5,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிமனிதனின் கடைசி உணவு என்ன?

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

பனிமனிதனின் கடைசி உணவு

சுமார் 5,300 ஆண்டுகளுக்கு வாழ்ந்த பனிமனிதனின் கடைசி உணவு என்ன என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இத்தாலியில் 1991ஆம் ஆண்டு பனிப்பாறைகளுக்கு நடுவில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த நபரின் உடலை ஆய்வு செய்ததில், ஆட்டுக் கொழுப்பு, மான் கறி, பழங்கால கோதுமை மற்றும் புதர்களில் விளையும் சில தாவரங்கள் ஆகியவற்றை அவர் கடைசியாக உண்டது தெரியவந்தது.

அந்த உணவில் தற்போதைய வழக்கமான 10%ஐ விடவும் அதிகமான கொழுப்பு இருந்தது. ஓட்ஸி எனப் பெயரிடப்பட்ட அவரது உணவில் இருந்த கொழுப்பின் அளவு 50%.

போலி கணக்குகளை முடக்கிய ட்விட்டர்

ட்விட்டரில் உள்ள போலி கணக்குகளை அந்நிறுவனம் செயலிழக்கச் செய்துள்ளதால், உலகின் பல பிரபலங்களையும் ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் சரிந்துள்ளது.

உலகிலேயே ட்விட்டரில் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டிருந்த அமெரிக்க பாடகி கேட்டி பெரி மற்றுமொரு பாப் பாடகி லேடி காகா ஆகியோரை பின் தொடர்பவர்கள் சுமார் 25 லட்சம் குறைந்துள்ளது.

இதை நம்பிக்கையை கட்டமைக்கும் முயற்சி என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

நாடு திரும்புகிறார் நவாஸ் ஷெரீஃப்

ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் சிறை தண்டனையை எதிர்கொள்ள லண்டனில் இருந்து இன்று பாகிஸ்தான் திரும்புகிறார்.

அவர் வருகையை ஒட்டி லாகூரில் உள்ள அவரது ஆதரவாளர்கள் பல நூறு பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சீனா: வெடிவிபத்தில் 19 பேர் பலி

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் தொழிற்சாலையில் நிகழ்ந்துள்ள வெடிவிபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 12 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டின் அரசு செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்த வெடி விபத்துக்கு காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகவில்லை.

2015இல் டியான்ஜின் நகரில் வேதிப் பொருள் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 173 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :