You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சர்ச்சை ஆகும் இம்ரான்கானின் 'சிவன்' அவதாரம்
- எழுதியவர், ஷாஹ்ஜாத் மலிக்
- பதவி, பிபிசி, இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போது அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கும் இம்ரான் கானின் 'சிவ அவதார' புகைப்படங்கள் பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைகளை எழுப்பியிருக்கின்றன.
பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கானை, இந்து மதக் கடவுளாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்டது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
புதன்கிழமையன்று பாகிஸ்தானிய நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துக்கொண்ட பிரதான எதிர்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி உறுப்பினர் ரமேஷ் லால், ஆளும் முஸ்லீம் லீக் (நவாஸ்) ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் இம்ரான் கானின் புகைப்படத்தில் அவரை இந்துக் கடவுள் சிவனாக சித்தரித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தலால் சௌத்ரி விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் சர்தார் அயாஜ் சாதிக் உத்தரவிட்டுள்ளார்.
இந்துக்களின் மத உணர்வுகள்
இம்ரான் கானுக்கு எதிராக செயல்படுவதாக நினைத்துக்கொண்டு ஆளும் கட்சியின் உறுப்பினர்கள், இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்திவிட்டதாக ரமேஷ் லால் தெரிவித்தார்.
எந்தவொரு நபரின் மத உணர்வையும் காயப்படுத்தக்கூடாது என்று அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆளும் கட்சி உறுப்பினர்களும், அதன் சமூக ஊடகக் குழுவினரும் பிற மதங்களை சேர்ந்த மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக அவர் ஆளும் கட்சியினர் மீது குற்றம் சுமத்துகிறார்.
முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துபவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகளைப் போன்ற நடவடிக்கைகளை இந்த கீழ்த்தரமான செயலை செய்தவர்கள்மீதும் எடுக்க வேண்டும் என்று ரமேஷ் லால் கோரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரத்தை சைபர் செல்லுக்கு அனுப்பிய நாடாளுமன்ற சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்துக்களின் மத உரிமைகளை பாதுகாப்பதை உறுதி செய்வது தொடர்பாக கடந்த சில நாட்களாக பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் தீவிரம் காட்டுகிறது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சக்வால் மாவட்டத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கடாஸ் ராஜ் சிவன் கோவிலின் மோசமான நிலையை கண்ட அந்நாட்டு உச்ச நீதிமன்றம், தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அதுமட்டுமல்ல, அந்த புனிதத் தலத்தை பராமரிப்பது உட்பட பல நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்