You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிரியா: முதல் நாளே சீர்குலைந்து போன தற்காலிக போர் நிறுத்தம்
சிரியாவில் தற்காலிக போர் நிறுத்தம் முதல் நாளே சீர்குலைந்து போனது.
ஐந்து மணி நேர போர் நிறுத்தம்
சிரியாவின் கிழக்கு கூட்டாவின் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில் தினமும் ஐந்து மணிநேரம், தாக்குதலை நிறுத்தி வைக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆணையிட்டு இருந்தார்.
இந்த போர் நிறுத்தம் செவ்வாய்கிழமை தொடங்கும் என்றும், மேலும், பொதுமக்கள் வெளியேறுவதற்கான "மனிதாபிமான பாதைகள்" உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த போர் நிறுத்தம் முதல் நாளே சீர்குலைந்து போனது.
பரஸ்பர குற்றச்சாட்டு
போர் நிறுத்தம் சீர்குலைந்து போனதற்கு எதிர்தரப்புதான் காரணம் என்று சிரியா கிளர்ச்சியாளர் தரப்பும், அரசு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மக்கள் வெளியேறும் பாதை மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக சிரியா அரசை ஆதரித்துவரும் ரஷ்யா குற்றஞ்சாட்டி உள்ளது.
மக்களை வெளியேற்றுவதற்காகவும், மருத்துவ உதவிகளை மேற்கொள்வதற்காகவும் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்தத்தின் போது, சிரியா அரசு படைகள் வான் தாக்குதல் தொடுத்ததாக, பிரிட்டனை சேர்ந்த ஒரு கண்காணிப்புக் குழு கூறி உள்ளது.
ஐ.நா செய்திதொடர்பாளர் ஒருவர், இந்த சண்டையால், தேவையானவர்களுக்கு உதவிகளை செய்ய முடியாமல் போய்விட்டது என்று கூறினார்.
இந்த தற்காலிக போர் நிறுத்தம் புதன்கிழமை காலை முதல் மீண்டும் அமலுக்கு வரும்.
தற்காலிக போர் நிறுத்தம்:
முன்னதாக "எவ்வித தாமதமுமின்றி" 30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை உடனடியாக அமல்படுத்தி, அதனை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.
ஆனால் சண்டையிட்டு வரும் அனைத்து தரப்பினரும் ஐ.நாவின் போர் நிறுத்த தீர்மானத்தை எவ்வாறு அமல்படுத்துவது என்பதை ஒப்புக் கொண்டதால்தான் தீர்மானம் நிறைவேற்றப்படும் என ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லவ்ரோஃப் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்