இந்தோனீஷியா விமான விபத்து: 12 வயது சிறுவனைத் தவிர பயணித்த அனைவரும் பலி
இந்தோனீஷியாவில் எட்டு பேர் உயிரிழந்த ஒரு விமான விபத்தில் கடுமையாக சேதமடைந்த விமானத்தின் இடிபாடுகளில் சிக்கியிருருந்த ஒரு 12 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.

பட மூலாதாரம், AFP
ஞாயற்றுகிழமை காலையில் பப்புவா நியு கினியாவுடனான எல்லையருகேயுள்ள ஒரு மலைப்பகுதியில் விமானத்தின் இடிபாடுகளில் இடையே அந்தச் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான்.
கடந்த சனிக்கிழமை மதியம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட பிளாட்டஸ் விமானத்தில் அந்த சிறுவனும் பயணித்திருந்தான்.
இந்த தனியார் விமானம் டிமோனிம் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமானது. தனா மெராவில் இருந்து ஆக்சிபில் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய இவ்விமானம், தரையிறங்க வேண்டிய நேரத்திற்கு முன்பு கட்டுப்பாட்டை இழந்தது. இரண்டு விமான பணியாளர்கள் உட்பட ஒன்பது பேர் இதில் பயணித்தனர்

பட மூலாதாரம், AFP
ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்தின் செய்தியின்படி, ''ஒரு வெடிச்சத்தத்துக்கு பிறகு ஒரு பெருங்கத்தலையும் அருகிலிருந்த கிராமவாசிகள் கேட்டனர்.''
விமானம் விபத்துக்குள்ளானதன் காரணத்தை அறிய விசாரணை நடந்துகொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பப்புவா மாகாணத்தை பொறுத்தவரையில் மலைப்பாங்கான பகுதியாக இருப்பதால் விமானப் பயணம்தான் அப்பகுதியை சுற்றி வருவதற்கு ஒரே வழியாக இருக்கிறது.

இந்நிலையில், வானிலை நிலவரம் அடிக்கடி மாறக்கூடியதாக இருப்பதால் விமானப் பயணம் செய்வதற்கும் ஏற்ற சூழ்நிலை நிலவுவதில்லை.
மூன்று வருடங்களுக்கு முன்னதாக, ஆக்சிபில் அருகே 54 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு விமானம் விபத்துக்குளானதில் அதில் பயணித்த அனைவரும் இறந்தது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












