வட கொரியா தலைவர் கிம் கடந்த வாரம் அதிக முறை உச்சரித்த வார்த்தை என்ன?

பட மூலாதாரம், AFP/KCNA VIA KNS
வடகொரியாவில் கடந்த வாரம் நடந்த ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் பேசிய கிம் ஜாங் உன் தம் தங்கைக்கு முக்கிய பதவி அளித்தது நமக்கு தெரியும். அந்த நிகழ்வில், தான் நாட்டின் எதிர்காலத்திற்காக, எதற்கெல்லாம் முன்னுரிமை அளிக்கப் போகிறார் என்பது குறித்தும் அவர் பேசி இருக்கிறார். அவர் எதற்கு முன்னுரிமை அளிக்கப்போகிறார் என்று தெரியுமா?
கொஞ்சம் யோசியுங்கள்.
என்ன யோசித்து விட்டீர்களா?
என்ன யோசித்தீர்கள்?
அணு ஆயுதம் என்றுதானே ?
இல்லை.
அது பொருளாதாரம்.
அந்த நிகழ்வில் அவர் பேசியதன் முழுமையான ஆங்கில வடிவம் கிடைப்பது கடினமாக இருந்தது. அதனால், வட கொரியாவின் அரசு ஊடகமான கெ.சி.என்.ஏ வில் உள்ள தகவல்களை சேகரித்தோம்.
அந்த நிகழ்வில் அவர் ஆற்றிய உரை, அந்த நாட்டின் தலைவர் எதற்கெல்லாம் முன்னுரிமை அளிக்க போகிறார் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியது.
அந்த நிகழ்வில். அணு ஆயுதம் குறித்து பேசியதை விட, இரண்டு மடங்கு பொருளாதாரம் குறித்து பேசி இருந்தார்.
என்ன நடந்துக் கொண்டிருக்கிறது வட கொரியாவில்?
பொருளாதாரம் குறித்து மீண்டும் மீண்டும் அவர் பேச வேண்டிய தேவை என்ன?
தடைகளுக்கும் பிழைத்தலுக்குமான போராட்டம்
மேற்குலகம் தமது நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதித்திருந்தாலும், வட கொரியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக கிம் ஜாங் அன் அன்றைய தமது உரையில் குறிப்பிட்டு இருந்தார்.
இது அவரது விருப்பமாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், உண்மையில் தரவுகள் அவ்வாறாக இல்லை.
ஆம், பொருளாதார தடைகள் வட கொரியாவின் பொருளாதாரத்தை பாதிப்படைய செய்திருக்கிறது.
வட கொரியாவின் பொருளாதாரம் குறித்த நம்பகமான தரவுகளை பெறுவது கடினமான ஒரு விஷயம்தான் என்றாலும், கிடைத்த தரவுகளை வைத்து பார்க்கும் போது, அந்த நாட்டின் எரிவாயு விலை ஸ்திரமற்ற நிலையில் இருப்பதையும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்திருப்பதையும் காண முடிகிறது.

பட மூலாதாரம், AFP/Getty images
இந்த விலை உயர்வானது, அந்த நாட்டின் மக்களை பாதிப்படையச் செய்திருக்கிறது.
சியோலில் என்னிடம், வட கொரியாவின் பொருளாதாரம் குறித்து `அன்வீலிங் தி நார்த் கொரியன் எக்கானமி` என்ற புத்தகத்தை எழுதிய பியாங் இயான் கிம், "வட கொரிய மக்களின் பொருளாதார நிலை, முன்பைவிட மேம்பட்டு இருக்கிறது" என்று கூறினார்.
தொண்ணூறுகளுக்கு பிறகு, வட கொரிய மக்களின் வாங்கும் திறன் அதிகரித்து இருக்கிறது. இப்போது பொருளாதார தடையால், அந்த மக்களின் வாங்கும் திறன் குறைந்ததென்றால், அந்த பணக்காரர்கள் மற்றும் குடும்பஸ்தர்கள் வருத்தமடைவார்கள். இது அந்த நாட்டின் அதிபர் கிம்முக்கும், மக்களுக்கும் ஒரு இடைவெளியை உண்டாக்கும். மக்களை அவரிடமிருந்து பிரிக்கும். இது அவரது அரசியல் பாதுகாப்பிற்கே ஆபத்தாக முடியும்."
ஆக, இந்த பொருளாதார தடை, அந்த தேசத்தின் பொருளாதாரத்தை சீண்டி இருக்கிறது. இது போக போக, கிம்-மின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கும் என்றே தெரிகிறது.
கிம்மின் திட்டம்
"கிம் தம் பொருளாதார திட்டமானது `பியூங்ஜின்' கொள்கையின் ஒரு பகுதி. (பியூங்ஜின் என்பது பொருளாதாரத்தையும்,தேசிய பாதுகாப்பு திறனையும் எப்படி ஒன்றாக மேம்படுத்துவது என்பது குறித்த வட கொரிய கொள்கை)" என்கிறார் பியாங் இயான் கிம்.
கிம்மின் அரசியல் எதிர்காலம் `பியூங்ஜின்'-ஐ நம்பிதான் இருக்கிறது.
"சதாம் ஹுசைன் மற்றும் கடாஃபியின் அரசு போல தமது அரசு வீழ்ந்துவிடாமல் இருப்பதற்கு, கிம் அணு ஆயுதத்தை நம்புகிறார். ஆனால், தமது சொந்த தேச மக்களிடம் அந்நியப் படாமல் இருக்க, தம் மக்களை வாழ் நாள் முழுவதும் தமக்கு கடன்பட்டவர்களாக, விசுவசமாக வைத்துக் கொள்ள, குறிப்பாக மேட்டுகுடியினர் மத்தியில் தமது அதிகாரத்தை நிறுவ, அவர் பொருளாதார வளர்ச்சி வேண்டும் என்று நினைக்கிறார்." என்று கூறுகிறார் வபியாங் இயான் கிம்.
தன்னிறைவு சாத்தியாமா?
வட கொரியாவில் ஜுசே என்ற பதம் உள்ளது. அது வட கொரியாவின் சுய நம்பிக்கைக்கு வழிகாட்டும் கொள்கைகள் குறித்தானது.
அது, அந்த நாட்டின் தன்னிறைவான பொருளாதாரத்திற்கான வழிகாட்டி.
ஆனால், வட கொரியாவின் பொருளாதாரம், கடந்த ஒரு தசாப்தத்தில் வெகுவாக மாறிவிட்டது என்கிறார் வட கொரியா லீடர்ஷிப் வாட்ச் அமைப்பைச் சேர்ந்த மைக்கேல் மேடன்.
அவர்களது பொருளாதாரம் சர்வதேச வணிகத்தை நம்பிதான் இருக்கிறது. சர்வதேச வணிகம் இல்லாமல் இனி அவர்களின் வளர்ச்சி என்பதும் இல்லை, தன்னிறைவு என்பதும் இல்லை.

பட மூலாதாரம், Getty Images
சீனா தான் வட கொரியாவின் நெருங்கிய பொருளாதார பங்குதாரராக இருந்தது. ஆனால், இப்போது அந்த தேசமும், வட கொரியாவிடம் மிகக் கடுமையாக நடந்துக் கொண்டு வருகிறது.
அதுவும், வட கொரியா மீது பொருளாதார தடைகளை விதித்து இருக்கிறது.
இப்போது, வட கொரியா தன் பொருளாதார வளர்ச்சிக்காக வேறு வழிகளைதான் தேட வேண்டும்.
இப்படியான சூழலில் வட கொரியாவில் ரஷ்யாவின் பங்கு குறித்து பேசுகிறார் தி டிப்ளோமேட் இணையதளத்தின் ஆசிரியர் அன்கிட் பாண்டா.
சீனாவின் இடத்தை ரஷ்யா நிரப்பும் என்று சொல்லவில்லை. அனால், அவர்கள் இருவரும் நெருங்கி வருகிறார்கள். உதாரணமாக, இரண்டு வாரங்களுக்கு முன்பு, ரஷ்ய தொலை தொடர்பு நிறுவனம், தமது இணைய இணைப்பை வட கொரியா வரை நீடித்துள்ளது என்கிறார் அவர்.
அணு ஆயுதமும், பொருளாதாரமும்
சர்வதேச சமூகம், கிம்மின் அணு ஆயுத ஏவுகணைகள் குறித்து தேவைக்கு அதிகமாக தன் கவனத்தை செலுத்துகிறது. உண்மையில் நாம் அவர், பொருளாதாரம் குறித்து பேசுவதில்தான் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் யோன்செய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் டெலூரி.
பொருளாதார வளர்ச்சி குறித்து பேசும் போது, கிம் முட்டாள்தனமாகவெல்லாம் பேசுவதில்லை. கிழக்கு ஆசியாவில், ஏற்கெனவே பல சர்வாதிகாரிகள் இருந்திருக்கிறாகள். அவர்களின் தேசத்தின் பொருளாதாரத்தை அவர்கள் வளர்ச்சி பாதைக்கு மாற்றி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கொடூரமானவர்களாகவும் இருந்தனர் என்கிறார் அவர்
இது விவாதத்திற்குரிய பார்வை. ஆனால், நிராகரிக்க முடியாது.
சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள், கிம் அணு ஆயுத விரிவாக்கத்தில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, பொருளாதாரத்தில் மட்டும் கவனம் செலுத்துவதுதான், அவருடைய அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது.
அது, கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தையும் குறைக்கும்.
பிற செய்திகள்
- அணு ஆயுத செய்தி சர்ச்சை: தொலைக்காட்சி உரிமம் ரத்து செய்யப்படலாம் என மிரட்டும் ட்ரம்ப்
- தமிழக அரசு ஊழியர்களின் ஊதியம் இரண்டரை மடங்கு உயர்வு
- 18 வயதை எட்டாத `மனைவி'யுடனான பாலுறவு குற்றம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- டெங்கு காய்ச்சலுக்கு ஏற்ற மருத்துவம் எது? மோதிக்கொள்ளும் இணைய பயன்பாட்டாளர்கள்
- ரோஹிஞ்சா நெருக்கடி: அர்சா தீவிரவாதிகள் குறித்த உண்மைகளை தேடி ஒரு பயணம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












