You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வங்கதேசம்: மாணவர் போராட்டத்தில் வன்முறை - புகைப்படங்கள் கூறும் உண்மைகள்
வங்கதேசத்தில் அரசாங்க வேலைகளில் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
அரசு வேலைகளில் மூன்றில் ஒரு பங்கு 1971-இல் பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான நாட்டின் விடுதலை போரில் உயிரிழந்த படை வீரர்களின் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமானது என்று மாணவர்கள் வாதிடுகின்றனர். தகுதி அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.
பல்கலைக் கழக வளாகங்களில் அமைதியான முறையில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு தழுவிய ஆர்ப்பாட்டமாக உருமாறியுள்ளது.
வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டத்தின் தீவிரத்தை உணர்த்தும் புகைப்படங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
தலைநகர் டாக்காவில் உள்ள டாக்கா பல்கலைக்கழக பகுதியில் மாணவ, மாணவிகள் திரண்டு கடந்த வாரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசின் நடவடிக்கைக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மாணவர்கள் பலர் வங்கதேச தேசியக் கொடியை போன்ற தலைப் பட்டைகளை அணிந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் போராட்டத்தல் வன்முறை வெடித்ததால் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். டாக்காவில் ஆங்காங்கே ராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. வியாழன் (ஜூலை 18) அன்று வன்முறை உச்சகட்டத்தை அடைந்தது. அன்று குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். வெள்ளிக்கிழமை மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர்.
இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இணைய சேவைகளை முடக்கியுள்ளது. தொலைபேசி சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாக, டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் வெற்று சவப்பெட்டிகளுடன் நடத்தப்பட்ட அஞ்சலி கூட்டத்தில் மாணவர்கள். அந்த சவப்பெட்டிகளை மாணவர்கள் பேரணியாகவும் சுமந்து சென்றனர்.
வங்கதேசத்தில் சமீபத்திய நிகழ்வுகளின் விளைவாக, டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் சிட்டகாங், ராஜ்ஷாஹி, சில்ஹெட் உதவித் தூதரகங்கள், இந்திய குடிமக்கள் அங்கிருந்து பத்திரமாக தாயகம் திரும்புவதற்கு உதவி செய்து வருவதாக ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, இந்தியத் தூதரகம், இந்தியா-வங்கதேச சர்வதேச எல்லையில் உள்ள எல்லை கடக்கும் பகுதிகளில், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)