உயரம் 9.6 அடி: தினமும் வளரும் கானா இளைஞர் - இவர்தான் உலகின் உயரமான மனிதர்

- எழுதியவர், ஃபவர் நுன்னு
- பதவி, பிபிசி செய்திகள் பிட்ஜின்
உலகின் உயரமான மனிதராக வடக்கு கானாவை சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் உயரத்தை அளக்க போதிய வசதிகள் இல்லாததால், அவரின் சாதனையை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. உள்ளூரில் இருக்கும் மருத்துவமனையில், இவரின் உயரத்தை துல்லியமாக அளக்க உதவும் கருவிகள் இல்லாத காணப்படுகிறது.
"அளக்க டேப் இல்லை"

வடக்கு கானாவில் உள்ள ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு சமீபத்தில் வழக்கமான பரிசோதனைக்கு சென்று இருந்தார் 29 வயதான சுலைமானா அப்துல் சமத்.
ஆனால் இவரை இந்த வட்டாரத்தில் "அவுச்சி" என்ற பெயரிலேயே மக்கள் அழைக்கிறார்கள். மருத்துவ பரிசோதனையின் போது, இவரின் உயரம் 9 அடி 6 அங்குலம் (2.89 மீட்டர்) இருந்ததாக கண்டறியப்பட்டது. இதன் மூலம் உலகிலேயே உயரமான மனிதராக இவர் அறியப்படுகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஜிகாண்டிசம் என்ற நோய் தன்மையால் பாதிக்கப்பட்ட இந்த இளைஞருக்கு உயரமாக இருப்பதன் மூலம் சில சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனை நிவர்த்தி செய்ய மாதந்தோறும் சிகிச்சை மேற்கொண்டு வரும் அவுச்சியின் உயரத்தை அளக்க நீண்ட கம்பியின் அருகில் அவர் நிற்க வைக்கப்படுகிறார்.
அவரை பரிசோதித்த செவிலியர் அதிர்ச்சியுடன், "நீ அளவு எடுக்க பயன்படுத்தும் கம்பத்தை விட உயரமாக வளர்ந்து விட்டாய்," என்று அவுச்சியிடம் கூறினார்.
அவுச்சிக்கு இதை கேட்டு ஆச்சரியம் ஏற்படவில்லை, இது அவருக்கு வழக்கமான ஒன்று தான். ஏனெனில் அவர் வளர்வதை இன்னும் நிறுத்தவில்லை. ஆனால் மருத்துவமனை ஊழியர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் இதனை எதிர்பார்த்து இருக்கவில்லை.
உடனடியாக தனது சக ஊழியரை உதவிக்கு அழைக்க மருத்துவமனையில் இருந்த பிறரும் ஒன்று சேர்ந்து அவுச்சியின் உயரத்தை அளக்க ஆயத்தமானார்கள்.
புதிதாக ஒரு கம்பத்தை தேர்வு செய்து, அதன் அருகில் அவுச்சியை நிற்க வைத்து அவரின் உயரத்தை கணக்கிட முயற்சி செய்தனர்.
வளர்வதை நிறுத்தாத அவுச்சி

தனது உடல் வளர்கிறது என்பதை அவுச்சி 22 வயதாகும் போது முதன்முறையாக உணர்ந்து இருக்கிறார். பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின்னர் தனது கிராமத்தில் இருந்து வேலைக்காக கானாவின் தலைநகரான அக்ராவுக்கு சென்றார் அவுச்சி. அங்கு ஓர் இறைச்சிக் கடையில் வேலை பார்த்தவாறே ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியில் சேர்வதற்கான கட்டணத்தை சேமித்து வந்தார் அவுச்சி.
திடீரென ஒரு நாள் தூங்கி எழுந்த போது, தனது நாக்கின் நீளம் அதிகமாகி மூச்சு விட சிரமமாக இருப்பதை உணர்ந்த அவருக்கு அடுத்தடுத்த நாட்களில் பிரச்னை இன்னும் அதிகமானது. அவரின் மற்ற உடல் பாகங்களும் வளரத் தொடங்கின.
இதனையடுத்து மருத்துவரை அணுகிய அவுச்சிக்கு அப்போது தான் தெரிந்தது, மார்ஃபன் சிண்ட்ரோம் என்ற மரபணு கோளாறின் காரணமாக தனது உடல் பாகங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது என்பது.
இதன் விளைவாக அவரின் உடலில் உள்ள இணைப்பு திசுக்களில் பாதிப்பு ஏற்பட்டு வழக்கத்தை விட அதிகமாக அவரின் கால்கள் வளரத் தொடங்கின.
மூளையில் ஒரு அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் இதனை குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் புதிய வகையான நோயால் பாதிக்கப்பட்ட அவரின் மருத்துவ செலவுகளுக்கு தேவையான பணத்தை தர கானாவின் காப்பீடு நிறுவனங்கள் தயாராக இல்லை.
தினசரி வாழ்க்கை எப்படி?

நீண்ட கால்களுடன் இருப்பதால் அவுச்சியால் நீண்ட தூரம் நடக்க முடிவதில்லை. அதே போல தனது ஊரில் இருக்கும் பெரும்பாலான வீடுகளை உயரத்தை விட உயரமாக இருப்பதாக, அவனது வசதிக்காக நீண்ட தேடுதலுக்கு பிறகு சுவர்கள் உயரமாக உள்ள ஒரு வீட்டை கண்டுபிடித்தோம் என அவுச்சியின் சகோதரர் தெரிவித்தார்.
அவருக்கு காலுக்கு சரியான காலணி கிடைக்காத நிலையில், உள்ளூர் தொழிலாளி ஒருவரின் உதவியுடன் கார் டயர்களை பயன்படுத்தி பெரிய காலணியை செய்தோம் என அவுச்சியின் சகோதரர் கூறினார்.
ஓட்டுநர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்த அவுச்சிக்கு, அவரின் உயரம் காரணமாக காருக்குள் இருந்து அதை இயக்குவது கடினமானதாக அமைந்தது.
உள்ளூர் பிரபலமான அவுச்சி
ஓட்டுநர் ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேறாத நிலையில், மீண்டும் தனது சொந்த கிராமத்திற்கு திரும்பினார் அவுச்சி.
உள்ளூரில் இருந்தவாறே செல்போன் ரீசார்ஜ் செய்யும் தொழிலை அவுச்சி மேற்கொண்டு வருகிறார்.
அவரில் கிராமத்தில் இருக்கும் மற்ற நபர்களை விட அதிக உயரமாக இருந்தார் அவுச்சி. இதனால் அவரைக் காண ஏராளமான உள்ளூர் மக்கள் திரண்டு வந்திருந்தனர்.
தன்னை காண வரும் அனைவரையும் வரவேற்று, கை குலுக்கி, போட்டோவுக்கு போஸ் கொடுக்க அவுச்சி ஒரு நாளும் தவறியதில்லை. இதனால் அவர் வடக்கு கானா பகுதியில் உள்ளூர் பிரபலமாக மாறிப்போனார்.

அவுச்சிக்கும் பிறரை போல திருமணம் செய்து, குழந்தைகளுடன் வாழ வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், இப்போதைய சூழலில் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக நீளமாக வளரும் தனது காலில் ஏற்பட்டுள்ள தோல் பிரச்னையை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரி செய்ய பணத்தை சேமித்து வருகிறார்.
இளம் வயதில் கால்பந்து விளையாடி வந்த அவுச்சியால், தற்போது சிறிய தூரத்தை கூட நடந்து சென்று கடக்க முடியாத நிலை இருக்கிறது. இது குறித்து அவுச்சி கூறும் போது, "அல்லா என்னை இப்படி இருக்கவே படைத்துள்ளார். அதனால் உயரமாக இருப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை," என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













