யார் இந்த 9 குற்றவாளிகள்? - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தண்டனை பெற்றோரின் பின்னணி

    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பின், 9 குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை பல தரப்பினரும் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

அனைத்திந்திய மாதர் சங்கம் உள்ளிட்ட சில பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த தீர்ப்பு வந்ததும் இனிப்புகளைப் பரிமாறி தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர்.

வழக்கு பதியப்பட்ட 2019 ஆம் ஆண்டில் இந்த குற்றவாளிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டபோது, ஏராளமான தகவல்கள் பகிரப்பட்டன. தண்டனை பெற்றுள்ள 9 குற்றவாளிகள் யார், இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் என்ன? என்பது குறித்து காணலாம்.

முதல் குற்றவாளி

சபரி ராஜன் என்கிற ரிஸ்வந்த் (வயது 34). இவர் சிவில் இன்ஜினியர். பாதிக்கப்பட்ட பெண்களில் 4 பேர் தந்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் இவருக்கு ரூ.40 ஆயிரம் அபராதமும், 4 ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது குற்றவாளி

திருநாவுக்கரசு (வயது 36). இவர் பொள்ளாச்சி பகுதியில் பைனான்ஸ் கொடுத்து வந்துள்ளார். இவருடைய ஐஃபோனிலிருந்தே நுாற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை காவல்துறையினர் கைப்பற்றினர். இவருக்கு ரூ.30,500 அபராதமும், 5 ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது

மூன்றாவது குற்றவாளி

மூன்றாவது குற்றவாளியாக அடையாளம் காணப்படுபவர் சதீஷ் குமார் (வயது 35). இவர் துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு ரூ.18,500 அபராதமும், 3 ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.

நான்காவது குற்றவாளி

வசந்த் (வயது 34). இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு ரூ.13,500 அபராதமும், 2 ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது குற்றவாளி

மணி என்கிற மணிவண்ணன் (வயது 34). இவர், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு ரூ.18 ஆயிரம் அபராதமும், 4 ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆறாவது குற்றவாளி

பாபு (வயது 35). இவருக்கு ரூ.10,500 அபராதமும், ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஏழாவது குற்றவாளி

ஹேரோனிமோஸ் பால் என்கிற ஹேரோன் (வயது 34). இவர், அதிமுக சிறுபான்மையினர் அணியில் நிர்வாகியாக இருந்தார். வழக்குக்குப் பின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இவருக்கு ரூ.14 ஆயிரம் அபராதமும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எட்டாவது குற்றவாளி

அருள் ஆனந்தம் என்கிற அருள் (வயது 41). இவர், அதிமுக மாவட்ட மாணவரணி நிர்வாகியாக இருந்து வந்தார். வழக்கில் சேர்க்கப்பட்ட பின்பு, இவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இவருக்கு ரூ.5500 அபராதமும், ஒரு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது குற்றவாளி

அருண்குமார் (வயது 33). இவர் சிபிஐ வழக்கை எடுத்து விசாரித்தபின் இறுதியாக கைது செய்யப்பட்டவர். இவருக்கு ரூ.5500 அபராதமும், ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு