ஆடம்பர சொகுசு விடுதியில் சிறை வைக்கப்பட்டுள்ள செளதி இளவரசர்கள்

ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டல்

"உலகின் சிறந்த இடங்களில் மறக்க முடியாத பயண அனுபவங்கள் தரக்கூடிய ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள்" என்ற பெயரை பெற்றது ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டல்கள்.

அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் முக்கிய நபர்கள் உயர்வகுப்பு சங்கிலி ஹோட்டல்களான ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் தங்குவார்கள். பணக்காரர்களின் இரண்டாவது வீடு போல இந்த ஹோட்டல்கள் இருக்கிறது.

ஆனால், செளதி தலைநகரான ரியாத்தில் உள்ள ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டல் தங்கமுலாம் பூசப்பட்ட சிறையாக மாறியுள்ளது எனச் செய்திகள் கூறுகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு முதல்முறையாக செளதி வந்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கியிருந்த இந்த ஹோட்டல், தற்போது உலகின் மிக ஆடம்பரமான சிறையாக மாறியுள்ளது.

தீவிர பழமைவாத ராஜ்ஜியமான செளதியில், ஊழலுக்கு எதிரான களையெடுப்பு என செளதி அதிகாரிகள் விவரிக்கும் நடவடிக்கையில் 11 இளவரசர்களும், நான்கு அமைச்சர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செளதி இளவரசர்களுக்காக 'தங்கமுலாம்' சிறையாக மாறிய சொகுசு ஹோட்டல்

பட மூலாதாரம், Reuters

தற்போது கைது செய்யப்பட்டவர்களில், உலகம் முழுக்க அறியப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் இளவரசர் அல்வலித் பின் தாலாலும் அடக்கம்.

நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஒரு காணொளி, ரியாத் ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலின் தற்போதைய நிலையைக் காட்டுகிறது.

ஹோட்டலின் அரங்கம் ஒன்றில் சிலர் போர்வைகளை போர்த்தியபடி பாயில் படுத்திருப்பதை இந்த காணொளி காட்டுகிறது. அநேகமாக அவர்கள் காவலர்களாக இருக்கலாம்.

ஒரு ராணுவ துப்பாக்கியும், சீருடை அணிந்த நபர்களும் காணொளியில் காணப்படுகின்றனர்.

கைது செய்யப்பட்ட உலக கோடீஸ்வர இளவரசர் அல்வலித் பின் தாலால்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட உலக கோடீஸ்வர இளவரசர் அல்வலித் பின் தாலால்

ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் தங்கியிந்த விருந்தினர்கள், சனிக்கிழமை மாலை ஹோட்டலின் மத்திய இடத்திற்குக் கூடுமாறு கூறப்பட்டதாகவும், பிறகு செளதியின் தலைநகரில் உள்ள வேறு ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டதாகவும் தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

சம்மந்தப்பட்டவர்களைச் சிறையில் அடைக்கவில்லை என்றும், இதுவே 'கண்ணியான தீர்வு' என்றும் செளதி அதிகாரிகள் கூறியுள்ளதையும் தி கார்டியன் மேற்கோள்களில் கூறியுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று ஹோட்டல் அறைகளைப் பதிவு செய்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் இச்செய்திகளை நிரூபிக்கின்றன. வியப்பில்லாமல், அறைகளைப் பதிவு செய்வதற்கான முயற்சி பலனற்றதாக முடிந்தது.

செளதி இளவரசர்களுக்காக 'தங்கமுலாம்' சிறையாக மாறிய சொகுசு ஹோட்டல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலின் உட்புறம்

நவம்பர் மாதம் எந்த அறையும் காலியாக இல்லை என ரியாத் ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் வலைத்தளம் கூறுகிறது. ஆனால், டிசம்பர் மாத மத்தியில் சில நாட்கள் இருவர் தங்கும் அறை ஒன்றினை பதிவு செய்யலாம் என பரிந்துரைக்கிறது.

ஆனால், விரைவிலே அறை பதிவு வசதி மறைந்துவிட்டது. எதிர்வரும் காலத்திற்கான புதிய வியாபாரத்தால் ஹோட்டலில் அறைகள் எதுவும் காலியாக இல்லை என வலைத்தளம் கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :