"சிரியா 'ரசாயன' தாக்குதல்: சம்பவ இடத்துக்கு புறப்பட்டது நிபுணர் குழு"

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடந்ததாக சந்தேகப்படும் இடத்திற்கு சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு நிறுவனத்தின் நிபுணர்கள் புறப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவன குழு சனிக்கிழமையன்று தலைநகர் டமாஸ்கஸின் அருகிலுள்ள டூமா நகருக்கு புறப்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது.

பலர் பலியாக காரணமான ஏப்ரல் 7ம் தேதி நடத்தப்பட்ட இந்த ரசாயன வான்வழி தாக்குதலை சிரியா அரசு நடத்தியுள்ளதாக மேற்குலக நாடுகள் கூறுகின்றன.

கிளர்ச்சியாளர்கள் வெளியேறிய பின்னர் டூமா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிரியாவும், ரஷ்யாவும் இதனை மறுத்துள்ளன.

40க்கு அதிகமானோர் பலியாக காரணமாக இருந்த ரசாயன தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியா அரசு தளங்களின் மீது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூட்டாக வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்த நகரில் பயணம் மேற்கொண்டு சோதனை நடத்த 9 பேர் அடங்கிய ரசாயன ஆயுத ஒழிப்பு நிறுவனத்தின் குழு ஒரு வாரமாக சிரியாவின் தலைநகரில் காத்திருந்துள்ளது.

புதன்கிழமை டூமா நகருக்குள் இந்த குழுவினர் செல்ல இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இந்த சம்பவ இடங்களை சோதனை செய்த ஐக்கிய நாடுகள் அவையின் ஆபத்து சோதனை குழுவினர் விடுத்த தாக்குதல் எச்சரிக்கைக்கு பின்னர், அவர்களின் பயணம் தாமதமாகியது.

ஆனால், நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரட்டை ரசாயன தாக்குதல்களின் சான்றுகள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று மேற்குலக அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சிரியா தாக்குதல்: நடந்தது என்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: