மீண்டும் கண்டறியப்பட்ட ஜாவா பன்றி இனம் மிக அசிங்கமானதா?

பட மூலாதாரம், CHESTER ZOO
- எழுதியவர், விக்டோரியா கில்
- பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி
உலகின் மிக அரிய வகை மற்றும் மிக 'அசிங்கமானதென கருதப்படும்' பன்றியை முதன்முறையாக விஞ்ஞானிகள் காட்டுப்பகுதி ஒன்றில் படம் பிடித்துள்ளனர்.
வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பின் அச்சுறுத்தலில் இருக்கும் 'ஜவான் வார்டி' என்ற பன்றிக்குட்டிகள், ஏற்கனவே அழிந்துவிட்டதாக நம்பப்பட்டது.
இந்நிலையில், இந்தோனீசியா நாட்டில் உள்ள ஜாவா தீவுகளின் காட்டுப்பகுதி ஒன்றில் இந்த உயிரினங்கள் சில தொடர்ந்து வாழ்ந்து வருவதை கேமரா காட்சிகள் தற்போது வெளிப்படுத்தியுள்ளன.
இந்த அரிய விலங்குகளின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதே தங்களது குறிக்கோள் என இதனை கண்டுபிடித்தக் குழு கூறியுள்ளது.

ஜவான் வார்டி பன்றிகள் இன்னமும் உயிரோடிருப்பது தெரிந்து தானும், தன்னுடன் வேலை பார்க்கும் மற்ற ஊழியர்களும் "மெய் சிலிர்த்து" போனதாக ஆய்வை நடத்திய ஜொஹன்னா ரோட் மர்கொனொ தெரிவித்தார்.
கடைசியாக 2004 ஆம் ஆண்டில் இந்த தாழ்வுநில வனப்பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வு, ஜவான் பன்றிகளின் எண்ணிக்கை "அபாயகரமான அளவில் குறைந்து வருவதை" வெளிப்படுத்தியது.
"பெரும்பாலான அல்லது இந்த பன்றிகளின் இனமே அழிந்திருக்கும் என்ற கவலையில் இருந்தோம்" என பிபிசியிடம் பேசிய ஜொஹன்னா கூறினார்.
மனிதர்களுக்கும் பன்றிகளுக்கும் இடையேயான மோதல்
தடித்த முடி கொண்ட இந்த பன்றிகள் பார்ப்பதற்கு அழகாக இல்லை என்றாலும், காடுகளின் சூழலை பாதுகாப்பதில் இவ்விலங்குகளின் பங்கு முக்கியமானவை என்கிறார் ஜொஹன்னா. தனக்கான உணவை தேடும் போது, மண்ணை உழுது விதைகளை அவை விதைக்கின்றன.

இன்தோனீஷியாவில், அதிக மக்கள் தொகை கொண்ட ஜாவா தீவுகளின் வெப்பமண்டல காடுகளில், மனித இனத்தின் அழுத்தமும் இவற்றிற்க்கு அதிகமாகி வருகிறது.
விளைநிலங்கள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியால் ஜவான் பன்றிகள் தங்கள் வாழ்விடத்தை இழந்து வருகின்றன. அதோடு, மனிதர்களுடனான நேரடி மோதல்களுக்கும் இவை ஆளாகின்றன. விளைநிலங்களின் பயிர்களை மேய்வதாக சில வேட்டையாடப்படுகின்றன.
"விளையாட்டு பொழுதுபோக்கிற்காகவும் ஜவான் பன்றிகளை சிலர் வேட்டையாடுவதும் பெரும் பிரச்சனையாக உள்ளதென" கூறுகிறார் ஜொஹன்னா.

ஆய்வு நடத்தப்பட்ட ஏழு பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்ருந்த மோஷன் கேமராக்களில், மூன்றில் மட்டுமே ஜவான் வார்டி பன்றிகள் தென்பட்டன.
"இவை இன்னமும் அழியும் அபாய நிலையில் உள்ளதை இது காட்டுகிறது. நாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இவை இல்லாமலேயே போய்விடும்" என்று கவலை தெரிவிக்கிறார் ஜொஹன்னா. இது ஒரு எச்சரிக்கை மணி என்கிறார் அவர்.
நல்ல செயல்திறன் கொண்ட சில பாதுகாப்பு திட்டங்களை வடிவமைக்க முடிந்தால் ஜவான் பன்றிகள் வாழும் என்கிறார் பிபிசியிடம் பேசிய ஜொஹன்னா. தம்மைப் பொறுத்தவரை அவை அழகானவை என்றும் கூறுகிறார் ஜொஹன்னா.
நம் சுற்றுச்சூழலில் உள்ள அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மரம், ஒவ்வொரு செடி, விலங்கு என அனைத்தும் ஒன்றோடு ஒன்று சார்ந்துதான் உள்ளன.
"இதில் ஒன்று பாதிக்கப்பட்டால் கூட, மற்றொன்றும் பாதிக்கப்படக்கூடும். இம்மாதிரியான தொடர் வினையில் என்ன நடக்கும் என்பதை நாம் கணிக்க முடியாது," என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












