உலகப் பார்வை: மீண்டும் பரவத் தொடங்கிய எபோலா நோயால் அச்சம்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

மீண்டும் பரவத் தொடங்கிய எபோலா

காங்கோ ஜனநாயக குடியரசில் பரவத் தொடங்கியுள்ள எபோலாவை தடுப்பதற்குரிய பரிசோதனை ரீதியிலான தடுப்பூசி மூலம் ஒரு வாரத்தில் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று நம்புவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் 35 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலை மோசமான நிலையிலுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உறுதிமொழி பெறுவதற்கான பயணம்

இரான் அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகினாலும், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகள் அதற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கூறியதை உறுதிசெய்யும் பயணத்தை இரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சரீப் தொடங்கியுள்ளார்.

சுற்றுப் பயணத்தில் முதலாவது நாடாக அவர் சீனாவுக்கு சென்றுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் வலியுறுத்தல்

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய தூதரகத்தை திறப்பதற்காக அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகளான இவாங்கா டிரம்ப் தனது கணவருடன் இஸ்ரேல் சென்றுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்காவை போன்று மற்ற நாடுகளும் தங்களது தூதரகங்களை ஜெருசலேமிற்கு மற்ற வேண்டுமென்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.

சீனாவுக்கு உதவும் டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவின் ஏற்றுமதி தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான இசட்.டி.இ-யை (ZTE) மூடப்படும் நிலையிலிருந்து அந்நிறுவனத்தை காப்பதற்கு உதவுமாறு அமெரிக்க வர்த்தகத் துறையை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

சீனாவில் "பல வேலைகள் ஆபத்தான நிலையில்" உள்ளது தொடர்பாக தான் சீன அதிபருடன் சேர்ந்து பணியாற்றிவருவதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: