"ஒபாமாகேர்" திட்டம் முடிவுக்கு வருகிறது, டிரம்ப் வெற்றி கொண்டாட்டம்
முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா கொண்டு வந்த 'ஒபாமா கேர்' என்கிற திட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Reuters
குடியரசு கட்சியின் சுகாதார பாதுகாப்பு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையில் நூலிழையில் நிறைவேற்றப்பட்ட பின்னர் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
217 வாக்குகள் ஆதரவாகவும், 213 வாக்குகள் எதிராகவும் பதிவான நிலையில் இந்த மசோதா ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.
தனக்கு முன்னர் அதிபராக இருந்த பராக் ஒபாமாவின் சுகாதார பாதுகாப்பு திட்டத்தை நீக்கிவிட்டு, புதிய திட்டத்தை வகுப்பதாக அதிபர் தேர்தல் பரப்புரையின்போது டிரம்ப் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு முதல்படியாக இந்த வெற்றி பார்க்கப்படுகிறது.
இந்த அமெரிக்க சுகாதாரப் பாதுகாப்பு சட்டம் மில்லியன் கணக்கானோரை மருத்துவக் காப்பீடு இல்லாமல் ஆக்கும் என்று ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
நூலிழையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர், கேப்பிட்டோல் அரங்கைவிட்டு வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து. "உங்களை பார்த்து வெட்கமடைகிறோம்" என்று போராட்டக்காரர்கள் கூக்குரலிட்டனர்.

பட மூலாதாரம், Drew Angerer/Getty Images
ஆனால், வாக்கெடுப்பு நடந்த சிறிது நேரத்துக்குப் பின்னர், குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிபரின் வெள்ளை மாளிகையின் புல்வெளியில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆறு வாரங்களுக்கு முன்னர், போதுமான ஆதரவு இல்லாததால் இந்த சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்தை நிறைவேற்றும் முயற்சி இயலாத ஒன்று என்று தோன்றியது.
குடியரசு கட்சியிலுள்ள கன்சர்வேட்டிவ் மற்றும் மிதவாத உறுப்பினர்களை திருப்திப்படுத்தும் வகையில், பல திருத்தங்கள் இந்த மசோதாவில் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகக் கட்சியினர் என்ன சொல்கின்றனர்?
ஏற்றுகொள்ளப்பட்டுள்ள இந்த மசோதாவின் விளைவுகள் எதிர்மறையானதாக இருக்கும் என்று தெரிவிக்கும் ஜனநாயக கட்சியினர், இது ஏழைகளுக்கு மருத்துவ காப்பீட்டை இல்லாமல் ஆக்கும் என்கிறார்கள்.
மேலும், பணக்காரர்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும், தீவிர நோயாளிகளுக்கு சுகாதார வசதிகள் கிடைப்பதை கடினமாக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இந்த சுகாதாரப் பாதுகாப்பை பெற முடியாததால், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இறக்க நேரிடும் என்று செனட் அவை உறுப்பினர் பெர்னி சான்டர்ஸ் தெரிவித்திருக்கிறார்.
குடியரசுக் கட்சியினரின் இந்தத் திட்டத்தை இன்னும் ஒழுங்காக மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்களும், மருத்துவர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஒரு தசாப்தத்தில், 24 மில்லியன் அமெரிக்கர்கள் மருத்துவக் காப்பீட்டை இழப்பர் என்று கட்சி சார்பற்ற காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் மார்ச் மாதம் இந்த மசோதா பற்றி குறிப்பிட்டிருந்தது..
அதன் பின்னர் புற்றுநோய் மற்றும் அவசர நேரங்களில் நோயாளிகளின் வீட்டில் சிகிச்சை போன்ற முக்கிய மருத்துவ சேவைகள் இந்த மசோதாவில் சோக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு அதிபர் பராக் ஒபாமாவின் கீழ் "கட்டுப்படியாகும் மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின்" மூலம் 20 மில்லியன் அமெரிக்கர்கள் சுகாதாரப் பராமரிப்பிற்குள் கொண்டுவரப்பட்டனர்.
ஆனால், மத்திய அரசின் இயல்புக்கு அதிகமான செயல் இது என்றும், நோயாளிகளுக்கு மிக குறைவான தெரிவுகள் இருக்கும் நிலையில், அதிக தவணை கட்டணங்கள் இருப்பதாக குடியரசு கட்சியனரால் இந்த திட்டம் பார்க்கப்பட்டது.
இந்த செய்திகளையும் நீங்கள் விரும்பலாம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












