விம்பிள்டன் நிலையத்தில் "பைபிள்" வாசிக்கப்பட்டதால் பீதியடைந்து ரயிலை விட்டு ஓடிய பயணிகள்
ரயிலில் பயணம் மேற்கொண்டிருந்தபோது, பீதியடைந்த பயணிகள், மக்கள் நிறைந்திருந்த ரயிலின் கதவுகளை உடைத்து திறந்து, தண்டவாளத்தின் மீது ஏறிய சம்பவம் லண்டனில் விம்பிள்டன் ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

பட மூலாதாரம், @CYCLINGBETTING
பிரிட்டன் நேரப்படி நேற்று காலை 8.30 மணிக்கு லண்டனின் தென் மேற்கிலுள்ள விம்பிள்டன் ரயில் நிலையத்தில், ஒருவர் பைபிள் வசனங்களை உரக்க வாசிக்க தொடங்கியபோது இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
"இறப்பு முடிவல்ல" என்று அந்த மனிதர் சொல்ல தொடங்கியபோது, பயணிகள் பீதியடைந்தனர் என்று பயணிகளில் ஒருவர் தெரிவித்தார்.
பயணிகள் தாங்களாகவே வெளியேறியதில் ரயில் மின்னிணைப்புகள் துண்டிக்கப்பட்டன என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்த தடத்திலான ரயில்கள் ஏறக்குறைய 12 மணிநேரம் பாதிப்புக்குள்ளாயின. ஆனால், இப்போது இயல்பாக இயங்க தொடங்கியுள்ளன.
இந்த ரயிலில் பயணித்த இயன் என்பவர் கூறுகையில், அந்த மனிதரின் பைபிள் வாசிப்பு குழப்பத்திற்கும், நெருசலுக்கும் வழிவகுத்தது என்றார்.
"அவர் மக்களை பீதியடையச் செய்ததால்", ஒருவர் அந்த மனிதரை நிறுத்த சொன்னார். பைபிள் வாசிப்பதை நிறுத்திய அந்த மனிதர் தலைகீழாக நின்றார் என்று அவர் கூறினார்.
இந்த ரயில் ஷிப்பெர்டன் மற்றும் லண்டன் வாட்டர்லூ இடையில் சென்று கொண்டிருந்தது.
இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்று பிரிட்டிஷ் போக்குவரத்து போலீஸ் தெரிவித்திருக்கிறது.
பயணிகளோ, ரயில் ஊழியர்களோ யாரும் காயமடையவில்லை என்று தெரிவித்த ரயில் வலையமைப்பின் செய்தி தொடர்பாளர், வாட்டர்லூவுக்கு உள்ளேயும், வெளியேயும் காலதாமதங்கள் தொடரலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












