You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் புதிய வாரிசு: கேம்பிரிட்ஜ் கோமகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது
பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் புதிய வாரிசு பிறந்துள்ளது. கேம்பிரிட்ஜ் கோமகள் கேத்தரின் திங்கள்கிழமை ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
மத்திய லண்டனில் லிண்டோ விங் ஆஃப் செயின்ட் மேரிஸ் மருத்துவனையில் பிறந்துள்ள இந்த ஆண் குழந்தை பிரிட்டிஷ் அரியணைக்கான வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும். மேலும் இக்குழந்தை அரசி இரண்டாம் எலிசபெத்தின் ஆறாவது கொள்ளுப் பெயரப் பிள்ளை ஆகும்.
இந்தப் புது வரவானது கேம்பிரிட்ஜ் கோமகன் மற்றும் அவரது மனைவி கேத்திரினுக்கு பிறந்த மூன்றாவது குழந்தை. பிரிட்டிஷ் நேரப்படி 11.01 மணிக்குப் பிறந்த இக்குழந்தை 8 பவுண்டு 7 அவுன்ஸ் எடையிருந்தது.
கேத்தரினும் இன்னும் பெயரிடப்படாத அவரது மகனும் நலம் என கென்சிங்டன் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறக்கும்போது வில்லியம் உடனிருந்தார் என அரண்மனை கூறியுள்ளது.
வில்லியம் மற்றும் கேத்தரின் இருவரின் குடும்பங்களுக்கும் குழந்தை பிறந்த செய்தி தெரியப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் இந்தச் செய்தியால் மகிழ்ந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திங்களன்று காலை ஆறு மணியளவில் கோமகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை பிறந்த செய்தி பகல் 1 மணிக்கு பிறகு அறிவிக்கப்பட்டது.
குழந்தைக்கு இன்னமும் பெயர் அறிவிக்கப்படவில்லை.
மேரி, அலைஸ், அலெக்ஸான்ட்ரா, எலிசபெத் மற்றும் விக்டோரியா ஆகியவை பெண் குழந்தைக்கும் ஆர்தர், ஃப்ரெட்ரிக், ஜேம்ஸ், ஃபிலிப் ஆகியவை ஆண் குழந்தைக்கும் பெயர் வைக்க முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.
வில்லியம்- கேத்தரின் தம்பதியருக்கு பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே டிவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்