You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தான் அமைத்த வாக்காளர் மோசடி கமிஷனை தானே கலைத்த டிரம்ப்
சட்டவிரோத வாக்களிப்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க, வாக்காளர் மோசடி கமிஷன் ஒன்றை அமைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது அதனை கலைத்துள்ளார்.
அமெரிக்காவின் பல மாநில அரசுகள், இக்கமிஷனுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை கூறுகிறது.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்காளர்கள் மோசடி நடைபெற்றதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.
தேர்தல் ஆணையம் சான்றிதழ் அளித்து வெளியிட்ட முடிவுகளில், டிரம்பை விட அவரது போட்டியாளர் ஹில்லாரி க்ளின்டன் மூன்று மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.
"வரிசெலுத்துவோரின் பணத்தில், இந்த முடிவில்லாத சட்டப்போராட்டத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக தேர்தல் ஒருங்கிணைப்பிற்கான ஆலோசனை கமிஷனை கலைக்க டிரம்ப் முடிவெடுத்துள்ளார்" என வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் மோசடி கமிஷனை அமைத்தது, இடது சார்புடைய வாக்காளர்களை ஒடுக்கும் சூழ்ச்சியென ஜனநாயகவாதிகள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.
கடந்த தேர்தலில், மக்கள் அளித்த வாக்குகளில் ஹில்லாரி கிளின்டன் வெற்றி பெற்றிருந்தார். அதற்கு பதிலளித்திருந்த டிரம்ப், "சட்டவிரோதமாக வாக்களித்த லட்சக்கணக்கான மக்களின் வாக்குகளை நீக்கினால்" தாம்தான் அதிலும் வெற்றி பெற்று இருப்பேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். சட்டவிரோத வாக்குகள் குறித்த கருத்திற்கு எந்த ஆதாரமும் அவர் அளிக்கவில்லை.
டிரம்பின் இந்த சர்ச்சைக்குரிய கூற்று, மாநில தேர்தல் அதிகாரிகளால் பலமுறை விவாதிக்கப்பட்ட நிலையில், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், அவரது பெயர்கள், முகவரி, மற்றும் அரசியல் தொடர்பு குறித்த தகவல்களை மோசடி கமிஷனுக்கு அளிக்க பல மாநில அரசுகள் மறுத்துவிட்டன.
பிற செய்திகள்
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்