மங்கோலிய அரசர் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா? வரலாறு சொல்வதென்ன?

பட மூலாதாரம், NIVERSAL HISTORY ARCH
- எழுதியவர், ஜாஃபர் சையத்
- பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத்
13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும் தனது முன்னால் மண்டியிடச் செய்தார்.
பல நாடுகளில் ரத்த ஆற்றை ஓடவிட்டு, எதிரிகளின் தலையை துண்டித்து, மலையாக குவித்த செங்கிஸ்கான், நகரங்களை சூறையாடியபடியே, பீஜிங் முதல் மாஸ்கோ வரை பல நகரங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.
ஒரு காலத்தில் மூன்று கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு பரந்து விரிந்திருந்த மங்கோலியப் பேரரசின் தற்போதைய எல்லைக்குள் வசிப்பவர்களின் மொத்தத் தொகையே மூன்று கோடிதான்.
ஆனால், செங்கிஸ்கானின் வெற்றி போர்க்களத்தோடு முடிந்துவிடவில்லை. மற்றொரு களத்திலும் அவரது செயல்பாடு மிகவும் வியப்பளிப்பதாக இருக்கிறது!

பட மூலாதாரம், SAMUEL BERGSTROM
கிழக்கு மங்கோலியா எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மரபணு ஆராய்ச்சியில் ஏறத்தாழ எட்டு சதவிகித ஆண்களின் 'ஒய்' குரோமோசோம்களில் மங்கோலிய ஆட்சியாளர்களின் குடும்பத்தின் தடயங்கள் உள்ளதாகத் தெரியவந்தது.
உலகில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் ஆண்கள் அதாவது உலக ஆண்களில் 0.5% செங்கிஸ்கானின் பரம்பரையினர் என்று கூறுகிறது இந்த ஆராய்ச்சியின் முடிவுகள்.
பாகிஸ்தானில் ஹஜாரா பழங்குடியினப் பகுதியில் வசிக்கும் மக்களின் மரபணுக்களிலும் இதுபோன்ற தடயங்கள் தென்படுகின்றன. அந்த மக்களும் தாங்கள் மங்கோலிய இனத்தை சேர்ந்தவர்கள் என்றே தங்களை அடையாளப்படுத்துகின்றனர். இதைத் தவிர, முகல், சுக்தாய் மற்றும் மிர்ஸா போன்ற குடும்பப் பெயர்களைக் கொண்ட மக்கள் தாங்களும் மங்கோலிய இனத்தை சேர்ந்தவர்களாக கூறுகின்றனர்.

பட மூலாதாரம், HULTON ARCHIVE/GETTY IMAGES
ஒருவருக்கு எத்தனை குழந்தைகள்?
அறிவியல் ரீதியான மரபணு ஆராய்ச்சிகள் ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் செங்கிஸ்கானின் வாரிசுகள் பற்றி வரலாற்றுப் பதிவுகள் என்ன சொல்கின்றன?
டஜன் கணக்கில் திருமணம் செய்துக் கொண்டவர் செங்கிஸ்தான் என்பதும் அவரது மகன்களின் எண்ணிக்கை 200 என்றும் சொல்லப்படுகிறது. அவருக்கு பிறகு, அவரது மகன்கள் ஆட்சியையும் சம்ராஜ்ஜியத்தையும் மட்டும் விரிவாக்கவில்லை, பரம்பரையையும், வாரிசுகளின் எண்ணிக்கைகளையும் விரிவுபடுத்தினர்.
செங்கிஸ்கான் மரணமடைந்து 33 ஆண்டுகளுக்கு பிறகு அவரது சரித்திரத்தை 'தாரீக்-ஏ-ஜகாங்குஷா' என்ற பெயரில் எழுதினார் உதா மலிக் ஜுபாயனி என்ற வரலாற்றாசிரியர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
"செங்கிஸ்கான் காலத்தில், அவரது பரம்பரையைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் நிம்மதியாக வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள். இதைப்பற்றி நான் அதிகம் எதுவும் சொல்லப்போவதில்லை. ஏனெனில், ஒருவரால் எப்படி இவ்வளவு அதிகமான குழந்தைகளை பெறமுடியும்? என்ற கேள்வி எழும். இந்த புத்தகத்தைப் படிக்கும் வாசகர்கள் பொய்யான தகவல்களை பரப்புவதாக குற்றம் சாட்டப்படலாம்."
இந்த இடத்தில் ஒரு முக்கியமான சம்பவத்தை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கலாம். செங்கிஸ் கானுக்கு 60 வயதாக இருந்தபோது, தனக்கு பிறகு அரசராக பதவியேற்பது யார் என்பதை முடிவு செய்யும் முக்கியமான கூட்டத்தை அவர் கூட்டினார். முதல் மனைவி மூலம் பிறந்த ஜோசி, ஒக்தாயி, சுக்தாயி, தோலி ஆகிய நான்கு மகன்களை கூட்டத்திற்கு அழைத்த செங்கிஸ்கான் அவர்களிடம் பேசினார்.

பட மூலாதாரம், Getty Images
ஒரு கதையை உதாரணமாக கூறிய செங்கிஸ்கான் அதன் மூலம் ஒற்றை தலைமையின் அவசியத்தை மகன்களுக்கு எடுத்துரைத்தார். "எனது மகன்கள் அனைவரும் அரசராக விரும்பினால், ஒருவரின் கீழ் மற்றவர்கள் பணியாற்ற மறுத்தால், அது, இரண்டு பாம்புகள் பற்றிய பழைய கதை ஒன்றை நினைவுபடுத்துவதாக இருக்கும். அந்த கதையில் ஒரு பாம்புக்கு பல தலைகள் இருக்கும், மற்றொரு பாம்புக்கு ஒரு தலையும் பல உடல்களும் இருக்கும்."
"பல தலைகள் கொண்ட பாம்புக்கு பசியெடுத்து அது இரை தேட கிளம்பினால், எந்த வழியாக செல்லலாம் என்று அதன் பல தலைகளுக்கும் கருத்து வேறுபாடு எழும். ஒத்த கருத்து ஏற்படாத காரணத்தால் எங்குமே செல்லமுடியாமல் இறுதியில் பட்டினியிலேயே பல தலை பாம்பு இறந்துவிடும். ஆனால் ஒற்றைத் தலையும், பல உடம்பும் கொண்ட பாம்புக்கு இந்த பிரச்சனை இல்லை, அது பல உடல்களுக்கு தேவையான உணவை உட்கொண்டு நிம்மதியாக வாழ்ந்தது"
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
கதையை சொல்லி முடித்த செங்கிஸ்கான், தனது மூத்த மகன் ஜோசி கானை உரையாற்ற அழைத்தார். இதன் பொருள், பிற சகோதரர்கள், ஜோசி கானின் தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே.
இது இரண்டாவது மகன் சுக்தாயிக்கு பிடிக்கவில்லை.
"நீங்கள் ஜோசியை உரையாற்ற அழைப்பதால் அவனையே அரசனாக்க முடிவு செய்துவிட்டீர்கள் என்று பொருள் கொள்ளலாமா? தவறான வழியில் பிறந்த அவனை எங்கள் தலைவராக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?" என்று தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று தந்தையிடம் தனது மனத்தாங்கலை முறையிட்டார்.

பட மூலாதாரம், NATIONAL PALACE MUSEUM
40 ஆண்டு கால கதை
சுக்தாயி குறிப்பிட்டுச் சொல்ல விரும்பியது 40 ஆண்டு பழைய கதை. செங்கிஸ் கானின் முதல் மனைவி போர்தா காதூன் எதிரிகளினால் கடத்தப்பட்டார் . 1161ஆம் ஓல்கோத் பழங்குடியினத்தில் பிறந்த போர்தாவுக்கும், தைமூஜினுக்கும் (செங்கிஸ் கானின் உண்மையான பெயர்) சிறு வயதிலேயே திருமணம் நிச்சயமாகிவிட்டது. திருமணம் நடக்கும்போது போர்தாவுக்கு 17 வயது, செங்கிஸ் கானுக்கு 16 வயது.
திருமணமான சில நாட்களிலேயெ செங்கிஸ் கானின் எதிரிகள், செங்கிஸ் கானின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். ஆறு தம்பிகள் மற்றும் தாயுடன் செங்கிஸ் கான் தப்பித்தாலும், அவரது மனைவி போர்தா மட்டும் அகப்பட்டுக் கொண்டார்.
உண்மையில் போர்தாவை கடத்துவதே தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கம். இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பதோ மற்றுமொரு கடத்தல் கதை. செங்கிஸ் கானின் தந்தை, தங்கள் இனத்திற்கு எதிரியாக இருந்த மற்றொரு பழங்குடி இனத்தை சேர்ந்த பெண்ணை கடத்திக் கொண்டு வந்து திருமணம் செய்துக் கொண்டார். அவர்தான் செங்கிஸ் கானின் தாய்.
செங்கிஸ்கானின் தாயான தங்கள் இனப் பெண் கடத்தப்பட்டதை பல ஆண்டுகளாகியும் மறக்காதவர்கள், பழி தீர்த்துக் கொள்வதற்காக செங்கிஸ்கானின் மனைவியை கடத்தினார்கள். மாட்டு வண்டி ஒன்றில் மறைந்திருந்த போர்தாவை கண்டுபிடித்து, குதிரையில் ஏற்றிக் கொண்டு விரைந்தார்கள் கடத்தல்காரர்கள்.

பட மூலாதாரம், GETTY IMAGES
தனது மனைவியை தேடும் வேட்டையை தொடங்கினார் செங்கிஸ்கான். மனைவியை கடத்திய கானாபதோஷ் மர்கத் பழங்குடியினத்தவர் ஆசிய கண்டத்தின் பல ஆயிரம் மைல்கள் பரப்பளவிலான சமவெளிகளில் வசித்து வந்தனர். மனைவியைத் தேடி நீண்ட பயணம் மேற்கொண்ட தைமூஜின் என்னும் செங்கிஸ்கான், ஆட்களையும் திரட்டினார்.
"அவர்கள் என்னுடைய வீட்டை மட்டும் சூறையாடவில்லை, என்னுடைய மனதையும் சூனியமாக்கிவிட்டார்கள்" என்று சொல்லி வருந்துவார் செங்கிஸ்கான்.
இறுதியில் சகாக்களின் உதவியுடன் தனது மனைவியை மீட்டுவந்தார் செங்கிஸ் கான். இந்த சம்பவம் அவரது வாழ்வில் மிக முக்கியமானது என்று சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ஏனெனில் இளம் வயதில் மனைவியை தேடி செங்கிஸ் கான் மேற்கொண்ட பயணமும், அனுபவமுமே பிற்காலத்தில் அவர் நீண்ட தொலைவு பயணித்து உலகின் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க அவருக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
கடத்தப்பட்ட எட்டு மாதங்கள் கழித்து மீட்கப்பட்ட போர்தா, சில மாதங்களிலேயே ஜோசியை பெற்றெடுத்தார்.
ஜோசியின் பிறப்பு பற்றி பல சர்ச்சைகளும் வதந்திகளும் தொடர்ந்தபோதிலும், அதை பொருட்படுத்தாத செங்கிஸ்கான், ஜோசியே தனது மூத்த மகன் என்பதிலும், தனக்கு பிறகு அரியணை ஏறும் உரிமை மூத்த மகனுக்கே உண்டு என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
ஆனால் 40 ஆண்டுகளுக்கு பிறகு போர்தாவின் வயிற்றில் பிறந்த மகன்களே, மூத்த சகோதரனின் பிறப்பு பற்றி கேள்வி எழுப்பியதை செங்கிஸ் கானால் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை.

சகோதரர்களுக்கு இடையே சண்டை
தம்பி சுக்தாயி தன் மீது சுமத்திய அவதூறை பொறுக்க முடியாத ஜோசி, தம்பியின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்டார். இருவருக்கும் இடையே மூண்ட சண்டையை தீர்த்துவைக்க அனைவரும் முயன்றனர்.
மூத்த மகன் ஜோசி அரியணை ஏறுவதற்கு ஏற்படக்கூடிய தடைகளை உணர்ந்து கொண்டார் செங்கிஸ் கான். சகோதரர்கள் இடையிலான மோதல் நாட்டை பிளவுப்படுத்தும் என்று செங்கிஸ்கான் கவலையடைந்தார்.
மூத்த சகோதரர்கள் இருவரையும் விடுத்து, மூன்றாவது மகனான ஓக்தாயியை அரசராக்கலாம் என்று இரண்டாவது மகன் சுக்தாயி முன்வைத்த திட்டத்திற்கு சகோதரர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
இது செங்கிஸ் கானுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினாலும், வேறு வழியில்லை என்ற நிலைமை ஏற்பட்டது. அந்த சம்பவத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு பிறகு இன்று செங்கிஸ்கானின் வழித்தோன்றல்கள் கோடிக்கணக்கில் இருப்பதாக சொல்லப்பட்டாலும், அவரது மூத்த மகனின் பிறப்பு பற்றி, பிற மகன்களே கேள்வி எழுப்பியது வரலாற்றின் வினோதமான முரண்பாடு.
1227 ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று தனது இறுதி மூச்சை விட்ட செங்கிஸ்கானின் வாழ்க்கையில் அவர் அனுபவித்த மிகப் பெரிய துக்கமாக இதுதான் இருந்திருக்கும்.
பிற செய்திகள்:
- காஷ்மீர் இந்துக்கள், சீக்கியர்களுக்கு அச்சமூட்டும் தொடர் கொலைகள் - வரலாறு திரும்புகிறதா?
- செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததா? - சரியான இடத்தைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்
- ஐபிஎல் 2021: கோலி அணியின் பரத் நிகழ்த்திய கடைசிப் பந்து மாயாஜாலம்
- மனநல சிகிச்சை: ஒரு நபருக்கு ஏழை நாடுகளைவிட 650 மடங்கு செலவிடும் பணக்கார நாடுகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













