You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சௌதி அரேபியா: ஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது
சௌதி அரேபியாவில் ஒரு இசை கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த ஆண் பாடகரை மேடை மீதேறி சென்று கட்டிப்பிடித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு நகரமான டைஃபில் நடைபெற்ற ஒரு விழாவில் மஜீத் அல் மொஹாண்டிஸ் என்ற அந்த பாடகர் மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது திடீரென்று ஓடிச்சென்ற அந்த பெண் அவரை கட்டிப்பிடித்தார்.
அந்த பெண் மேடைக்கு ஓடிச்செல்வதையும், மொஹாண்டிசை கட்டிப்பிடிப்பதையும் மற்றும் அவரை அங்கிருந்து அகற்றுவதற்கு பாதுகாவலர்கள் முயற்சிப்பதையும் விளக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தங்களுக்கு தொடர்பில்லாத ஆண்களுடன் பெண்கள் பொதுவெளியில் ஒன்று கூடுவதற்கு சௌதி அரேபியாவில் அனுமதி இல்லை.
இரானில் பிறந்தவரும், சௌதி அரேபிய குடியுரிமை பெற்ற பாடகருமான மொஹாண்டிஸ் இந்த சம்பவத்திற்கு பிறகு தொடர்ந்து பாடினார். ஆனால், இந்த சம்பவம் குறித்து அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்த செயலை செய்த பெண் மீது தொல்லை வழக்கு தொடுப்பதா, வேண்டாமா என்பது குறித்து வழக்கறிஞர் முடிவு செய்வார் என்று முன்னணி சௌதி அரேபிய நாளிதழான ஒகாசியிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுவிலக்கு, ஆடை அணிதல் மற்றும் பாலினம் பிரித்தல் போன்ற ஒழுக்கம் சார்ந்த சட்டங்கள் சௌதி அரேபியாவில் கடுமையாக பின்பற்றப்படுகின்றன.
பொது நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க கூடாது என்று நீண்டகாலமாக இருந்து வந்த கட்டுப்பாடு கடந்த ஆண்டு சௌதியின் இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்த சீர்திருத்த நடவடிக்கையின்போது அகற்றப்பட்டது.
எண்ணெய் வளத்தை சார்ந்து இருக்கும் நாடான சௌதி அரேபியாவில், கலாசார மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான செலவுகளை தற்போதுள்ள 2.9 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக வரும் 2030ஆண்டிற்குள் அதிகரிக்கும் நோக்கத்தை அந்நாடு கடந்தாண்டு வெளியிட்டிருந்தது.
கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து பெண்கள் பொது நிகழ்ச்சிகள் மற்றும் கால்பந்து போட்டிகளில் கலந்துகொள்வதற்கு சௌதி அரேபியாவில் அனுமதி வழங்கப்பட்டது. மேலும், கடந்த மாதம் பெண்கள் கார் இயக்குவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பெண்கள் மீதான ஆடை கட்டுப்பாட்டு விதிகள் அப்படியே இருக்கின்றன. பாடகரை கட்டிபிடித்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள பெண் கூட அப்போது கண்கள் மட்டுமே தெரியும் ஹிஜாப் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :