சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்

செயின் அணிந்திருந்த நபரை உள்ளே இழுந்த எம்ஆர்ஐ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் செல்வதற்கு முன்பாக நோயாளிகள் தங்கள் உடலில் உள்ள அணிகலன்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
    • எழுதியவர், மேடலின் ஹால்பர்ட்
    • பதவி, பிபிசி

அமெரிக்காவில் 9 கிலோ எடை கொண்ட செயினை சுமந்து கொண்டு எம்ஆர்ஐ அறைக்குச் சென்றபோது, அது உள்ளே இழுத்ததில் 61 வயது நபர் உயிரிழந்தார்.

நியூயார்க் நகரில் உள்ள நசாவ் என்ற இடத்தில் உள்ள எம்ஆர்ஐ சென்டரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

அதிகாரிகளின் அனுமதியின்று இவர் ஸ்கேனிங் அறைக்குள் நுழைந்ததாக நசாவ் கவுன்டி போலீஸார் கூறுகின்றனர்.

'எனக்கு ஸ்கேன் எடுக்கும்போது நான்தான் உதவிக்காக என் கணவரை உள்ளே அழைத்தேன்' என உயிரிழந்தவரின் மனைவி கூறுகிறார்.

மேலும் 'உள்ளே நுழைந்ததும் அவரை இந்தக் கருவி இழுத்துவிட்டது. சட்டென்று இயந்திரம் மீது மோதினார். அங்கிருந்த தொழில்நுட்ப வல்லுநர் விரைந்து வந்து அவரை காப்பாற்ற முயன்றார். இயந்திரத்தை அணைக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேன்' என மனைவி ஜோன்ஸ் தெரிவித்தார்.

எம்ஆர்ஐ இயந்திரம் அவரை உள்ளே இழுத்தது எப்படி?

செயின் அணிந்திருந்த நபரை உள்ளே இழுந்த எம்ஆர்ஐ

பட மூலாதாரம், Getty Images

பொதுவாக இந்த இயந்திரம் துல்லியமாக ஸ்கேன் செய்வதற்காக சக்திவாய்ந்த காந்த ஈர்ப்புகளை கொண்டிருக்கும்.

அதனால்தான் இந்த அறைக்குள் செல்வதற்கு முன்பாக நோயாளிகள் தங்கள் உடலில் உள்ள அணிகலன்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

உயிரிழந்த நபர் உடற்பயிற்சிக்கு பயன்படும் பெரிய உலோகச் சங்கிலியை உடலுடன் இணைத்திருந்ததால் இயந்திரத்தின் உள்ளே இழுக்கப்பட்டுள்ளார் என நசாவ் கவுன்டி போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

போலீசார் இவரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் பெயர் கெய்த் என மனைவி ஜோன்ஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

"அவர் எனக்கு குட்-பை சொன்னார். பின் அப்படியே உருக்குலைந்துவிட்டார்" என மனைவி வேதனை தெரிவிக்கிறார்.

"முழங்காலில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்காக சென்றபோது, எனது கணவரை நான்தான் உதவிக்கு உள்ளே அழைத்தேன். அவர் 9 கிலோ எடையுள்ள சங்கிலியை அணிந்திருந்தார். அவர் உள்ளே நுழைந்ததும் இயந்திரம் அவரை உள்ளே இழுத்துக்கொண்டது. அவர் சட்டென்று இயந்திரத்தின் மீது மோதினார். அங்கிருந்த தொழில்நுட்ப வல்லுநர் அவரை மீட்க முயற்சித்தார். 'மெஷினை அணையுங்கள், 911-க்கு போன் செய்யுங்கள்' எனக் கதறினேன்" என சம்பவத்தை நேரில் பார்த்த ஜோன்ஸ் விவரிக்கிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இது குறித்து மேலும் அறிய, வல்லுநர்களை தொடர்புகொண்டது பிபிசி.

எம்ஆர்ஐ இயந்திரத்தில் உள்ள சக்தி வாய்ந்த காந்தம் சாவி, செல்போன் என எந்த அளவில் உள்ள பொருட்களையும் எளதில் உள்ளே இழுக்கக் கூடியதாகும். இது இயந்திரத்தை பாதிக்கும் அல்லது நோயாளிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் என்கிறது அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்.

இதற்கு முன்பு 2001ம் ஆண்டு, எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும்போது 6 வயது சிறுவன் உயிரிழந்தார். எம்ஆர்ஐ இயந்திரத்தின் சக்திவாய்ந்த காந்த ஈர்ப்பு, ஆக்ஸிஜன் டேங்கை அறையில் அங்குமிங்கும் இழுத்தது. ஆக்ஸிஜன் டேங்க் அச்சிறுவன் தலையில் தாக்கியதில் உயிரிழந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு