தற்காலிகமாக செயலிழந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கு வியாழனன்று சில நிமிடங்களுக்கு தற்காலிகமாக செயலிழந்தது. ஆனால், உடனடியாக கணக்கு மீட்டெடுக்கப்பட்டதாக சமூக வலைதளமான ட்விட்டர் கூறியுள்ளது.

@realdonaldtrump என்னும் டொனால்டு ட்ரம்பின் கணக்கு, "ஒரு ட்விட்டர் பணியாளரின் மனித பிழை காரணமாக கவனக்குறைவாக செயலிழந்தது" என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

ட்ரம்பின் கணக்கு 11 நிமிடங்கள் செயலிழந்த நிலையில் இருந்ததாகவும், அதுகுறித்த விசாரணையை தற்போது தொடங்கியுள்ளதாகவும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.

ட்விட்டரில் தீவிரமாக இயங்கிவரும் டிரம்பை 41.7 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இதுகுறித்து அவர் கருத்தேதும் தெரிவிக்கவில்லை.

வியாழக்கிழமை மாலையில் டிரம்பின் கணகை பார்க்க வந்தவர்களுக்கு, "மன்னிக்கவும், அந்த பக்கம் இல்லை!" என்று ஒரு செய்தியை மட்டுமே காண முடிந்தது.

கணக்கை மீட்டெடுக்கப்பட்ட பின்னர், டிரம்பின் முதல் ட்வீட் குடியரசுக் கட்சியின் வரி குறைப்பு திட்டத்தை குறித்து இருந்தது.

அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ கணக்கான @POTUS பாதிக்கப்படவில்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :