மால்டா பெண் பத்திரிக்கையாளர் கொலைக்கு நீதிகேட்டு ஆயிரக்கணக்கானோர் பேரணி.

பட மூலாதாரம், Wales News Service
பத்திரிக்கையாளர் டஃப்னே கருனானா கலீட்சியாவின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மால்டாவில் பேரணியில் ஈடுபட்டனர்.
கடந்த திங்கட்கிழமை, டஃப்னே கார்குண்டு மூலம் கொல்லப்பட்டார். ஊழலில் ஈடுபட்டதாக பல முக்கிய அரசியல்வாதிகள் மீது இவர் குற்றம்சாட்டி தனது வலைப்பக்கத்தில் எழுதினார்.
இந்த பேரணியில் இருந்து சில அரசியல்வாதிகள் ஒதுங்கியே இருந்தனர். பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் இந்த பேரணியில் பங்கேற்கவில்லை.
டஃப்னேவின் குடும்பத்தினருக்கு தான் பங்கு கொள்வதில் விருப்பமில்லை என தெரிவித்த பிரதமர் ஜோசப் மஸ்கட், `நான் எங்கு இருக்க வேண்டும், இருக்க கூடாது என்று எனக்கு தெரியும். நான் போலியல்ல` என்றார்.
`சர்ச்சைகளை கிளப்ப வேண்டாம்` என எதிர்கட்சி தலைவர் ஏட்ரியன் டெலியாவும் நிகழ்ச்சியில் பங்குகொள்ளவில்லை.
பனாமா பேப்பர் ஊழல் செய்திக்கு வழி அமைத்துகொடுத்த, டஃப்னேவின் செய்தி அறிக்கையில், ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இந்த இரு தலைவர்களும் குறிவைக்கப்பட்டு இருந்தனர்.

பட மூலாதாரம், Reuters
இவரின் கொலை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 1.2மில்லியன் டாலர் சன்மானம் என அரசு அறிவித்துள்ளது.
இந்த கண்டன பேரணியில், அதிபர் மேரி-லூசி கலந்துகொண்டார். இதில் பங்கேற்ற மக்கள், `பத்திரிக்கையாளர்களை மவுனமாக்க முடியாது` , `தவறான வழியில் நடப்பவர்கள் எல்லா இடத்திலும் உள்ளனர்` என்பன உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி இருந்தனர்.
ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் பேசிய பெண் கூறுகையில், `அதிகாரிகளின் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளது` என்றார். கமீலோ பேஸ் என்பவர், அரசியல்வாதிகள் `முதலைக் கண்ணீர்` வடிக்கின்றனர் என்றார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












