You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெருசலேம் சர்ச்சை: லெபனானில் அமெரிக்கத் தூதரகம் முன் வெடித்த வன்முறை
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை எதிர்த்து, லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு வன்முறை மோதல்கள் வெடித்துள்ளன.
கருப்புக் கொடி ஏந்திய போராட்டக்காரர்களை தடுக்க, கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கியை அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் பீய்ச்சி அடித்தனர்.
முன்னதாக அமெரிக்காவின் இந்த முடிவிற்கு அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
மத்திய கிழக்கு நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தையின் தரகராக அமெரிக்காவை இனி நம்ப முடியாது எனவும் அரபு நாடுகள் விமர்சித்திருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஆக்கர் மாவட்டத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் உள்ள சாலையில் தீவைத்து, கற்களை எரிந்தனர்.
இந்நிலையில், தூதரகத்திற்கு செல்லும் பிரதான சாலையை தடுப்பரண்கள் வைத்து பாதுகாப்பு படையினர் தடுத்துள்ளனர்.
எனினும், முட்கம்பியில் ஏறிய சில ஆர்ப்பாட்டக்காரர்கள் தூதரகத்திற்குள் செல்ல முயற்சித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கருப்பு வெள்ளை துண்டுகள் அணிந்திருந்த அவர்கள், அதிபர் டிரம்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் டிரம்பின் உருவ பொம்மைக்கு தீ வைத்தனர்.
லெபனான், ஆயிரக்கணக்கான பாலத்தீன அகதிகளின் வாழ்விடமாக திகழ்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்