You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
‘பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுவர்கள்’ - போப் பகிரங்க கடிதம்
குழந்தைகளுக்கு எதிராக நடைபெறுகிற பாலியல் வன்கொடுமை "அராஜகங்கள்" மற்றும் அது தேவாலயங்களால் மறைக்கப்படுவது குறித்து கண்டித்து போப் ஃபிரான்ஸிஸ் உலகில் உள்ள 1.2பில்லியன் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
"கடவுளின் மக்களுக்கான" கடிதம் என்று குறிப்பிடப்பட்ட அக்கடிதத்தில், "மரண கலாசாரத்துக்கு" முடிவு கட்ட வேண்டும் என கோரியுள்ள அவர் தேவலாயங்களில் பாலியல் வன்முறைகள் குறித்து மறைக்கப்படுவதும், மன்னிப்பு கோராமல் இருப்பது குறித்தும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பெனிசில்வேனியாவில் ஏழு வருட பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த விளக்கமான விசாரணை அறிக்கை ஒன்று வெளியானது.
அடையாளம் காணப்பட்ட 1000 சிறார்கள், 300 பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அந்த முக்கியத்துவம் வாய்ந்த விசாரணை அறிக்கை தெரிவித்தது.
மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்தக் குற்றங்கள் தேவாலயங்களால் மறைக்கப்பட்டுள்ளன, அதில் சில வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ள முடியாத அளவிற்கு பழையதாகிவிட்டன என விசாரணையின் முடிவில் தெரியவந்துள்ளது.
அந்த விசாரணை அறிக்கை வெளியான பின், "பிறரை வேட்டையாடும் பாதிரியார்களுக்கு எதிராக" போப் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் இருப்பதாக வத்திகான் தெரிவித்தது.
என்ன சொன்னார் போப்?
பாலியல் துன்புறுத்தல் குறித்து ஒட்டு மொத்த கத்தோலிக்கர்களுக்கும் போப் ஒருவர் கடிதம் எழுதியது இதுவே முதல்முறை என வத்திகான் தெரிவித்துள்ளது.
2000 வார்த்தைகள் கொண்ட அந்த கடிதத்தில், அமெரிக்காவில் நடைபெற்ற அந்த சம்பவத்தை குறித்து நேரடியாக பேசியுள்ள அவர், துரிதமாக செயல்பட தேவயாலம் தவறிவிட்டது என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.
"பாதிக்கப்பட்டவர்களின் நெஞ்சை உலுக்கும் வலி" நெடுங்காலமாக கண்டுகொள்ளாமல் விடப்பட்டது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
"திருச்சபை சமுதாயமாக நாம் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருந்திருக்கவில்லை என்பதை வெட்கத்துடனும், வருத்தத்துடனும் ஒப்புக் கொள்வோம். பல உயிர்களின் வாழ்வில் ஏற்பட்ட சேதாரத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளாமல் துரித நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டோம்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
"சிறார்கள் மீது நாம் அக்கறை காட்டவில்லை; அவர்களை கவனிக்காமல் விட்டுவிட்டோம்"
ஒருவரின் துயரம் அனைவருக்குமானது என்ற பைபிளின் வாக்கியத்தை சுட்டிக்காட்டிய போப், நடந்த உண்மைகளை தேவாலயங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
"பரிசுத்தவாதிகள், மதகுருகள் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்துள்ளவர்களை பாதுகாக்கக்கூடிய இடத்தில் உள்ள நபர்கள் செய்யும் அராஜகங்களை துயரத்துடனும் வெட்கத்துடனும் தேவாலயங்கள் ஏற்றுக் கொள்ளவும் அதற்கு கண்டனங்களையும் தெரிவிக்க வேண்டும். நாம் செய்யும் பாவங்களுக்கும், பிறரின் பாவங்களுக்கும் மன்னிப்பு கோருவோம்" என போப் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
போப்பின் இந்த கடிதம் வரவேற்கதக்கதாயினும், இம்மாதிரியான குற்றங்களை தடுப்பதற்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்று பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்