால், கடந்தகால நினைவுகளை மறக்கவேண்டும் என்பதை நாவோமி உணர்ந்தார்.
கட்டிலுக்கு அடியில் இருந்து விளக்கம் கிடைத்தது
ஒரு மருத்துவரை அணுகி தனது நிலையை எடுத்துச் சொன்னார் நாவோமி. ஆனால் அவர் அதை நம்பவில்லை, எனவே வேறு வழியில்லாமல் தன்னைத் தானே சரிபடுத்திக் கொள்வது என்று முடிவு செய்தார்.
"என்னுடைய நினைவுகள் எப்படி மறந்துபோனது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுடன், அதற்கான காரணம் என்ன என்பதையும் கண்டுபிடிக்க வேண்டுமென்பதே என் முன் இருந்த சவால்" என்கிறார் நாவோமி.
சகோதரி சிமோன் மற்றும் தோழி கேட்டியின் உதவியுடன் மறந்து போன வாழ்க்கையை தெரிந்துக் கொண்டார் நவோமி. பத்திரிகைகளில் எழுதுவதில் விருப்பம் கொண்ட நாவோமியின் எழுத்துக்கள் வெளியான பத்திரிகைகள் வீட்டில் எங்காவது இருக்கும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
அவர்களிடம் இருந்து தெரிந்துக் கொண்ட விஷயங்களோ நாவோமியை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. தனக்கு போதை மருந்து பழக்கம் இருந்ததும், வீட்டை இழந்து வெளியேறிய தகவலும் தெரியவந்தது.
"ஒரு கட்டத்தில் வெற்றிகரமான ஒரு தொழிலும், சொந்தமாக ஒரு வீடும் என்னிடம் இருந்திருக்கிறது. ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் நான் வழி தவறிச் சென்றிருக்கிறேன். தொழிலும், வீடும் கை விட்டு போயிருக்கிறது அதற்கு காரணம் போதை மருந்து பழக்கம் என்று எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தெரிந்துக் கொண்டபோது என்னையே நான் வெறுத்தேன்".
"வீடு, வாசல், தொழில் என அனைத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன். பைபோலார் டிஸ்ஸார்டர் (Bipolar disorder) எனப்படும் இருவேறு மனநிலைகளை கொண்டிருக்கும் உளவியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தேன்" என்பதும் தெரியவந்தது.
பத்திரிகைகளை தேடியபோது, கட்டிலுக்கு கீழே இருந்த பெட்டியில் இருந்த பத்திரிகைகள் சொன்ன விஷயமோ அடுத்த இடியை நாவோமியின் தலையில் இறக்கியது.
"பத்திரிகைகளை படித்தபோது எனது உலகமே மாறிப்போனது. 6 வயது சிறுமியாக இருந்தபோது, நான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியிருந்தேன், அதை 25 வயதுவரை வெளியில் சொல்லாமல் எனக்குள்ளே புதைத்து வைத்து புழுங்கியிருந்திருக்கிறேன் என்பது பத்திரிகையில் வெளியாகியிருந்தது."
15 வயது நினைவுகளை கொண்டிருந்த நாவோமிக்கு, தான் மறைத்து வைத்திருந்த ரகசியம் எப்படி வெளியானது என்ற அதிர்ச்சியே மேலோங்கியது. வாழ்க்கையில் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களும், நிகழ்வுகளும் வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவுகளை மாற்றும், பழைய ரகசியங்களை வெளிப்படுத்தும், புதிய ரகசியங்களை உருவாக்கும் என்பது புரியாமல், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விஷயம் தெரியவந்துவிட்டதே என்று புழுங்கியிருக்கிறார். ஆனால் அதை தனது 25 வயதில் தானே பத்திரிகையில் எழுதியிருந்தார் என்றாலும், அதற்கான மன முதிர்ச்சி எப்படி ஏற்பட்டது என்று அவருக்குப் புரியவேயில்லை.
பதில் கிடைத்த கேள்விகளோ, பல துணை கேள்விகளையும், பலவிதமான குழப்பங்களையும் எழுப்பின.
1992 மற்றும் 2008 க்கு இடைப்பட்ட காலத்தில் தன் வாழ்க்கையில் நடந்த்து என்ன? 15 வயது வரையிலான நினைவுகள் மட்டும் மறந்து போகாதது ஏன்? அந்த வயதில் என்ன நடந்தது? என்ன? ஏன்? எப்படி? என்று கேள்விகள் அவரை துளைத்தெடுத்தன.
"யோசித்து யோசித்து மூளையே சூடாகிவிட்டது. என் குடும்பம் உடைந்திருந்தது, அம்மாவின் இரண்டாவது கணவர் எங்களை விட்டுவிட்டு போய்விட்டார், அம்மாவுடனான தொடர்பு முடிந்துபோயிருந்தது."
மதுபோதைக்கு அம்மா அடிமையானதால், நாவோமிக்கும் அம்மாவுக்கும் இடையிலான சண்டை பெரிதாகிவிட்டது.
"சண்டை அதிகமானதும் அம்மா குடித்துவிட்டு, என்னை கொல்ல முயற்சித்தார். அந்த நிமிடத்தில் என் வாழ்க்கைப் பாதை வேறு என்று முடிவெடுத்திருக்கிறேன்" என்கிறார் நாவோமி.
நினைவுகள் மறந்தபிறகு, இதுபோன்ற விஷயங்களை தெரிந்துக்கொள்ளத் தொடங்கியபிறகு, தன் வாழ்க்கையில் உண்மையில் நடந்த சம்பவங்கள் கனவுபோல் தோன்றியது நாவோமிக்கு.
இப்படி சிறிது சிறிதாக தனது நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் நாவோமி ஈடுபட்டிருந்தார். நினைவுகள் மறந்துபோன சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த மற்றொரு காலை வேளையில் மறந்துபோன நினைவுகள் அனைத்தும் திரும்பிவிட்டன.
தனது நினைவுகள் அனைத்தும் திரும்பி, 32 வயது பெண்ணாக மீண்டும் மாறினார் நாவோமி.
நடந்தது என்ன?
உண்மையில் தனக்கு நடந்தது என்ன என்பது மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் நாவோமிக்கு தெரியவந்த்து.
"ஒரு நல்ல மனநல மருத்துவரை சந்தித்தேன், எனக்கு நடந்த அனைத்தையும் அவரிடம் கூறினேன். என் வாழ்வின் முழு கதையையும் அவர் கேட்டு, ஆராய்ந்தார். அவர் நிறைய ஆராய்ச்சி செய்தார், சக மருத்துவர்களுடன் பேசினார். இறுதியில் எனக்கு மறதி நோயின் ஒருவகையான டிஸ்-அசோஸியேடிவ் அம்னீசியா (Dissociative amnesia) ஏற்பட்டிருந்ததை அனைவரும் ஒப்புக்கொண்டார்கள்."
உண்மையில் நாவோமியின் நினைவுகள் மறக்கவில்லை, வாழ்க்கையில் எதிர்கொண்ட கடுமையான பிரச்சனைகள் அவரது மூளையை பாதித்து, கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியதால், குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்ற நினைவுகளை மூளை மரத்து போகச் செய்துவிட்டது.
தனக்கு ஏற்பட்ட நோய் என்ன என்பதை தெரிந்துக் கொண்டதும், நாவோமிக்கு சற்றே ஆறுதல் ஏற்பட்டது.
எழுத்தாளரான நாவோமி, 'The Forgotten Girl' என்ற புத்தகத்தில் தனது நினைவுகள் மறந்துபோய், அவற்றை மீட்டெடுத்த கதையை எழுதியிருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :