You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கத்தாரில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப கூடுதல் விமானங்கள்: அரசு நடவடிக்கை
கத்தாரில் இருந்து இந்தியா வரவிரும்பும் இந்தியர்களுக்காக, தோஹாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்க இரு விமான நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
அரசுக்கு சொந்தமான இந்திய விமான நிறுவனமான இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் தனியார் விமான போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் வரும் வியாழக்கிழமை முதல் இந்த கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாக அரசின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் பிராந்தியத்தில், கத்தார் நாடு ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதாகக் கூறி, செளதி அரேபியா மற்றும் எகிப்து உள்பட பல அரபு நாடுகள், கத்தாருடனான ராஜிய உறவுகளை துண்டித்துள்ளன.
கத்தாரில் உள்ள குடியேறிகளில் இந்தியர்கள்தான் மிகப்பெரிய குழுவாக இருக்கின்றனர்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் விமான போக்குவரத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கத்தாரிலிருந்து நாடு திரும்ப டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத இந்தியர்களை அனுமதிக்கும் வகையில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று சுஷ்மாவிற்கு அவர் உத்தரவாதம் அளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமான நிறுவனம் ஜூன் 25 முதல் ஜூலை 8 ஆம் தேதிவரை தென்னிந்திய நகரமான திருவனந்தபுரத்திலிருந்து தோஹாவிற்கும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மும்பை - தோஹா - மும்பை இடையிலும் விமானங்களை இயக்கும் என்று அரசின் அறிக்கை கூறுகிறது.
இதனிடையே, இந்த நடவடிக்கை, இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கை இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு பிரச்சினை இருப்பதாகவும் கூறி, இந்தியர்கள் யாரும் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஈத் பண்டிகையை முன்னிட்டுத்தான் கூடுதல் விமானங்களை கத்தாருக்கு இந்தியா அனுப்புகிறது. இதை, இந்தியர்களைத் திரும்ப அழைத்துவரும் நடவடிக்கையாகப் பார்க்கக் கூடாது. கத்தாரில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக உள்ளனர் என கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்