டி20 உலகக் கோப்பை: இந்தியா வென்றாலும் கவலைப்பட வைக்கும் சிக்கல்கள் என்னென்ன?

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது
    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மேற்கிந்தியத்தீவுகளுக்கு சூப்பர்-8 சுற்று ஆட்டங்கள் மாறிவிட்டதால் இனிமேல் டி20 போட்டிகளுக்கே உரிய ரன் குவிப்பை பார்க்கலாம் என்று கூறப்பட்டது. ஆடுகளங்கள் ரன்குவிப்புக்கு சாதகமாக இருப்பதுபோல் தெரிந்தாலும், பேட்டர்கள் பந்தைக் கவனித்து ஷாட்களை அடிக்க வேண்டியுள்ளது.

இதுதான் நேற்றை இந்தியா-ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் தாத்பரியமாக இருந்தது. அனுபவ பேட்டர்கள், தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் பொறுமையாக, நிதானமாக பேட் செய்யாமல் விக்கெட்டை இழந்தனர். ஆனால், சூர்யகுமார் யாதவ் நிதானமாக, அதேநேரம் எந்தப் பந்தை பெரிய ஷாட்டாக மாற்றலாம் எனத் தெரிந்து அடித்து ஹீரோவாக ஜொலித்தார்.

பிரிட்ஜ்டவுனில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-8 சுற்றில் குருப்- ஏபிரிவில் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றி மூலம், இந்திய அணி குரூப்-1 பிரிவில் 2 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டில் 2.350 என்று வலுவாக முதலிடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 13 சர்வதேச போட்டிகளை இந்திய அணி வென்று சாதனையை தக்கவைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் ரன்ரேட் மைனஸ் 2.350 என்று குறைவாக இருக்கிறது.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் நடந்தது என்ன?

இந்த ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் இருவரும்தான். அதிலும் புதிய பந்தில் பும்ராவின் பந்துவீச்சு துல்லியமாக இருந்ததை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்திய அணி 90 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, இந்திய அணியை தாங்கிப்பிடித்து பெரிய ஸ்கோருக்கு கொண்டுவந்தவர் சூர்யகுமார் யாதவ். 28 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த சூர்யகுமார் கணக்கில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். அணியைச் சரிவிலிருந்து மீட்ட சூர்யகுமார் ஆட்டநாயகனாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சூர்யகுமார்-ஹர்திக் பாண்டியா கூட்டணி நேற்றைய ஆட்டத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இருவரும் 5-ஆவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவும், பெரியஸ்கோருக்கும் வழிவகுத்தது. ஹர்திக் பாண்டியாவும் 2 சிக்ஸர்கள், 3பவுண்டரிகள் உள்பட 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சில் பும்ராவின் திறமை ஒவ்வொரு போட்டியிலும் மெருகேறிக் கொண்டே செல்கிறது. இந்த டி20 உலகக் கோப்பைத் தொடங்கியதிலிருந்து பும்ரா பந்துவீச்சில் எக்கானமி 3 ரன்களைக் கடக்கவில்லை. இந்த ஆட்டத்திலும் 4 ஓவர்கள் வீசிய பும்ரா 7 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறனை வெளிப்படுத்தினார். அதிலும் புதிய பந்தில் பும்ராவாவின் பந்துவீச்சை சமாளிக்க ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் கடும் சிரமப்பட்டு விக்கெட்டையும் இழந்தனர்.

அதேபோல அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட், சிராஜுக்குப் பதிலாக கொண்டுவரப்பட்ட குல்தீப் யாதவ் 4 ஓவர்களிலி் 32 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் என அற்புதமாகப் பந்துவீசினர். அக்ஸர் படேலும், ஜடேஜாவும் தங்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு துணை செய்தனர்.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சூர்யகுமார் 3வது வீரராக வழக்கமாகக் களமிறங்கிய நிலையில் இந்த உலகக் கோப்பைத் தொடரில் அவருக்கு 4வது இடம் தரப்பட்டது.

ரோகித் சர்மா கூறியது என்ன?

வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் “கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் இங்கு டி20 போட்டிகளை விளையாடியிருக்கிறோம் என்பதால், சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் திட்டமிட முடிந்தது. அதனால்தான் 180 ரன்களை எட்ட முடிந்தது.” என்றார்.

“பேட்டர்களின் பங்கு அசாத்தியமானது. எங்களிடம் உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால் ஸ்கோரை டிபெண்ட் செய்ய முடிந்தது, பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இக்கட்டான நேரத்தில் ஒவ்வொரு வீரரும் தங்களின் பங்களிப்பை அளித்தனர். ஸ்கை, ஹர்திக் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக இருந்தது. ஆட்டத்தை ஆழமாகக் கொண்டு செல்ல இருவரின் ஆட்டம் அவசியமானதாக இருந்தது. பும்ராவின் பந்துவீச்சு குறித்து நமக்குத் தெரியும். அவர் பந்துவீச்சில் என்ன செய்வார் என்பதும் தெரியும். சூழலையும், ஆடுகளத்தையும் சாதகமாக பயன்படுத்தி பந்துவீசக்கூடியவர். பொறுப்பெடுத்து தனது பங்களிப்பை பல ஆண்டுகளா அளித்து வருகிறார் பும்ரா. இந்த ஆடுகளத்தின் தன்மையைப்புரிந்து கொண்டுதான் 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் அடுத்த ஆட்டத்தில் இருந்தால், அதிகமான வேகப்பந்துவீச்சாளர்களுடன் வருவோம்” எனத் தெரிவித்தார்

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷித் கான் கோலியை பெரிய ஷாட்டுக்கு மாற்றும் வகையில் பந்துவீசி வீழ்த்தினார்

இந்தியாவைக் கவலைப்பட வைக்கும் சிக்கல்கள்

ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கணித்து ரோகித் சர்மா, கோலி பேட் செய்து கையைச் சுட்டுக்கொண்டனர். 2022 டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் கடந்த ஜனவரி மாதம் வரை சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாடவில்லை.

ரோஹித் சர்மா 13 பந்துகளில் 8 ரன்களுடன் பரூக்கி பந்துவீச்சில் பெரிய ஷாட்டுக்கு சென்று விக்கெட்டை இழந்தார். இன்றைய டி20 போட்டிகளில் பந்துவீச்சில் ஒவ்வொரு வீரரும் எவ்வாறு வேரியேஷன்களை கொண்டு வருகிறார்கள்.

145 கி.மீ வேகத்தில் பந்துவீசும் ஒரு பந்துவீச்சாளர் அடுத்த பந்தை அப்படியே வேகத்தைக் குறைத்து 110 கி.மீ வேகத்தில் வீசுகிறார். இதை கவனிக்காமல் விட்டதுதான் நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா செய்த தவறாகும்.

ஐபிஎல் தொடரில் பலமுறை லெக் ஸ்பின்னுக்கு கோலி ஆட்டமிழந்துள்ளார். இதை உணர்ந்த ரஷித் கான் தனது பந்துவீச்சில் கோலியை பெரிய ஷாட்டுக்கு மாற்றும் வகையில், ஆசையைத் தூண்டும் வகையில் பந்துவீசினார். இதை கவனிக்காத கோலி, சிக்ஸருக்கு முயன்று கேட்சாகினார்.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2022 டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் கடந்த ஜனவரி மாதம் வரை சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாடவில்லை

சூர்யகுமார் யாதவ் சிறப்பான பேட்டிங்

சூர்யகுமாரின் பேட்டிங் நேற்றைய ஆட்டத்தில் மாஸ்டர் கிளாஸாக இருந்தது. சூர்யகுமார் 3வது வீரராக வழக்கமாகக் களமிறங்கிய நிலையில் இந்த உலகக் கோப்பைத் தொடரில் அவருக்கு 4வது இடம் தரப்பட்டது. ஆனாலும், தனக்குரிய பணியை இந்தத் தொடரில் சிறப்பாகவே செய்து வருகிறார்.

சூர்யகுமார் ஒவ்வொரு போட்டியிலும் வித்தியாசமான, ஸ்பெஷல் ஷாட்களை ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆப்சைட் சென்ற பந்துகளை ஸ்வீபுக்கு மாற்றியது, ஃபுல்டாஸ் பந்தை ஸ்வீப்புக்கு மாற்றியது என எதிரணி பீல்டர்கள் கணிக்க முடியாத வகையில் ஷாட்களை விளையாடினார். அதாவது இடதுபுறம் பவுண்டரி எல்லை குறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்து பெரும்பாலான ஷாட்களை சூர்யாக இடதுபுறம் அடித்து ஸ்மார்ட் கிரிக்கெட்டை ஆடினார்.

சூர்யகுமார் அடித்த 3 சிக்ஸர்களில் ஒரு சிக்ஸரில் பந்து அரங்கத்தின் மேற்கூரையில் விழுந்தது. ஸ்லோவர் பந்துகளை எவ்வாறு கணித்து ஆட வேண்டும் என்பதற்கு பிரத்யேகப் பயிற்சி எடுத்த சூர்யா, நேற்று ஸ்லோவர் பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பந்துவீச்சு வேரியஷன்கள் சூர்யாவிடம் தோல்வி அடைந்தன.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பும்ராவின் பந்துவீச்சு துல்லியமாக இருந்ததை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன

ஆடுகளம் மந்தமாக இருந்தால், பந்து வரும் திசையை பேட்டர்கள் கணிப்பது சிரமம். இதற்கு நீண்டநேரம் களத்தில் இருந்து பந்தை கணித்தால்தான் ஆட முடியும். ஆனால், இதை சூர்யகுமார் வந்தவுடன் புரிந்து கொண்டு ஆடுகளத்துக்கு ஏற்றபடி ஆட்டத்தை மாற்றிக்கொண்டார்.

வழக்கமாக ஸ்விட்ச் ஹிட், ரிவர்ஸ் ஸ்வீப் போன்றவற்றை அதிகமாக ஆடக்கூடிய சூர்யா நேற்று பெரிதாக ஆடவில்லை.இந்த ஆட்டத்தில் 14 ரன்கள் மட்டுமே கீப்பருக்கு பின்னால் அடித்து சூர்யா சேர்த்தார். இதுபோன்று ஆடுவது சூர்யாவின் பேட்டிங்கில் குறைந்த சதவீதம் என்றாலும், ஆடுகளத்தின் மெதுவான தன்மை, பந்தின் வேகக் குறைவால் அதிகமான சக்தியை செலுத்திதான் இந்த ஷாட்களை ஆட முடியும் என்பதால் பெரியாக மெனக்கெடவில்லை.

ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்ட சூர்யா, அதை ஹர்திக் பாண்டியாவிடம் கூறி, அவர் அடித்த அதே ஷாட்களுக்கு அடிக்க மாற்றினார். இருவருமே பீல்டர்கள் கணிக்க முடியாத பகுதியில் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினர்.

ரன் சேர்ப்பதற்கு கோலி, ரோஹித், ரிஷப் பந்த், துபே ஆகியோர் சிரமப்பட்ட நிலையில், சூர்யகுமார் 27 பந்துகளில் அரைசதம் அடித்தது சகவீரர்களுக்கே வியப்பாக இருந்திருக்கலாம். ஆனால், கடைசி நேரத்தில் பரூக்கி வீசிய ஸ்லோவர் பந்துக்கு சூர்யா இரையாகினார்.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

பும்ரா சிறப்பான பந்துவீச்சு

புதிய பந்தில் பும்ராவின் பந்துவீச்சு வேகம் அற்புதமானது. புதிய பந்தில் பும்ரா பந்துவீசினாலே 75 சதவீதத்துக்கும் மேல் விக்கெட் வீழ்த்தும் சாதனையை டி20 போட்டியில் வைத்துள்ளார். அதை நேற்றைய ஆட்டத்திலும் பும்ரா நிரூபித்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ்(11), ஜசாய்(2) விக்கெட்டுகளை காலி செய்தார். இந்த டி20 உலகக் கோப்பையில் அதிகமான ரன் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் குர்பாஸ் விக்கெட்டை அனாசயமாக எடுத்தார் பும்ரா. குர்பாஸ் இறங்கி வந்ததும் பந்தை ஆஃப் சைடில் விலக்கி பும்ரா வீசவே, அதை அடிக்க முற்பட்டு ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்தார் குர்பாஸ். ஆடுகளத்தன் தன்மையை உடனடியாகக் கணித்து அதற்கு ஏற்றார்போல் பும்ரா பந்துவீசுவதால்தான் அனைத்து ஃபார்மெட்டுகளின் ராஜா என்று புகழப்படுகிறார். இந்த ஆட்டத்தில் பும்ரா 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

அனுபவமில்லாத ஆப்கானிஸ்தான்

ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து அதற்கு ஏற்றபடி பேட்டிங்கையும், பந்துவீச்சையும் உடனடியாக மாற்றாததன் விளைவுக்கு ஆப்கானிஸ்தான் நேற்று விலை கொடுத்தது. பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் முதல் நடுவரிசை வரை பெரிய ஷாட்களுக்குதான் பெரும்பாலும் முயன்றார்களே தவிர, களத்தில் நிலைத்திருக்க முயலவில்லை. இதனால்தான் ஆப்கானிஸ்தான் அணியில் ஓமர்சாய் தவிர, மற்ற எந்த பேட்டரும் 20 பந்துகளுக்கு மேல் சந்திக்கவில்லை.

பந்துவீச்சிலும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றார்போல் ரஷித் கான், பரூக்கி இருவர் மட்டுமே பந்துவீசினர். மற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து பந்துவீசவில்லை. அதிலும் குறிப்பாக நவீன் உல் ஹக் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. ரஷித் கான் தவிர அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)