You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லிபியாவில் தொடரும் மோதல்கள் : சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்
லிபியாவின் தலைநகரான திரிபோலியில் போராளி குழுக்களுக்கு இடையே நடந்த மோதல்களால் இந்நகரின் அருகே உள்ள ஒரு சிறைக்கூடத்தில் இருந்து கிட்டத்தட்ட 400 கைதிகள் தப்பியோடியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அய்ன் ஜாரா என்ற அந்த சிறையின் கதவுகளை உடைத்து அவர்கள் வெளியேறியதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.
தப்பியோடுபவர்களை தடுத்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய சிறைக்காவலர்களால், சிறையில் ஏற்பட்ட கலவரத்தையும் அதன்பின் நடந்த நிகழ்வையும் தடுக்க இயலவில்லை.
தலைநகர் திரிபோலியில் நடந்த மோதல்களால் ஐ.நாவின் ஆதரவை பெற்ற லிபியா அரசு அவசர நிலையை அறிவிக்க வேண்டியதாயிற்று.
ஞாயிற்றுக்கிழமை ஆயுதம் தாங்கிய இரு ஆயுதக்குழுக்கள் இந்த சிறை வளாகம் அருகே கடுமையாக மோதிக்கொண்டனர். இந்த சிறையில் ஆண் கைதிகள் மட்டுமே உள்ளனர்.
தென் கிழக்கு திரிபோலியில் உள்ள அய்ன் ஜாரா சிறையில் உள்ள கைதிகள் பெரும்பாலும் காலஞ்சென்ற லிபிய தலைவரான கடாஃபியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், கடந்த 2011-ஆம் ஆண்டில் அந்த நாட்டில் கடாஃபியின் ஆட்சிக்கு எதிராக நடந்த மக்கள் எழுச்சி மற்றும் போராட்டங்களின் போது நடந்த கொலைகளை இவர்கள் செய்ததாக குற்றம் கண்டறியப்பட்டது.
இதனிடையே, லிபியாவின் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமையன்று பல நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் வாழ்ந்துவரும் ஒரு முகாமின் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதகவும், பலர் காயமடைந்ததாகவும் அவசரசேவை பிரிவினர் மற்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்துக்கு மேல் இந்நாட்டின் தலைநகரான திரிபோலியில் நடந்து வரும் போராளி குழுக்கள் இடையேயான மோதல்களில் உள்ளூர்வாசிகள் உள்பட 47 பேர் இறந்துள்ளதாக லிபியாவின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்