ஆபாச கருத்து விவகாரம்: எஸ்.வி. சேகர் வீடு மீது தாக்குதல்

தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்த பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகருமான எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பத்திரிகையாளர்கள் பா.ஜ.க. அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில பத்திரிகையாளர்கள் அவரது வீட்டின் மீதும் கல்லெறிந்தனர்.

வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியளவில் தமிழக பாரதீய ஜனதாக் கட்சி அலுவலகம் அமைந்திருக்கும் வைத்தியராம் தெரு முன்பாக பெரும் எண்ணிக்கையில் பத்திரிகையாளர்கள் கூடினர். எஸ்.வி. சேகர் மீதும், தொடர்ந்து ஆபாச கருத்துக்களைத் தெரிவித்துவரும் அக்கட்சியின் தேசியச் செயலர் எச். ராஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அதன் பிறகு, சேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தி வீக் இதழின் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் சார்பில் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் ஆணையர் கணேசமூர்த்தியிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், ஒரு சில பத்திரிகையாளர்கள் பட்டினப்பாக்கத்தில் அமைந்துள்ள எஸ்.வி. சேகர் வீட்டின் முன்பாகக் கூடி அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பிறகு திடீரென அவரது வீட்டின் மீது கற்களை வீசித் தாக்கினர்.

இதையடுத்து இவர்களை போலீசார் கைது செய்து, பிறகு விடுவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: