You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இர்மா சூறாவளி: ஃபுளோரிடா மாகாண மேற்கு கரையில் கடும் பாதிப்பு
இர்மா சூறாவளியின் மையம் ஃபுளோரிடாவின் பெருநிலப்பரப்பை கடுமையாக தாக்கியுள்ளது.
சூறாவளி காற்றின் உயரம் 15 அடி உயரம் வரை இருக்கக்கூடும் என்று முன்னரே எச்சரிக்கைகள் விடப்பட்ட நிலையில், இந்த சூறாவளி ஃபுளோரிடா மாகாண மேற்கு கரையில் உள்ள நேப்பல்ஸ் பகுதிக்கு தெற்கே கடுமையான சேதங்களை உருவாக்கியுள்ளது.
ஃபுளோரிடாவின் மேற்கு கரையில் உள்ள மார்கோ தீவுகளில் இர்மா சூறாவளியின் மையம் தாக்கியுள்ளது.
இங்கு மணிக்கு 169 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியபோதும் இது இராண்டாம் நிலை புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஃபுளோரிடா மாநிலத்தில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மியாமி நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதுவரை இந்த சூறாவளி தொடர்பாக ஃபுளோரிடாவில் மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இர்மா சூறாவளி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கணிப்பால் புளோரிடா மாகாண கடற்கரை பகுதிகளில் தங்கியிருந்த கிட்டத்தட்ட 6.3 மில்லியன் மக்கள் வெளியேறுமாறு முன்னதாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால், மக்களை வெளியேறுமாறு கூறப்பட்ட இந்த உத்தரவு குறித்து சனிக்கிழமையன்று இம்மாநில ஆளுநர் தெரிவிக்கையில், நேரம் ஆகிவிட்டதால் எஞ்சியுள்ளவர்கள் தற்போது வெளியேற இயலாது என்று கூறினார்.
முன்னதாக, கடந்த வாரத்தில் கரீபியன் தீவுகளை கடுமையாக தாக்கி பாதிப்பு உண்டாக்கிய இர்மா சூறாவளியால் குறைந்தது 28 பேர் இறந்துள்ளனர்.
கியூபா, செயின்ட் மார்ட்டின் தீவுகள், டர்க்ஸ் மற்றும் காகோஸ் தீவுகள், பார்புடா தீவு, போர்டோ ரிகோ, பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள், அமெரிக்க வர்ஜின் தீவுகள், ஹைத்தி மற்றும் டோமினிக் குடியரசு ஆகிய பகுதிகளும் இந்த சூறாவளியால் பரவலாக பாதிக்கப்பட்டன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :