உயிரிழக்கும் முன் மகன்களுக்காக '40,000 பவுண்டுகள்' திரட்டிய தாய்!

இங்கிலாந்தில், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் மோட்டர் நியூரான் நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தமக்கு பிறகு தனது மகன்கள் மகிழ்ச்சியாக வாழ, 40,000 பவுண்டுளுக்கு மேல் நிதி திரட்டிவிட்டு உயிரிழந்தார்.

பான்புரி என்ற நகரத்தை சேர்ந்த 34 வயதான சாம் கைமால் பேச முடியாது. எனவே, நிதி திரட்டும் வலைத்தளம் மூலமாக தனது நண்பர்களிடம் நிதி வழங்கும்படி கோரிக்கை வைத்திருந்தார்.

திரட்டப்பட்ட நிதியானது, சாமின் இறுதி சடங்குகள், அவர் மகன்களின் விமான கட்டணம், பள்ளி படிப்பிற்கான செலவுகளுக்கு பயன்படுத்தப்படும்.

கடந்த வியாழக்கிழமையன்று சாம் உயிரிழந்ததாக அவரது சகோதரி பிப்பா ஹ்யூஸ் கூறினார்.

தனது இரு மகன்களான ஜோயி மற்றும் ஹேரி அவரது சகோதரி ஹ்யூசுடன் ஆஸ்திரேலியாவில் வாழ வேண்டும் என்பதே சாமின் "கடைசி விருப்பம்".

"ஓராண்டில் பல விடயங்கள் வாழ்க்கையில் மாறுவது திகைப்பூட்டுகிறது. கடந்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாங்களுக்கு நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தோம். இந்த ஆண்டு முழுமையாக மாறிவிட்டது" என்றார் ஹ்யூஸ்.

"அவரை சுற்றி அவரது குடும்பத்துடன் அமைதியான முறையில்" சாம் உயிரிழந்ததாக தோழி சுசானா ஹாவர்ட் தெரிவித்தார்.

"சாம் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளித்தாலும், அவர் மேலும் துன்பப்படாமல் இறந்தது ஆறுதல் அளிப்பதாகவும்" சுசானா கூறினார்.

"நான் உயிரிழக்கப் போவது குறித்து எனக்கு எந்த விதமாக அச்ச உணர்வும் இல்லை. என் மகன்களின் நலன் குறித்து தான் எனக்கு கவலை" என நிதி திரட்டும் வலைதளப் பக்கத்தில் சாம் குறிப்பிட்டிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :