''3,000 ஆண்டுகளாக ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர்''- இஸ்ரேல் பிரதமர்

''3,000 வருடங்களாக ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர்''

பட மூலாதாரம், Getty Images

சமாதானத்தை நோக்கி நகரும் விதமாக, ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர் என்ற உண்மையுடன் பாலத்தீனியர்கள் கட்டாயம் உடன்பட வேண்டும் என இஸ்ரேஸ் பிரதமர் கூறியுள்ளார்.

ஜெருசலேம் 3,000 ஆண்டுகளாக இஸ்ரேலின் தலைநகராக இருக்கிறது. ஜெருசலேம் வேறு எந்த மக்களுக்கும் தலைநகராக இருந்ததில்லை என இஸ்ரேஸ் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்த பிறகு முஸ்லிம்கள் மற்றும் அரபு உலகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் பெஞ்சமின் நெதன்யாகு இக்கருத்தைக் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமையன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகில் வன்முறை மோதல்கள் வெடித்துள்ளன.

ஜெருசலேமில், மத்திய பேருந்து நிலையத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு வீரரைக் கத்தியால் குத்திப் படுகாயப்படுத்திய ஒரு பாலத்தீனியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர்

பட மூலாதாரம், Getty Images

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் உடனான பேச்சுவார்த்தைக்கும் பிறகு பேசிய பெஞ்சமின் நெதன்யாகு,''ஜெருசலேமிற்கும் யூத மக்களுக்கு உள்ள ஆயிரமாயிரம் இணைப்புகளை மறுப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் அபத்தமானது'' என கூறினார்.

''இதைப்பற்றி மிகவும் நல்ல புத்தகமான பைபிளில் படிக்கலாம்'' என கூறினார்.

''எங்கள் புலம்பெயர்ந்த யூத சமூகத்தின் வரலாற்றின் மூலம் இதைப்பற்றி நீங்கள் அறியலாம். ஜெருசலேம் இல்லாமல் வேறு எங்கு இஸ்ரேலின் தலைநகர் இருக்கும்'' என்கிறார் பெஞ்சமின் நெதன்யாகு.

''இந்த உண்மையுடன் விரைவில் பாலத்தீனியர்கள் உடன்பட்டால், விரைவாக நாம் அமைதியை நோக்கி நகரலாம்'' எனவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ்,அமெரிக்க துணை அதிபரான மைக் பென்ஸ் உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது 'துரதிருஷ்டவசமானது' என மைக் பென்ஸின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

''3,000 வருடங்களாக ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர்''

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாலத்தீன போராட்டக்காரரை கைது செய்யும் இஸ்ரேல் பாதுகாப்பு வீரர்

அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எகிப்தின் மூத்த கிறித்துவ மற்றும் முஸ்லிம் மதகுருக்களும், மைக் பென்ஸ் உடனான திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளனர்.

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்ததற்குப் பரவலான கண்டங்கள் எழுந்துள்ளன. ஜெருசலேம் விவகாரத்தில் பல தசாப்தங்களாக அமெரிக்கா காத்துவந்த நடுநிலை, டிரம்பின் நடவடிக்கையால் மாறியுள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலத்தீனியர்களுக்கும் ஜெருசலேம் முக்கியத்துவம் வாய்ந்த இடம். யூதம், இஸ்லாம் மற்றும் கிறித்துவம் ஆகிய மூன்று முக்கிய மதங்களின் புனித தளங்கள் இங்கு உள்ளன.

ஜெருசலேத்தை தனது தலைநகராக இஸ்ரேல் எப்போதும் கருதுகிறது. ஆனால், 1967 போரின் போது கிழக்கு ஜெருசலேத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்ததாக பாலத்தீனியர்கள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :